மீண்டும் நில அதிர்வு! மக்கள் பீதி!

கு.அசோக்,
மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டதால் வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட மக்கள் பீதி அடைந்துள்ளார்கள்.
திருப்பத்தூர் மாவட்டம்,ஆம்பூர் அருகேயுள்ள வெங்கடசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட அத்திமா குலப்பள்ளி கிராமத்தில் இன்று அதிகாலை சுமார் 5 மணிக்கு பயங்கர வெடி சத்தம் போல் கேட்டு நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்து வீடுகளில் இருந்து வெளியேறி தெருக்களில் தஞ்சமடைந்தனர்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், நில அதிர்வையும் மக்கள் உணர்ந்ததாக கூறுகின்றனர்.
2018 ஆம் ஆண்டு இரண்டு முறை நில அதிர்வு ஏற்பட்டதாக சொல்கிறார்கள்.
அதே போல் பேரணாம்பட்டு அருகே நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த கமலாபுரம், சிந்தகணவாய், டிடி மோட்டூர், பெரியபள்ளம், உள்ளிட்ட கிராமங்களில் நேற்று நில அதிர்வு ஏற்பட்டது. டிடி மோட்டூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட கமலாபுரம், சிந்த கணவாய், பெரிய பள்ளம், கவுராப்பேட்டை, உள்ளிட்ட கிராமங்களில் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து நேற்று காலை டிடி மோட்டூர் விஏஓ சிவராமன் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடம் சென்ற பேரணாம்பட்டு தாசில்தார் வெங்கடேசன், துணை தாசில்தார் வடிவேல் உட்பட வருவாய் அதிகாரிகள் நில அதிர்வு ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர்.
இந்த லேசான நில அதிர்வால் பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை.