அதானி குழுமம் அமைக்க உள்ள அடுக்கு மாடிகள்! மும்பை தாராவி குடிசைவாழ் மக்களை அப்புறப்படுத்த திட்டமா?

அதானி குழுமம் அமைக்க உள்ள அடுக்கு மாடிகள்! மும்பை தாராவி குடிசைவாழ் மக்களை அப்புறப்படுத்த திட்டமா?

ம.பா.கெஜராஜ், 

 தாராவியில் குடிசைகளை அகற்றிவிட்டு, அடுக்குமாடி வீடுகள் கட்டித்தரப்படும் என்று மகாராஷ்டிரா அரசு தற்போது மும்முரம் காட்டி வருகிறது. எனவே மும்பை தாராவியில் உள்ள தமிழ் மக்களை அம்மாநில அரசு அகற்ற பார்ப்பதாக அச்சம் நிலவுகிறது. இந்நிலையில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கான ஒப்பந்தம் அதானி குழுமத்துடன் போடப்பட்டிருக்கிறது.

  இது பற்றின விவரம் வருமாறு,

 ஆசியாவிலேயே மிகப்பெரிய குடிசைப் பகுதியாக கருதப்படும் தாராவி மாகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ளது.  மும்பை முழுவதும் நவீனமான அடுக்குமாடி குடியிருப்புகள், உயர்ந்த கட்டிடங்கள் உள்ள நிலையில் அதன் மையமான தாராவி முழுவதும் சுமார் 259 ஹெக்டேர் பரப்பரளவில் குடிசைகளே அமைந்துள்ளன.

   சுமார் 1 லட்சம் குடிசைகள் நெருக்கடிகளுக்கு மத்தியில் 58,000 குடும்பங்களைச் சேர்ந்த 6 லட்சத்திற்கு அதிகமான பொதுமக்கள் அங்கு வசித்து வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் நம் தமிழகத்தில் இருந்து சென்று அங்கேயே செட்டில் ஆனவர்கள். இங்கு 3000 சிறு சிறு தொழில் கூடங்களும் இயங்கி வருகின்றன.    

  இந்நிலையில் தாராவியில் உள்ள குடிசை வீடுகளை நவீனமாக மாற்றுவதற்கு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு அரசாங்கங்கள் முயற்சிகள் மேற்கொண்டன. ஆனால்  அப்பகுதி மக்களின் எதிர்ப்பால் அந்த திட்டத்தை செயல்ப்னடுத்த இயலவில்லை.

  இதனிடையே கடந்த 2022ஆம் ஆண்டு தாராவி மறுசீரமைப்பு திட்டம் தொடர்பாக டெண்டர் விடப்பட்டது. அதில் உலகின் முன்னணி நிறுவனங்களை முறியடித்து 5060 கோடி ரூபாய்க்கு அதானி குழுமம் ஏலத்தை எடுத்தது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் அதானியிடம் தாராவி மறுசீரமைப்புத் திட்டம் மகாராஷ்டிரா அரசால் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.

  தாராவியில் வசித்த மக்களுக்கு ரயில்வே இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி 350 சதுர அடியில் குடியிருப்பு வழங்குவது தாராவி மறுசீரமைப்பு திட்டத்தின் முக்கிய பணியாக கருதப்பட்டாலும்தாராவியில் உள்ள குடிசைகள் அனைத்தையும் ஒழித்துவிட்டு அங்கு நவீன வணிக வளாகங்கள், அலுவலகங்கள், விளையாட்டு அரங்குகள் உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளது. 

   இதற்கான கான்டிராக்டை அதானி குழுமம் எடுத்திருந்தாலும், உலகின் மிக உயரமான புகழ்பெற்ற கட்டடங்களை வடிவமைத்த மிகச்சிறந்த கட்டிட வடிவமைப்பாளரான ஹபீஸ் கான்ட்ராக்டர் தாராவி மறுசீரமைப்பு திட்டத்தில் அதானி குழுமத்துடன் இணைந்துள்ளார். 

    வடகிழக்கு மும்பையில் உள்ள ஹிரானந்தனி கார்டன்ஸ், நவி மும்பையில் உள்ள டி.ஒய் பாட்டீல் மைதானம், புனேவில் உள்ள இன்ஃபோசிஸ் வளாகம், குருகிராமில் உள்ள டி.எல்.எப் சைபர் சிட்டி, துபாயில் உள்ள மிகப்பெரிய அடுக்குமாடி குடியிருப்பான மெரினா 23 மற்றும் கொல்கத்தாவிலுள்ள மிக உயரமான தி 42 கட்டடத்தையும் ஹபீஸ் காண்ட்ராக்டர்தான் வடிவமைத்துள்ளார்.

   இதுதொடர்பாக ஹபீஸ் கான்ட்ராக்டர் அளித்துள்ள பேட்டியில், ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் தனது வீட்டில் கழிப்பறை மற்றும் குளியலறை இருக்க வேண்டும். மழைக்கால இரவில் நிம்மதியாக தூங்குவதற்கு கூரை இருக்க வேண்டும். இதுதான் நம் நாட்டுக்கு தேவை. அதானி குழுமம் என்னை அழைத்து தாராவி மறுசீரமைப்பு திட்ட வேலையை கொடுத்தது மகிழ்ச்சியாக இருந்தது. தாராவியில் மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்பதில் நான் எப்போதும் விருப்பமாக இருந்தேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

  அப்படியிருக்க பரம்பரை பரம்பரையாக தாராவியில் வசித்து வரும் மக்களுக்கு அதே இடத்தில் குடியிருப்புகள் அமைத்துக் கொடுக்கப்படுமா? அதுவரை அவர்கள் எங்கு தங்க வைக்கப்படுவார்கள்? அல்லது தமிழர்களை அங்கிருந்து விரட்டி விடுவார்களா என்றெல்லாம் கேள்விகள் உள்ளன.