செல்போன் டவர் அளவுக்கு உயர்ந்த கட்டணங்கள்!

பா.ரமேஷ் ஆனந்தராஜ்,
செல்போன் நெடொர்க் நிறுவனங்கள் போட்டிப்போட்டு கட்டணத்தை உயர்த்தும் நிலையில் அந்த போட்டியில் ஜியோவும் கட்டணத்தை உயர்த்தியிருக்கிறது.
பார்தி ஏர்டெல், வோடபோன் -ஐடியா ஆகிய நிறுவனங்களை தொடர்ந்து தற்போது ஜியோவும் தனது கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான பார்தி ஏர்டெல் தனது பிரீபெய்டு திட்டங்களின் விலையை 20 முதல் 25 சதவீதம் வரை அதிரடியாக உயர்த்தியது.
நவம்பர் 26ம் தேதி முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து வோடபோன் ஐடியா நிறுவனமும் 20 முதல் 25 சதவீதம் அளவிற்கு பிரீபெய்டு கட்டணங்களை உயர்த்தியது.
இந்நிறுவனங்களின் 28 நாட்களுக்கான குறைந்தபட்ச ரீசார்ஜ் கட்டணம் 79 ரூபாயில் இருந்து, 99 ரூபாயாக அதிகரித்துள்ளது. அதேபோல், 'அன்லிமிடெட்' அழைப்புகள் குறித்த திட்டங்களிலும் 20 முதல் 23 சதவீதம் அளவுக்கு கட்டணம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ஏர்டெல், வோடபோன் - ஐடியா ஆகிய நிறுவனங்களை தொடர்ந்து தற்போது ஜியோவும் தனது கட்டணத்தை உயர்த்தியுள்ளது. எனினும் மற்ற இரு நிறுவனங்களின் கட்டணத்துடன் ஒப்பிடுகையில் ஜியோவின் கட்டணம் குறைவாகவே உள்ளது.
ஜியோ போன்களில் குறைந்தபட்ச கட்டணமாக இருந்த ரூ.75 திட்டம் ரூ.91 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், 'அன்லிமிடெட்' திட்டங்களில் குறைந்தபட்ச கட்டணமான ரூ.129 (28 நாட்கள்) என்பது ரூ.155 ஆக அதிகரித்துள்ளது. ஜியோவின் கட்டண உயர்வு டிசம்பர் 1-ம் தேதி முதல் அமலாகிறது.