அமைச்சர் மனோ தங்கராஜின் தங்கை பெயரில் 100 கோடி போலி ஆவண சொத்தா?வெளியான விளக்கம்!

அமைச்சர் மனோ தங்கராஜின் தங்கை பெயரில் 100 கோடி போலி ஆவண சொத்தா?வெளியான விளக்கம்!

ம.பா.கெஜராஜ்,

 அமைச்சர் மனோ தங்கராஜின் தங்கை பெயரில் 100 கோடி மதிப்பிலான அரசு நிலம் போலி ஆவணங்கள் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக" அடிப்படை ஆதாரமற்ற போலிச் செய்தியை வெளியிட்டுள்ளதாக அவர்கள் தரப்பிலிருந்து அறிக்கை ஒன்று வெளியாகியிருக்கிறது.

 அதில் தெரிவித்திருப்பதாவது, கடந்த நவம்பர் 20, 2025 அன்று ஒரு குறிப்பிட்ட தொலைக்காட்சி சேனலில் "உயர்நீதிமன்றம் அதிரடி அமைச்சருக்கு அதிர்ச்சி" என்ற தலைப்பில் செய்தி ஒன்றை வெளியிட்டிருக்கிறது. இதில் "அமைச்சர் மனோ தங்கராஜின் தங்கை பெயரில் 100 கோடி மதிப்பிலான அரசு நிலம் போலி ஆவணங்கள் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக" அடிப்படை ஆதாரமற்ற போலிச் செய்தியை வெளியிட்டுள்ளது. இது மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும்.

  கடந்த 2004 டிசம்பர் 13-ம் தேதியன்று அப்போதைய காஞ்சிபுரம் மாவட்டம், தாம்பரம் வட்டம், கஸ்பாபுரம் கிராமம் புல எண்கள் 11/1A, 11/2, 11/3, 11/4 ஆகியவற்றில் திரு.வி. மும்மூர்த்தி தேவர் மற்றும் திரு. செல்வராஜ் ஆகியோர் கைவசம் இருந்த 1.46 ஏக்கர் நிலத்தை வங்கிக்கடன் பெற்று, அதன் மூலமாக கிடைத்த தொகையில் திரு. டேவிட் வில்சன் மனைவி திருமதி. மாஜினி செல்லா (திரு.மனோ தங்கராஜ் அவர்களின் அக்கா) அவர்கள் பெயரில் ரொக்கமாக வாங்கினோம். இதன் பட்டா தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எண் WP 32687/2012-ல் மாண்புமிகு உயர்நீதிமன்றம் 14/12/2012 அன்று பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் வருவாய் துறை பட்டா வழங்கியது. இதில் எந்த விதி மீறலோ, ஆக்கிரமிப்போ, முறைகேடோ நிகழவில்லை.

 தற்போது, ஜி. மாஜினி செல்லா, சி. டேவிட் வில்சன் ஆகிய எங்கள் இருவருக்கும் இன்றைய தேதி வரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதாக எந்த தகவலும் நீதிமன்றம் வாயிலாகவோ, காவல்துறை வாயிலாகவோ அல்லது வேறு அரசு துறைகள் வாயிலாகவோ கிடைக்கவில்லை. மட்டுமல்லாமல், சம்பந்தப்பட்ட சொத்து எங்கள் கைவசமும் இல்லை.

இந்நிலையில் அவதூறு பரப்ப வேண்டும் என்ற நோக்கில் அமைச்சர் மனோ தங்கராஜை தொடர்புபடுத்தி அந்த தொலைக்காட்சி நிறுவனம் செய்தி வெளியிட்டிருப்பது உள்நோக்கம் கொண்டது.

  திரு. மனோ தங்கராஜ் அவர்கள் 2016-ல் தான் சட்டமன்ற உறுப்பினர் ஆனார்: 2021-ல் தான் அமைச்சர் ஆனார். ஆனால், மேற்படி சொத்து 2004-ம் ஆண்டிலேயே வாங்கப்பட்டு விட்டது; 2014-ல் விற்பனையும் செய்யப்பட்டு விட்டது. அமைச்சர் மனோ தங்கராஜிற்கும் மேற்படி சொத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

 ஆனால் அந்த தொலைக்காட்சி நிறுவனம், அது சார்ந்திருக்கும் அரசியல் கட்சியின் லாபத்திற்காக போலியான செய்தியை திட்டமிட்டு பரப்பி வருகிறது என்பதை அனைத்து ஊடகங்களுக்கும், பொதுமக்களுக்கும் இச்செய்தி வாயிலாக தெளிவுபடுத்திக் கொள்கிறோம்.

இப்படிக்கு

ஜி. மாஜினி செல்லா

4/98, கிருஷ்ணா நகர்,

கஸ்பாபுரம்,

சென்னை - 600126

அனிட் டேவிட் வில்சன்

4/98, கிருஷ்ணா நகர்,

கஸ்பாபுரம்,

சென்னை - 600126