இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் கொந்தளித்துள்ளனர்!எம்.பி. வெங்கடேசன் உணர்ச்சிகரம்!!

இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் கொந்தளித்துள்ளனர்!எம்.பி. வெங்கடேசன் உணர்ச்சிகரம்!!

க.பாலகுரு,

  பிஜேபி, ஆர்எஸ்எஸின் அரசியலை தீவிரமாகக் கொண்டு செல்வது யார் என்பதில் அண்ணாமலைக்கும் ஆளுநர் ரவிக்கும் போட்டியாக இருக்கிறது.கமலாலயத்தில் உட்கார்ந்து இருக்க வேண்டியவர், ஆளுநர் மாளிகையில் உட்கார்ந்து இருக்கிறார் என திருவாரூரில் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் உணர்ச்சிகர பேசினார்.

 இந்திய மாணவர் சங்கத்தின் 26 வது மாநில மாநாடு திருவாரூர் தெற்கு வீதியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் தென்காசி, திருப்பூர், பெரம்பலூர், திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் உட்பட மாநிலம் முழுவதிலும் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.

 முன்னதாக 2000 மாணவர்களுடன் திருவாரூர் வர்த்தக சங்க கட்டிடத்திலிருந்து துவங்கிய பேரணியானது மேம்பாலம் ரவுண்டானா, திருவாரூர் பழைய பேருந்து நிலையம், கடைவீதி, நேதாஜி சாலை வழியாக சென்று தெற்கு வீதியில் நிறைவடைந்தது. பேரணியில் மாணவர்கள் கரகாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன்,உற்சாகமாக நீட் எதிர்ப்பு, புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பியவாறு வந்தனர்.

 தொடர்ந்து தெற்கு வீதியில் நடைபெற்ற மாநில மாநாடு பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசும்போது..

  கமலாலயத்தில் உட்கார்ந்து இருக்க வேண்டியவர், ஆளுநர் மாளிகையில் உட்கார்ந்து இருக்கிறார். பிஜேபி மற்றும் ஆர்எஸ்எஸின் அரசியலை தீவிரமாகக் கொண்டு செல்வது யார் என்பதில் அண்ணாமலைக்கும் ஆளுநர் ரவிக்கும் போட்டியாக இருக்கிறது.

  இஸ்ரோவின் தலைவர் சோம்நாத் எந்த உண்மையின் அடிப்படையில் இந்திய மொழிகளின் தாய்மொழி சமஸ்கிருதம் என்று நேற்று பேட்டியளித்துள்ளார். இஸ்ரோவில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு மாநிலங்களவை பதவி வேண்டும், ஆளுநராக வேண்டும் என்றால் ஆர் எஸ் எஸ், பிஜேபி அலுவலகத்திற்கு சென்று யார் காலையாவது பிடியுங்கள். உங்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால் பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்திய மொழிகளை அவமதிக்கும் உரிமையை யார் செய்தாலும் அதை நாங்கள் எதிர்ப்போம் என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மதுரை எம்பி வெங்கடேசன் தெரிவித்ததாவது.

 தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் வர்ணாசிரமக் கல்விக் கொள்கையை கொண்டு வருகிற அனைத்து வேலைகளையும் மோடி அரசு செய்து கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் கல்வியை வணிகமயமாக்குவதற்கான வேலையை செய்து கொண்டிருக்கின்றது. கல்வியில் மாநில அரசின் உரிமைகளை பறித்து ஒட்டுமொத்தமாக மத்திய அரசிடம் கொண்டு செல்வதற்கான வழியை தேசியக் கல்விக் கொள்கை மூலமாக மத்திய அரசு செய்து வருகிறது. இதனை தமிழக மாணவர்கள் வலிமையோடு திரண்டு எதிர்ப்பார்கள். அதற்கான அச்சரமாகத்தான் இந்த மாநாடு அமைந்திருக்கிறது.

ஒன்றிய அரசுக்கு மக்களவையில் பெரும்பான்மை எண்ணிக்கை இருக்கலாம். இந்தியா முழுவதும் பெரும்பான்மை மக்கள் கொந்தளித்து போய் இருக்கின்ற நேரத்தில், அரசியல் சாசனத்துக்கு எதிராக இவ்வளவு வேலைகள் செய்து கொண்டிருக்கின்ற நேரத்தில்  பிஜேபிக்கான பாடத்தை வர இருக்கின்ற தேர்தலில் புகட்டுவார்கள் என்றார்.