டோல்கேட் கட்டணம் 10 சதவீதம் உயருகிறது!

ம.பா.கெஜராஜ்,
நாடு முழுவதும் 850-க்கும் மேற்பட்ட டோல்கேட்டுகள் உள்ளன. அவற்றில் சுமார் 600 டோல்கேட்டுகளில் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
அப்படிப்பட்ட ஆண்டுக்கு ஒருமுறை டோல்கேட்டு கட்டணங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் நாடு முழுவதும் உள்ள டோல்கேட்டுகளின் கட்டணத்தை 5 முதல் 10 சதவீதம் உயர்த்த தேசிய நெடுஞ்சாலைகள் திட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
அதை மையப்படுத்தி ஏப்ரல் மாதம் 1-ந்தேதி முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள 55 சுங்கச்சாவடிகளில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக தகவல்கள் சொல்கின்றன.
இந்த கட்டண உயர்வு மூலம் ஒரு காருக்கு ரூ.5 முதல் ரூ.15 வரை கட்டணம் உயரும் என தெரிகிறது. இதன்மூலம் சென்னையில் இருந்து ஆந்திரா, கர்நாடகா, மதுரை, கோவை போன்ற இடங்களுக்கு கார் போன்ற வாகனங்களில் பயணம் மேற்கொள்ளும்போது கூடுதல் செலவு ஏற்படும்
சென்னையை பொறுத்தமட்டில் புறநகர் பகுதியில் உள்ள பரணூர், வானகரம், சூரப்பட்டு, செங்குன்றம், பட்டறை பெரும்புதூர் உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது.
இந்த கட்டண உயர்வால் லாரி வாடகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் தனியார் பஸ்களின் கட்டணமும் உயரும் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் உள்ளது.
இருந்த போதும் இந்த கட்டண உயர்வு குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தலைமை அலுவலகத்தில் இருந்து இதுவரை அதிகாரபூர்வ தகவல் ஏதும் வரவில்லை.
அதே வேளையில் ஆண்டுதோறும் உயர்த்தப்படும் கட்டண உயர்வு குறித்து அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் கூறுகிறார்கள்.