குவாட்டர் வாங்கினால் கூட பில் கொடுக்கனுமாம்!

ஜே. அருண் ஹென்றிக்ஸ்,
இனி டாஸ்மாக்கில் குவாட்டர் சரக்கு வாங்கினால் கூட அதற்கு பில் கொடுக்க வேண்டும் என்று அமைச்சர் முத்துசாமி டாஸ்மாக் ஊழியர்களுக்கு கூறியிருக்கிறார்.
டாஸ்மாக் கடைகளில் விலைக்கு மேல் 10 ரூபாய் வாங்குவது தொடர்ந்து வரும் நிலையில், தமிழக மதுவிலக்குத் துறை அமைச்சர் முத்துசாமி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது, மது வாங்குவோருக்கு பில் கட்டாயம் கொடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகமாக வாங்கும் விவகாரம் அரசியல் புதலை கிளப்பியது நினைவிருக்கலாம். "அப்போதைய மதுவிலக்குத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதன் பேரிலேயே தாங்கள் 10 ரூபாய் கூடுதலாக வாங்குவதாகவும், இந்தத் தொகை செந்தில் பாலாஜிக்கு செல்வதாகவும் பல டாஸ்மாக் பணியாளர்கள் கூறியிருந்தனர்.
இதையடுத்து, பல டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் மது வாங்கும் போது, கூடுதலாக 10 ரூபாய் கேட்கப்பட்டால் தகராறில் ஈடுபட்டு வீடியோ வெளியிடுவதும் வாடிக்கையானது. இந்த விஷயத்தில் மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதை உணர்ந்த தமிழக அரசு, எந்த டாஸ்மாக் கடையிலும் பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகமாக வாங்கக் கூடாது என்று உத்தரவிட்டது. ஆனாலும் எக்ஸ்ட்ரா வசூல் இருந்துக் கொண்டிருந்தது.
இந்நிலையில் புதிதாக பதவியேற்ற மதுவிலக்குத் துறை அமைச்சர் முத்துசாமியும், இந்த விவகாரத்தில் எச்சரிக்கை விடுத்தார். தவறு செய்யும் டாஸ்மாக் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இருந்தாலும் பல டாஸ்மாக் பணியாளர்கள் வசூலை விட்டபாடில்லை.இந்நிலையில், இதுகுறித்து கோவையில் நிருபர்களிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி, "டாஸ்மாக் கடைகளில் பில் போடும் இயந்திரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. சில கடைகளுக்கு அந்த இயந்திரம் கொடுக்க வேண்டியுள்ளது. அந்த இயந்திரம் கொடுக்கும் வேலை ஓரிரு மாதங்களில் முடிவடைந்துவிடும். அதன் பிறகு, யாருக்கு மது பாட்டில்கள் விற்றாலும் கட்டாயம் பில் கொடுக்கப்பட வேண்டும். பில்லில் இருப்பதை விட கூடுதலாக பணம் வாங்கினால் கடும் நடவடிக்கை இருக்கும்" என்று சொன்னார்.
பார்கலாம் அமைச்சர் பேச்சுக்கு டாஸ்மாக் ஊழியர்கள் செவிசாய்கிறார்களா என்று?