அ.தி.மு.க.வில் மூன்றாவது அணி உதயமா?

ம.பா.கெஜராஜ்,
அதிமுக இரண்டாக பிளவுபட்டு பேசு பொருளாக ஆகியிருக்கிறது. இந்நிலையில் அக்கட்சியில் மூன்றாவது அணி உதயமாகப்போவதாக சில காட்சிகள் எடுத்துரைக்கிறது.
அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கம் என்று பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றியதும், பதிலுக்கு அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி நீக்கம் என்று ஓபிஎஸ் அறிவித்து தடலாடி காட்டினார்.
அதனைத் தொடர்து ஓபிஎஸ் தலைமையில் பொதுக்குழு கூடுகிறது என்றும், இதில் புதிய மாவட்டச் செயலாளர்கள், நகர செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், மற்றும் கிளை செயலாளர்கள் நியமனம் நடைபெறுகிறது என்றும் அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் ஆவல் மேலோங்கியிருக்கிறது.
அதே போல் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக கே.சி. பழனிச்சாமி இணை ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்யப்படுவார் என்று சொல்கிறார்கள்.
ஆனால் கே.சி.பழனிசாமியோ, மூன்றாவதாக்ல ஒரு ரூட் போட்டுக்கொண்டிருக்கிறார்.
அதிமுக பொதுக்குழுவை எடப்பாடி டீம் நடத்த, தலைமையகத்தை ஓபிஸ் கைப்பற்றி செம களேபரம் நடந்து கொண்டிருந்த போது, கே.சி.பி. அவர் பங்குக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அதிமுக பொதுச் செயலாளரை தொண்டர்கள் தான் தேர்வு செய்ய முடியும் பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்வு செய்ய முடியாது என்று கூறிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி. பழனிசாமி இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அதிமுகவை சிதைத்து கொண்டிருப்பதாக குற்றம் சாட்டினார்.
'அதிமுக வரலாற்றில் இது ஒரு கருப்பு நாள்.. கடந்த நான்கு ஆண்டுகளாக ஓபிஎஸ் - இபிஸ் தங்களுக்கு தகுந்தார் போல், கட்சியின் விதிகளில் பல மாற்றங்களை செய்திருக்கிறார்கள். ஆனால், எளிதில் அவ்வாறு செய்ய முடியாது. ஓபிஎஸ் - எடப்பாடி பழனிசாமி சுயநலத்தால் இவ்வளவு பெரிய சண்டை நடந்துள்ளது.
கடந்த 4 ஆண்டு காலத்தில் இவர்களுக்கு ஏற்றாற் போல் பல்வேறு திருத்தங்களை செய்து மாற்றி உள்ளனர். ஆளும் கட்சியை எதிர்த்து பேச கட்சியில் ஆள் இல்லை. இவர்களுடைய பிளவு பாஜக மற்றும் திமுகவுக்குத் தான் உதவும்.
அதிமுக உறுப்பினர்களை வைத்து பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அதிமுகவின் எந்த அணியையும் சாராத பொது உறுப்பினர்களை வைத்து தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கூட்டம் நடத்தப்படும்.
வருகிற 16ம் தேதி சென்னை கோயம்பேட்டில் இந்த கூட்டம் நடத்தப்பட உள்ளது. எடப்பாடி பழனிசாமியுடன் இருக்கும் அனைவரும் குற்றம் சுமத்தப்பட்டவர்கள். இவர்களால் எப்படி மத்திய அரசை எதிர்க்க முடியும்?
சின்னம் முடக்கினாலும் பரவாயில்லை,தன்னையும் தன்னை சூழ்ந்திருப்பவர்களை பாதுகாக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார்' என்று கூறியிருந்தார்.
கே.சி.பழனிசாமி பேட்டியளித்தத்தை போல ஆளுக்கு ஒரு பக்கம் ஆதரவாளர்களை திரட்ட ஆரம்பித்தால் கட்சி என்னாவது? எனினும், கேசி பழனிசாமியை வைத்து ஓபிஎஸ் ஒரு கணக்கு போட்டு வரும்போது, எந்த அணியையும் சாராத பொது உறுப்பினர்களை திரட்ட போவதாக கே.சி.பி. அழுத்தம் திருத்தமாக சொல்லியிருப்பது மூன்றாவது அணிக்கான பாதையே எனலாம்.
ஆக காட்சி மூன்று விரைவில் துவக்கம், அப்படின்னா இ.பி.எஸ்ஸிக்கு பஜகவும், ஓ.பி.எஸ்ஸிக்கு திமுகவும், கே.சிபிக்கு சசியும் துணைநிற்கிறார்களா என்பது அப்பாவி தொண்டர்களின் விணா?