பாவம் வேளச்சேரி ஏரி! தமிழக அரசு கண்டிப்பு காட்டுமா?

ம.பா.கெஜராஜ்,
சென்னையில் 265 ஏக்கர் பரப்பளவில் இருந்த வேளச்சேரி ஏரி தற்போது வெறும் 55 ஏக்கர் ஆக குறைந்துவிட்டது. அதற்கு காரணம் ஆக்கிரமிப்பு.
மழைகால வெள்ளத்தின் போது சென்னையில் முதலில் சிக்கும் நகரம் வேளச்சேரி தான். மிக அழகிய கிராமமாக இருந்த இந்த கிராமத்தையும், அதன் மிகப்பெரிய நீர் வளமான ஏரியையும் பல பில்டர்கள் கூறு போட்டு அண்ணாந்து பார்க்கும் கட்டிடங்களை நாசமாக்கிவிட்டனர்.
பொது ஜனங்களும் போட்டி போட்டிக்கொண்டு அபார்ட்மென்ட்ஸ்களை வாங்கி போட வேண்டியது, மழை காலத்தில் அரசு சரியில்லை என்று குறைகூறுவது இது வாடிக்கையாக நாம் பார்த்து வரும் காட்சிகள் தான்.
இன்னும் சொல்லப்போனால் வேளச்சேரியில் லேக் ஏரியா என்றே ஒரு பகுதியை குடியிருப்புகளாக்கி ஆக்கிரமித்திருக்கிறார்கள்.
இதனால் ஏகப்பட்ட சிக்கல். இந்நிலையில் தான் வேளச்சேரியில் மிச்சம் மீதியிருக்கும் ஏரியை பராமரிப்பதற்காக மாநகராட்சி சார்பில் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சுற்றிலும் அழகுப்படுத்தி பொதுமக்கள் நேரம் செலவிடும் வகையிலும், குழந்தைகளுக்கான பூங்கா சில கட்டமைப்புகளை ஏற்படுத்த திட்டமிடப்பட்டது.
ஏற்கனவே தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேளச்சேரி பகுதி குடியிருப்புவாசிகள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரிக்கையில், ஒவ்வொரு பருவமழையின் போதும் அதிகப்படியான மழைநீர் என்னவாகிறது என்று தமிழக அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியது.
அதற்கு, கிண்டி தேசிய பூங்கா, ஐஐடி மெட்ராஸ் ஆகியவற்றில் இருந்து கால்வாய் வழியாக வேளச்சேரி ஏரிக்கு அதிகப்படியான மழைநீர் வந்து சேரும். பின்னர் சதுப்பு நிலம், ஒக்கியம் மடுவு, பக்கிங்ஹாம் கால்வாய் ஆகியவற்றின் வழியாக வங்கக் கடலை சென்றடையும் என்று அரசு சார்பாக பதில் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் கிண்டியில் உள்ள மெட்ராஸ் ரேஸ் கிளப்பில் உள்ள நிலத்தில் புதிய ஏரியை கட்டமைக்கலாம். இல்லையெனில் வேளச்சேரி ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றலாம் என்று தமிழக அரசுக்கு தீர்ப்பாயம் வழிகாட்டியிருக்கிறது.
இதில் சிக்கல் என்னவென்றால் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள், குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள், எல்காட் கட்டிடங்கள், இதர குடியிருப்பு திட்டங்கள் போன்றவற்றால் வேளச்சேரி ஏரி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இது தென்சென்னை பகுதியில் அடிக்கடி வெள்ள பாதிப்புகள் ஏற்பட காரணமாக அமைந்துள்ளது.
எனவே வேளச்சேரி ஏரியை மீட்டெடுக்க அரசு தன்னுடைய திட்டங்களிலேயே பல்வேறு மாற்றங்களை செய்ய வேண்டியுள்ளது.
அந்த வகையில், வேளச்சேரி ஏரியில் மேற்கொள்ளப்படும் புதிய திட்டம் குறித்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு எடுத்துரைத்தது. அதாவது, 23.5 கோடி ரூபாய் மதிப்பில் ஏரி புதுப்பிக்கப்படும். அதுமட்டுமின்றி ஏரியை ஆழப்படுத்த முடிவு செய்துள்ளோம். இதன்மூலம் 50 சதவீத அளவிற்கு கூடுதலாக தண்ணீரை சேமித்து வைக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது சக்ஸஸ் ஆவதற்கு வாய்ப்பே கிடையாது. அரசாங்க சம்பளம் பெறும் பொறியாளர்கள் இப்படி எல்லாம் அரசுக்கு ஐடியா கொடுத்து இதிலும் குஷியாக முயல்கிறார்கள் என்று தான் இதைப் பார்க்க முடிகிறது.
மேலும் தமிழகத்தில் உள்ள ஏரிகளை சீரமைக்க தமிழக அரசு ரூ.500/- கோடி செலவிடும் என்று அறிவித்திருப்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.