பெங்களூருவாசிகளை விட்டு விலகும் போக்குவரத்து நெரிசல்! பர்பிள் மெட்ரோ இன்று தொடக்கம்!!

எஸ்.செல்வராஜ்,
இன்று, திங்கள் கிழமை முதல் பெங்களூர் மக்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த, பர்பிள் வழித்தட மெட்ரோ வழித்தடம் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. இதனால் காலையும், மாலையும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்த பெங்களூர்வாசிகளுக்கு இனி அந்த தொல்லை இல்லை.
பெங்களூர் போக்குவரத்து நெரிசலுக்கும் பெயர் பெற்றது. குறிப்பாக, காலை அலுவலகம் செல்லும் நேரமான 9 மணி முதல் 11 மணி வரையிலும், மாலையில் அலுவலகம் விடும் நேரமாக 5 மணி முதல் 8 மணி வரையிலும் அனைத்து சாலைகளும் வாகன நெரிசல் அதிகம் இருக்கும்.
அதிலிருந்து இருந்து மக்களை மீட்பதற்காக அங்கு தற்போது பல வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று கொண்டிருக்கின்றன. பெங்களூரை பொறுத்தவரை, பர்பிள் லைன், க்ரீன் லைன் என இரண்டு வகையான வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. அடுத்தகட்டமாக, மஞ்சள், பிங்க், ப்ளூ என மூன்று வழித்தடங்களில் மெட்ரோ ரயில்களை இயக்கும் திட்டத்தை அரசு செயல்படுத்த உள்ளது.
அப்படியிருக்க பர்பிள் லைன் தடத்தில் இரண்டு முக்கிய பகுதிகளை இணைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. கே.ஆர்.புரம் முதல் கடுகோடி (ஒயிட்ஃபீல்டு) வரையிலான வழித்தடத்தை பையப்பனஹள்ளி பகுதியுடன் இணைக்கும் திட்டம் நடந்து வந்தது.
அதேபோல, கெங்கேரி முதல் சல்லகட்டா வரை மெட்ரோ ரயில் வழித்தடத்தை நீட்டிக்கும் பணியும் நடைபெற்று வந்தன. ஆனால், இந்தப் பணிகளில் இடையில் ஸ்லோ ஆனதால் பெங்களூர்வாசிகள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
அப்படியிருக்க தற்போது மேற்குறிப்பிட்ட இரண்டு வழித்தட பணிகளும் முடிவடைந்து, இன்று முதல் புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதாக பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் அறிவித்துள்ளது.
இதன் மூலம் 43 கிலோமீட்டர் தூரத்திற்கு முழு நீள பர்பிள் லைன் மெட்ரோ பயன்பாட்டிற்கு வந்திருக்கிறது. எனவே, ஒயிட்ஃபீல்டு மற்றும் சுற்றுப்பகுதிகளில் கணிசமான அளவு போக்குவரத்து நெரிசல் குறையும். இதனால் ஒயிட்ஃபீல்டு (கடுகோடி) ஸ்டேஷனில் இருந்து படண்டூர் அக்ரஹாரா ஸ்டேஷனை வெறும் 10 நிமிடங்களில் அடைந்து விடலாம். அதேபோல, படண்டூர் அக்ரஹாரா ஸ்டேஷனில் இருந்து மைசூர் ரோடு ஸ்டேஷனை 5 நிமிடங்களில் அடைந்து விடலாம். நடபிரபு கெம்பேகவுடாவில் இருந்து சல்லகட்டாவுக்கு 10 நிமிடத்தில் சென்றுவிடலாம். மேலும், மைசூர் ரோடு ஸ்டேஷனில் இருந்து சல்லகட்டாவுக்கு 10 நிமிடத்தில் சென்றுவிடலாம் என பெங்களூர் மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதனால் பெங்களூரு வாசிகள் நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளார்கள்.