வேலைக்கு அப்பாயின்மென்ட் கொடுப்பதாக பண மோசடி!ஜார்கண்ட் குற்றவாளிகளை பிடித்த போலிசார்!

ஜி.கே.சேகரன்,
ஜார்கண்ட் சிறையில் அடைக்கப்பட்ட 3 பேரை மேல் விசாரகைக்கு அழைத்து வந்த திருப்பத்தூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார்.
திருப்பத்தூரை சேர்ந்த மோனிஷ்(19), என்பவரது செல்போன் நம்பருக்கு தகவல் ஒன்று வந்தது.அதில் பீகார் மாநிலத்தில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் அதிக சம்பளத்துடன் வேலை இருப்பதாக கூறப்பட்டிருந்தது.இதனால் கவரப்பட்ட மோனிஷ் தகவல் வந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அவர்கள் அதிக சம்பளத்துடன் வேலை இருப்பதாகவும், தங்களின் கல்விச்சான்றிதழை வாட்சப் மூலம் அனுப்பும்படி கேட்டுள்ளனர்.
இவரும் தனது சான்றிதழை வாட்சப் மூலம் அனுப்பினார்.சிறிது நேரம் கழித்து மோனிசை தொடர்பு கொண்ட அவர்கள்,உங்களுக்கு வேலை உறுதியாகிவிட்டது என ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
மேலும், தாங்கள் கேட்கும் பணத்தை நீங்கள் வங்கி கணக்கில் செலுத்தும் படி கூறியுள்ளார். அதன்படி மோனிஷ் மர்ம நபர்கள் வழங்கிய வங்கி கணக்கிற்கு ரூ.6 லட்சத்து 53 ஆயிரத்து 583 ரூபாய் அனுப்பியுள்ளார். அவர்கள் பணத்தைப் பெற்றுக் கொண்ட பிறகு ஓரிரு நாட்களில் உங்கள் முகவரிக்கு அப்பாயின்மென்ட் ஆர்டர் வந்துவிடும். அதன் பிறகு நீங்கள் நேரில் வந்து வேலையில் சேர்ந்து கொள்ளலாம் எனக்கூறி இணைப்பை துண்டித்தனர்.
இதையடுத்து ஒரு மாதம் ஆகியும், எந்த அப்பாயின்மென்ட் ஆர்டரும் அவருக்கு வரவில்லை. பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த மோனிஷ் இது குறித்து திருப்பத்தூர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த முகேஷ்குமார், ஜித்தேந்ர குமார், அமன்குமார் ஆகியோர் மோனிஷை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது.
மேலும் இவர்கள் இதுபோன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு தற்போது ஜார்கென்ட் மாநிலம் ஆசாரிபாத் மாவட்டம், கோரா போலீசார் இவர்களை கைது செய்து சிறையில் அடைத்திருப்பது தெரிந்தது.
இதனைத் தொடர்ந்து கடந்த 27ம் தேதி திருப்பத்தூர் சைபர் க்ரைம் போலீஸ் குழுவினர் ஜார்கண்ட் மாநிலம் சென்று சிறையில் இருந்த மூன்று பேரையும் மேல் விசாரணைக்காக அழைத்து வந்தனர்.
இது குறித்து போலிசார் தெரிவிக்கையில், சம்பந்தப்பட்ட மூன்று பேரும் வேலூர் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரணை செய்து இரு நாட்களுக்குள் மீண்டும் ஜார்க்கண்ட் மாநில சிறையில் ஒப்படைக்கப்படுவர்.
இப்படிப்பட்ட ஆசைவார்த்தைகளை கூறி பண மோசடி செய்யும் கும்பல் பெருகிவிட்டது. இளைஞர்கள் உள்ளிட்ட அனைவரும் இது போன்ற போன் அழைப்புகள் வந்தால் பணம் மற்றும் வங்கி கணக்கு, ஆதார் பேன்கார்டு போன்ற விவரங்களை வழங்கக்கூடாது என்றனர்.