பலகாலமாக சைக்கிளில் டுயூட்டிக்கு செல்லும் பெண் எஸ்.ஐ.!

பலகாலமாக சைக்கிளில் டுயூட்டிக்கு செல்லும் பெண் எஸ்.ஐ.!

 ஜி.சாந்தகுமார்,

  சென்னையில் ஒரு பெண் இன்ஸ்பெக்டர் சைக்கிளில் தான் டுயூட்டிக்கு சென்று வருகிறார். இன்று நேற்றல்ல

கடந்த 22 ஆண்டாக இப்படித்தானாம்.

இது பற்றின விவரம் வருமாறு, 

  சென்னை,பழைய வண்ணாரப்பேட்டை, எம்.எஸ்.நாயுடு கோவில் தெருவை சேர்ந்தவர் புஷ்பராணி. இவர் பூக்கடை போக்குவரத்து புலனாய்வு பிரிவில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். அப்படியிருக்க தினமும் இவர் சைக்கிளிலேயே பணிக்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டு உள்ளார்.

   இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பராணி அவர்கள் சொல்வதை கேட்போம்,

  வணக்கம் சார், நான் போலீஸ் பணியை கடந்த 1997-ம் ஆண்டு தொடங்கினேன். 2001-ம் ஆண்டு ஆயுதப்படையில் பணியாற்றிய நாள் முதல் இன்று வரை நான் வசிக்கும் வீட்டில் இருந்து பணிபுரியும் போலீஸ் நிலையம் வரை சைக்கிள் பயணம் செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளேன்.

   எனது தந்தை கோவிந்த சாமி ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஆவார். அவர் பணிபுரிந்த காலங்களில் எங்களது வீட்டில் இருந்து போலீஸ் நிலையம் வரை சைக்கிளில் சென்று வருவார். இதனால் அவரது உடல் நல்ல ஆரோக்கியத்துடன் இன்று வரை உள்ளது.

   அவருக்கு தற்போது 70 வயது ஆகிறது. இதுவரை சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட எந்த பிரச்சினையும் இல்லாமல் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறார்.

   இதுநாள் வரை கண்ணாடி அணியாமல் பத்திரிகை படித்து வருகிறார். இதுவே எனக்கு உந்துதலாக அமைந்தது. அவரது வழியில் நானும் சைக்கிளில் பணிக்கு சென்று வருகிறேன்.

   நான் இந்த காவல் பணியில் 22 ஆண்டு காலமாக பணியாற்றி வருகிறேன். இதுவரை பல்லாவரம், மடிப்பாக்கம், தண்டையார்பேட்டை உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் அனைத்து மகளிர் காவல் நிலையம், சட்ட ஒழுங்கு, குற்றப்பிரிவு, என பணிபுரிந்துள்ளேன். தற்பொழுது கடந்த மே மாதம் நான் சிறப்பு உதவி ஆய்வாளராக பதவி உயர்வு பெற்று பூக்கடை சரக போக்குவரத்து புலனாய்வு பிரிவில் பணியாற்றி வருகிறேன்.

  எனது வீட்டில் இருந்து போலீஸ் நிலையம் சுமார் 6 கிலோமீட்டர் தூரம் இருக்கும். தினமும் சைக்கிளிலேயே பணிக்கு சென்று வருகிறேன். அவ்வப்போது தினமும் ஒரு மணி நேரம் நடைபயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். தற்போது பணிபுரியும் போலீஸ் நிலையத்தில் இருந்து பாரிமுனை, திருவொற்றியூர், எழும்பூர் உள்ளிட்ட இடங்களுக்கு பாதுகாப்பு பணிக்கு சைக்கிளிலேயே சென்று வருவேன்.

   இதனால் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட எந்தவிதமான உடல் பிரச்சினையும் இன்றி ஆரோக்கித்துடன் உள்ளேன். சைக்கிள் பயணம் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. எனக்கு ஒரு மகள் ஒரு மகன் உள்ளனர். அவர்களும் தினமும் பள்ளிக்கு சைக்கிளில் சென்று வருவதை ஊக்குவித்து வருகிறேன் என்கிறார் கூலாக.

குறிப்பு:-  ஐ.பி.எஸ் பெண் அதிகாரியான ஆர்.வி.ரம்யா பாரதி, கடந்த மார்ச் மாதம் சென்னை இணை போலீஸ் கமிஷனராக (வட மண்டலம்) இருந்த போது இரவு ரோந்து சைக்கிளில் சென்று போலீசாரை வியப்பில் ஆழ்த்தினார்.

    
   அதிகாலை 2.45 மணி முதல் 4.15 மணி வரை  வடசென்னையில் கிட்டத்தட்ட ஒன்பது கிலோமீட்டர் பயணம் செய்து போலீஸ் டுயூட்டி காவலர்களை சோதனை செய்து ஆச்சரியப்படுத்தினார். அதிகாலையில் சாலைகளில் நடமாடும் மக்களையும் விசாரித்தார். இந்த செய்தி அப்போது தமிழக சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.