தற்கொலைகளை தடுக்க மன நல ஆலோசனைகள் வழங்க வேண்டும்! நறுவீ மருத்துவமனை கருத்தரங்கில் எஸ்.பி.பேச்சு!!

ம.பா.கெஜராஜ்,
தற்கொலை சம்பவங்களை தடுக்க ஆஸ்பத்திரிகளில் வாரம் 20 - 30 பேருக்கு மன நல ஆலோசனைகள் வழங்க வேண்டும் என்று நறுவீ மருத்துவமனையில் நடந்த கருத்தரங்கில் வேலூர் எஸ்.பி.பேசினார்.
கருத்தரங்கைப் பற்றின முழு விவரம் வருமாறு,
ஆண்டு தோறும் செப்டம்பர் 10 - ஆம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது . அதை யொட்டி வேலூர் நறுவி மருத்துவமனையின் மன நலம் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு துறை சார்பில் தற்கொலை தடுப்பு மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை மருத்துவமனை செயல் இயக்குநர் டாக்டர் பால் ஹென்றி வரவேற்றார் . நிகழ்ச்சியின் நோக்கம் பற்றி மருத்துவமனை மன நலம் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு துறை தலைமை மருத்துவர் ஷைனிகா ராஜகோபால் விளக்கி கூறினார்.
நறுவீ மருத்துவமனை தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத் தலைமை வகித்து பேசியதாவது: உலகளவில் தற்கொலை மற்றும் தற்கொலை முயற்சி சம்மந்தமாக பல்வேறு வகைகளில் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆண்டு தோறும் சுமார் எட்டு இலட்சம் பேர் தற்கொலை செய்து கொள்வதாகவும், இதில் 40 விநாடிக்கு ஒரு தற்கொலை நிகழ்வும், 25 தற்கொலை முயற்சி சம்பவங்கள் நடைபெறுவதாகவும் , இந்தியாவில் கடந்த ஆண்டு ( 2021 ) 1.63 இலட்சம் பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
தற்கொலை சம்பவங்களை காணும் பொழுது பெரும்பாலும் குடும்ப பிரச்சனைகள், கடன் தொல்லையால் விரக்தி, தேர்வில் தோல்வி, முக நூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தங்களை பற்றி வரும் விமர்சனங்கள், காதல் தோல்வி போன்றவைகள் காரணங்களாக அமைந்துள்ளன.
இதனை தடுப்பதற்கான வழிமுறைகளை நாம் காண வேண்டும். பள்ளிக்கு செல்லும் குழந்தைகளை படிக்க சொல்லி பெற்றோர்கள் கண்டிப்பது குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.
அது நாளடைவில் மன நல பாதிப்பை உருவாக்கும். எனவே, பெற்றோர்கள், குழந்தைகளை கண்டிப்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
தேர்வில் வெற்றி என்பது எல்லோருக்கும் அமையாது. வாழ்க்கையில் நமக்கு கிடைத்தவற்றை ஒப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அப்படி இல்லையென்றால் அதுவே மன அழுத்தத்தை ஏற்படுத்தி தற்கொலை முயற்சிக்கு வழி வகுக்கும்.
எனவே, தற்கொலை முயற்சியை தடுக்க தேவையான ஆலோசனைகள் மற்றும் விழிப்புணர்வு வழங்க வேண்டும் என்று பேசினார்.
இந்த நிகழ்வில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராஜேஷ் கண்ணன்,இ.கா.ப. அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
தற்கொலை தடுப்பு சம்பந்தமான சுலோகங்கள் கொண்ட சிறந்த சுவரொட்டிகள் உருவாக்கியவர்களுக்கு பரிசுகளை வழங்கிய அவர் பேசியதாவது: தற்கொலை தடுப்பு சம்மந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நறுவீ மருத்துவமனை இந்த கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளது வரவேற்க கூடியது.
தற்கொலை முயற்சி என்பது தண்டனைக்குறிய குற்றமாகும். வேலூர் மாவட்டத்தில் கடந்த எட்டு மாதங்களில் தற்கொலை செய்து கொண்டவர்களில் 60 முதல் 70 பேர் பெண்கள், 150 முதல் 160 பேர் ஆண்கள். தற்கொலை செய்து கொண்ட பெண்கள் அனைவரும் திருமணம் ஆனவர்கள், அடுத்ததாக, மாணவர்களை பொருத்த வரை 11 மாணவர்கள் , 9 மாணவிகளாகும்.
ஒவ்வொரு தற்கொலை மற்றும் தற்கொலை முயற்சி சம்பவங்கள் காவல் துறையால் பதிவு செய்யப்பட்டு அதன் காரணங்களை ஆராயும் போது போதிய வருமானம் கிடைக்காததால் குடும்பத்தில் ஏற்படும் நிதி பிரச்சனை , திருமணம் கடந்த உறவுகள், 18 முதல் 21 வயதுடைய இளைஞர்கள் சமூக ஊடகங்கள் மூலம் ஏற்படும் பாதிப்புகள் என கண்டறியப்பட்டுள்ளது.
குடும்பத்தில் பெண்கள் தற்கொலை செய்வது பற்றி காரணங்கள் அறிந்து அதனை தடுக்க ஆலோசனைகள் வழங்க வேண்டும்.
நறுவீ மருத்துவமனையில் இந்த பணிகள் நடைபெற்று வருவது பாராட்டுக்குறியது. மருத்துவமனைகளில் தற்கொலை சம்பவங்களை தடுக்க வாரந்தோறும் 20 முதல் 30 பேருக்கு மன நல ஆலோசனைகள் வழங்க வேண்டும் என்றார் . நிகழ்ச்சியில் மருத்துவமனை துணை தலைவர் அனிதா சம்பத், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஜேக்கப் ஜோஸ், பொது மேலாளர் நித்தின் சம்பத் ஆகியோர் பங்கேற்றனர்
நிகழ்ச்சியின் முடிவில், தலைமை இயக்குதல் அலுவலர் மணிமாறன் நன்றி கூறினார்.