ஒரே குடும்பத்தில் 3 பெண் போலிசார்! முதல்வர் மற்றும் அமைச்சர் வாழ்த்து!

 கு.அசோக்,

   மகளிர் தினத்தை போற்றும் வகையில் ஒரே குடும்பத்தில் மூன்று பெண்கள் போலீஸ் பணியில் சேர்ந்ததற்கு பெருமை சேர்க்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் அந்த பெண்களின் தந்தையிடம்  போனில்  வாழ்த்து கூறினார் , அதைத்தொடர்ந்து கைத்தறி துறை அமைச்சர் காந்தியும் நேரில் வாழ்த்து தெரிவித்தார்.

  இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த கீழ் ஆவதம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி வெங்கடேசன். இவரது மனைவி ஷகிலா. இவர்களுக்கு மூன்று பெண்கள் மற்றும் ஒரு ஆண் என மொத்தம் நான் பிள்ளைகள் உள்ளனர்.

  கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் ஷகிலா உயிரிழந்தார்.

  அதைத் தொடர்ந்து தனது மகள்களான ப்ரீத்தி (28),   வைஷ்ணவி (26),  நிரஞ்சனி (22)  மற்றும் மகன் கார்த்திக் ஆகியோரை வெங்கடேசன் தன் பராமரிப்பில் வளர்த்து வந்தார்.

 இந்நிலையில் வெங்கடேசனின் இளைய மகள் நிரஞ்சனி போலீஸ் எழுத்து தேர்வில் கலந்து கொண்டார் . நான்காவது  முறையாக போலீசாக தேர்வு பெற்றார்.அதேபோன்று அவரது 2 வது அக்கா வைஷ்ணவி மூன்று முறை போலீஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்றார் . அவரது மூத்த அக்காள் ப்ரீத்தி முதல் முறை தேர்வு எழுதி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

  இதில் ப்ரீத்திக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் போலீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றது  குறிப்பிடத்தக்கது.

   அதேநேரம் சகோதரிகள் மூன்று பேரும் ஒரே ஆண்டில் போலீசாக தேர்வு பெற்றது  குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.

   தன்னுடைய விடாத முயற்சியில்  ஒரே நேரத்தில் மூன்று பேரையும் போலீஸ் பணியில் சேர்வதற்கு உந்து சக்தியாக இருந்த வெங்கடேசனை அந்த ஊர் மக்கள் பாராட்டி வந்தனர் .

    இந்நிலையில் நேற்று முதல்வர் ஸ்டாலின் வெங்கடேசன் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசினார்.  அப்போது முதல்வர், வாழ்த்துக்களை தெரிவித்து, உங்களை அமைச்சர் மற்றும் எம்பி நேரில் வந்து சந்தித்து நன்றி கூறுவார்கள் என்றார்.

 அதைத் தொடர்ந்து கைத்தறித்துறை அமைச்சர் காந்தி, அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் , மாவட்ட ஆட்சியர் வளர்மதி மற்றும் அதிகாரிகள் வெங்கடேசன் வீட்டுக்கு நேரில் வந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும் உதவித்தொகையும் வழங்கினர்.

 அதைத்தொடர்ந்து அமைச்சர் காந்தி வெங்கடேசனிடம் தங்களுடைய மூன்று மகள்களையும் போலீசில் சேர்த்துள்ளீர்கள்.  மகளிர் தினத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் போனில் உங்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் . இது எவ்வளவு பெரிய விஷயம்.  உங்களுக்கு எங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.