"இல்லம் தோறும் ஸ்டாலின் குரல்" திண்ணை பிரச்சாரம் வேலூரில் தொடக்கம்!

ஜி.கே.சேகரன்,
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு "இல்லம் தோறும் ஸ்டாலின் குரல்" என்ற தலைப்பில் திண்ணை பிரச்சாரம் மேற்கொள்வது என வேலூர் மத்திய மாவட்ட கழகத்தினர் தீர்மானம் நிறைவேற்றினார்கள்.
வேலூர்மாவட்டம், வேலூரில் மத்திய மாவட்ட திராவிட முன்னேற்ற கழகம் அலுவலகத்தில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் நந்தகுமார் தலைமையில் நடந்த இதில் மாநகர மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட அவைத்தலைவர் முகமது சகி, ஊராட்சி தலைவர் பாபு மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இதில் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்ற தொகுதிகளிலும் இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் என்னும் தலைப்பில் கிராமம் தோறும் திண்ணை பிரச்சார பரப்புரையை நாளை முதல் நடத்துவது, திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்குவது, இந்த ஆட்சியின் திட்டங்களை செயல்படுத்துவது குறித்து மக்களிடம் கொண்டு செல்ல பொது கூட்டங்களை நடத்துவது, முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி மற்றும் பேரறிஞர் அண்ணா ஆகியோரின் நினைவிடத்தை புதுப்பித்து திறந்து வைத்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.