வாக்களித்து விட்டு ரோடு ஷோ நடத்திய மோடி! அமித்ஷாவும் இணைந்துக் கொண்டார்!
Naresh.N.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பிரதமர் மோடி வாக்களித்த கையோடு ரோடு ஷோ நடத்தினார். அப்போது அவருடன் அமித்ஷாவும் இணைந்துக் கொண்டார். அவர்களை மக்கள் திரளாக வரவேற்றனர். பலர் மோடிக்கு கையில் சகோதரத்துவ கயிறு கட்டினார்கள்.
மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19-ம்தேதி நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் 102 தொகுதிகள், ஏப்ரல் 26-ம் தேதி நடைபெற்ற 2-ம் கட்ட தேர்தலில் 88 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து, 3-ம் கட்டமாக 10 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தை சேர்ந்த 93 மக்களவை தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது வாகுபதிவு நடைபெற்ற 93 தொகுதிகளில் 64 சதவீத வாக்குகள் பதிவாகின.
இதன்படி அசாமில் 4, பிஹாரில் 5, சத்தீஸ்கரில் 7, டாமன்-டையூவில் 2, கோவாவில் 2, குஜராத்தில் 25, கர்நாடகாவில் 14, மத்திய பிரதேசத்தில் 9, மகாராஷ்டிராவில் 11, உத்தர பிரதேசத்தில் 10, மேற்கு வங்கத்தில் 4 தொகுதிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை வரை விறுவிறுப்பாக நடைபெற்றது.
நாடு முழுவதும் 93 தொகுதிகளில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. மொத்தம் 64.08 சதவீத வாக்குகள் பதிவாகின. அசாமில் அதிகபட்சமாக 75 சதவீத வாக்குகளும், மகாராஷ்டிராவில் குறைந்தபட்சமாக 53 சதவீத வாக்குகளும் பதிவாகின.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நிஷான் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் பிரதமர் மோடி வாக்களித்தார்.
பின்னர் அவர் ரோடு ஷோ நடத்தினார். வழிநெடுகிலும் திரளான மக்கள் திரண்டு நின்று பிரதமரை வரவேற்றனர்.
உத்தர பிரதேச மாநில ஆளுநர் ஆனந்தி பென் படேல், டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா, மத்திய உள்துறை அமைச்சரும் காந்தி நகர் தொகுதி வேட்பாளருமான அமித் ஷா, தொழிலதிபர் கவுதம் அதானி, அவரது மனைவி பிரீத்தி ஆகியோரும் அகமதாபாத்தில் வாக்களித்தனர்.
உத்தர பிரதேசத்தின் சம்பல்தொகுதிக்கு உட்பட்ட குண்டர்கி, பிலாரி, சந்தவ்சி உள்ளிட்ட பகுதிகளில் சிலர் வன்முறையில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் தடியடி நடத்தி விரட்டினர். அதே போல் அங்கு இஸ்லாமியர்களை வாக்களிக்கவிடாமல் போலிசார் தடியடி நடத்தி அச்சுறுத்தியதாக செய்திகள் வெளியானது.
மேற்கு வங்கத்தில் வாக்குப்பதிவு நடைபெற்ற 4 தொகுதிகளின் பல்வேறு இடங்களில் திரிணமூல் காங்கிரஸ் - பாஜக தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. மேற்கு வங்க மாநிலம் ஜாங்கிபூர் மக்களவை தொகுதியில் பாஜகசார்பில் தனஞ்செய் கோஷ் போட்டியிடுகிறார். அவர் ஜாங்கிபூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்றபோது, அவருக்கும் திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
பாதுகாப்பு படை வீரர்கள் தலையிட்டு இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பினர்.