உலக தர தொழில்நுட்பத்துடன் நறுவீ மருத்துவமனை விளங்குகிறது அசாம் ஆளுநர் பாராட்டு!

ம.பா.கெஜராஜ்,
வேலூர் நறுவீ மருத்துவமனையில் புதியதாக ஏற்படுத்தப்பட்டுள்ள பக்கவாத நோய்க்கான சிறப்பு சிகிச்சை மையத்தை இன்று மாலை அசாம் மாநில ஆளுநர் மாண்புமிகு குலாப் சந்த் கட்டாரியா திறந்து வைத்து பார்வையிட்டார். உலக தரத்திலான நவீன மருத்துவ சாதனங்களை கொண்டு நோயாளிகளுக்கு சேவை ஆற்றிவரும் மருத்துவமனை தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத்தை பாராட்டுகிறேன் என்றார்.
இம்மருத்துவமனையில் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நவீன தொழில்நுட்ப சாதனங்களை கொண்டு சிகிச்சை அளிப்பதற்காக சிறப்பு பக்கவாத சிகிச்சை மையம் புதியதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதன் தொடக்க விழா இன்று மாலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மருத்துவமனை தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத் தலைமை வகித்தார். இவ்விழாவில் அசாம் மாநில ஆளுநர் குலாப் சந்த் கட்டாரியா சிறப்பு விருந்தினராக பங்கேற்று பக்கவாத நோய்க்கான சிறப்பு சிகிச்சை மையத்தை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
பின்னர் இம்மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்களை சந்தித்து மருத்துவமனையில் வழங்கப்பட்டு வரும் மருத்துவ சேவைகள் பற்றி கேட்டறிந்தார்.
அதனை தொடர்ந்து வேலூர் ராஜஸ்தானி சமாஜ் சார்பில் ஆளுநர் குலாப் சந்த் கட்டாரியாவிற்கு வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை வேலூர் ராஜஸ்தானி சமாஜ் செயலாளர் ராஜேஷ் குமார் வரவேற்றார். நிகழ்ச்சியில் நறுவீ மருத்துவமனை தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத் ஆளுநர் குலாப் சந்த் கட்டாரியாவிற்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி கௌரவித்து பேசியாதாவது:
வேலூர் நறுவீ மருத்துவமனைக்கு அசாம் மாநில ஆளுநர் வருகை தந்து மருத்துவமனையில் பக்கவாத நோய் சிறப்பு சிகிச்சை மையத்தை திறந்து வைத்ததற்கு நன்றி தெரிவிக்கிறேன். கடந்த நாற்பது ஆண்டுகளாக நாட்டில் அரசியலில் ஈடுபட்டும் சமுதாய முன்னேற்றத்தில் தன்னை அர்பணித்து பங்காற்றி வருகிறார்.
ஜெயின் சமுதாயத்தின் மிகப் பெரிய தலைவராக விளங்கி அதன் மூலம் சமுதாய முன்னேற்றத்தில் பங்காற்றி வருவது பாராட்டத்தக்கது.
தமிழ்நாட்டில் அமைந்துள்ள ராஜஸ்தானி ஜெயின் சங்கத்தினர் கடந்த மூன்று தலைமுறையாக தமிழ் மக்களுடன் இணைந்து தமிழ் கலாச்சாரத்தை கடைபிடித்து, அறக்கட்டளை அமைந்து மக்களுக்கு உதவும் பணிகள் பாராட்டத்தக்கது என்றார்.
நிகழ்ச்சியில் அசாம் மாநில அளுநர் குலாப் சந்த் கட்டாரியா ஏற்புரை வழங்கி பேசுகையில் இம்மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதை நேரடியாக பார்வையிடும் வாய்ப்பு ஏற்படுத்தி தந்ததற்காக மருத்துவமனை தலைவர் ஜி.வி. சம்பத்தை பாராட்டுகிறேன்.
இம்மருத்துவமனையில் உலக தரத்தில் மருத்துவ சேவை வழங்க நவீன தொழில்நுட்ப சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளதை கண்டறிந்தேன். எங்களது ராஜஸ்தான் மாநிலத்தில் இது போன்ற சிறப்பு வசதிகள் கொண்ட மருத்துவமனைகள் இல்லை.
மனிதன் என்பவன் நேர்மையை கடைபிடித்து சமுதாய முன்னேற்றத்திற்கு சேவை செய்ய வேண்டும். 35 ஆண்டுகளாக அரசியலில் ஈடுபட்டு வரும் எனக்கு எந்தவித கெட்ட பெயரும் ஏற்படாத வகையில் மக்கள் பணியாற்றி வருகிறேன் என்றார்.
இந்நிகழ்ச்சியில் அசாம் மாநில ஆளுநரின் துணைவியார் அனிதா கட்டாரியா, அகில இந்திய ராஜஸ்தானி பிரவாசி சங்க பொது செயலாளர் பராஸ் ஜெயின், வேலூர் எஸ்.எஸ். ஜெயின் சங்க செயலாளர் ராஜேஷ் குமார், செயல் இயக்குநர் டாக்டர் பால் ஹென்றி, மருத்துவ சேவைகள் தலைவர் டாக்டர் அரவிந்தன் நாயர், மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஜேக்கப் ஜோஸ், பக்கவாத நோய் சிகிச்சை மைய தலைவர் டாக்டர் சிற்றம்பலம், தலைமை இயக்குதல் அலுவலர் மணிமாறன், பொது மேலாளர் நிதின் சம்பத் மற்றும் மருத்துவர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.