உலக புகழ் பெற்ற இதய மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் கே.எம்.செரியன் காலமானார்!

ம.பா.கெஜராஜ்,
வேலூர் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் (சிஎம்சி) பேராசிரியராக பணியாற்றிய கேராள மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட மருத்துவர் கே.எம்.செரியன் காலமானார். உலக அளவில் தலைசிறந்த மருத்துவ வல்லுநர்களில் ஒருவரும், இந்தியாவில் இதய பைபாஸ் மற்றும் உறுப்பு மாற்று சிகிச்சையை அறிமுகப்படுத்தியவருமான மருத்துவர் கே.எம்.செரியன் (82), நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக பெங்களூரு சென்றிருந்தார்.
சனிக்கிழமை இரவு திடீரென மயக்கமடைந்த அவர், உடனடியாக மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கேரள மாநிலம் காயம்குளத்தில் 1942-ல் பிறந்த கே.எம்.செரியன், மருத்துவப் படிப்பை நிறைவு செய்த பிறகு வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரியில் அறுவை சிகிச்சை பேராசிரியராக 1970-ல் பணியாற்றினார். பின்னர் இதய அறுவை சிகிச்சையில் எப்ஆர்ஏசிஎஸ் படிக்க பிரிட்டன் சென்ற அவர், பிறகு நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்காவில் மருத்துவப் பயிற்சிகளை மேற்கொண்டு உலகத்தரத்தில் இதய அறுவை சிகிச்சைகளை செய்வதில் கைதேர்ந்தவராக உருவெடுத்தார்.
ஆஸ்திரேலியாவில் தனது 26-வது வயதிலேயே திறந்த நிலை அறுவை சிகிச்சையை மேற்கொண்டார். சர்வதேச அளவில் பணி வாய்ப்பும், பாராட்டுகளையும் பெற்றாலும், அதனை விடுத்து சென்னை திரும்பிய அவர், பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் கடந்த 1975-ல் இந்தியாவின் முதல் இதய பைபாஸ் அறுவை சிகிச்சையை மேற்கொண்டு உலகின் கவனத்தை ஈர்த்தார்.
மருத்துவர் கே.எம்.செரியனால் பைபாஸ் சிகிச்சை செய்யப்பட்ட நோயாளி சுமார் 25 ஆண்டுகள் நலமுடன் வாழ்ந்தார். அதேபோல், உறுப்பு மாற்று சிகிச்சைகள் சட்டப்பூர்வமாக்கப்பட்ட பிறகு, இந்தியாவிலேயே முதன்முறையாக இதய மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டவர் செரியன்.
மருத்துவத் துறையில் அவர் ஆற்றிய சேவையை பாராட்டி பத்மஸ்ரீ விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்தது. இவைதவிர சர்வதேச அளவிலும், இந்திய அளவிலும் மருத்துவத்துறையின் பெரும்பாலான உயரிய விருதுகள் மருத்துவர் கே.எம். செரியனுக்கு வழங்கப்பட்டுள்ளன.
மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனையின் நிறுவனர், பாண்டிச்சேரியில் உள்ள பிம்ஸ் மருத்துவ மையத்தின் நிறுவனர், சென்னை, ஃப்ரன்டயர் லைஃப் லைன் மருத்துவமனை நிறுவனர் ஆக அவர் இருந்தார்.
இவரது மனைவியின் பெயர் செலின் மகன் மருத்துவர் சஞ்சய் செரியன், மகள் சந்தியா செரியன் ஆவார். ஆனால் மனைவி ஏற்கனவே கொரோனாவால் இறந்துவிட்டார்.
இந்நிலையில் டாக்டர் செரியன் அவர்களின் உடல் வரும் 30 ஆம் தேதியன்று சென்னையில் நல்லடக்கம் செய்யப்படவிருக்கிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது