இளம் விவசாயி மரணம் கொலை வழக்காக மாற்றப்பட்டது!

இளம் விவசாயி மரணம் கொலை வழக்காக மாற்றப்பட்டது!

 டி.இ.முகமது,

  விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தின் போது, அதை தடுக்கும் விதமாக  கடந்த 21-ந்தேதி பஞ்சாப்- அரியானா எல்லை கனாரி பகுதியில் போலிசாரால் தடுப்புகள் அமைக்கப்பட்டது. அதைத் தாண்டி விவசாயிகள் டெல்லி நோக்கி புறப்பட முயன்றனர். அப்போது பஞ்சாப் எல்லைக்குள் புகுந்து அரியானா போலீசார் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தினர்.

 அப்போது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் சுப்கரண் சிங் என்ற 21 வயது இளம் விவசாயி கொல்லப்பட்டார்.   

 அரியானாவின், சிந்து மாவட்டத்தில் உள்ள கார்கி என்ற இடத்தில் சம்பவம் நடைபெற்றதாக கொல்லப்பட்ட இளம் விவசாயினுடைய தந்தை புகார் அளித்தார்.

 அதன்பின்னர், விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தினர். சுப்கரண் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என குரல் கொடுத்தனர்.

 குறிப்பாக சுப்கரண்சிங் மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும். அதுவரை அவரது உடலை அடக்கம் செய்யமாட்டோம் என அறிவித்து உடலை பாதுகாப்பாக வைத்தனர்.அப்படியே ஒருவாரம் கழிந்த நிலையில் பதற்றம் மேலும் அதிகரித்தது. 

  இந்நிலையில் அவரது தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் அடையாளம் தெரியாத நபருக்கு எதிராக நேற்று இரவு கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர். இரு பிரிவுகளின் கீழ் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.      ஆகவே சுப்கரண் சிங் உடல் அடக்கம் இன்று அடக்கம் செய்யப்படும்.

 ஏற்கனவே சுப்கரண் சிங் குடும்பத்தினருக்கு பஞ்சாப் அரசு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்கியதுடன், அவரது தங்கைக்கு அரசுவேலை வழங்கப்படும் என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.