மக்களவை சபாநாயகர் பதவி ரேஸ்! சொந்தத்தை வைத்து சந்திரபாபு நாயுடுவை மடக்க முயலுதா பாஜக!

ம.பா.கெஜராஜ்,
சொந்தத்தை வைத்து சந்திரபாபு நாயுடுவை மடக்க பாஜக திட்டமிட்டிருப்பதாக கூறப்படும் நிலையில் மக்களவை சபாநாயகர் பதவிக்கான ரேஸ் வேகம் எடுத்திருக்கிறது.
18-வது மக்களவையின் சபாநாயகரை தேர்வு செய்யும் தேர்தல் ஜூன் 26-ம் தேதி நடத்தப்பட உள்ளதாக அறிவிப்புவெளியான நிலையில் இதை வைத்து இந்தியா கூட்டணி பெரிய அரசியல் செய்ய திட்டமிட்டிருக்கிறது. இதில் என்.டி.ஏ. கூட்டணி ஆட்சியில் முக்கிய பங்கு வகிக்கும் தெலுங்கு தேச கட்சிக்கும், ஐக்கிய ஜனதாதளம் கட்சிக்கும் இடையே சில முரண்பாடுகள் உள்ளதை காணமுடிகிறது.
தெலுங்கு தேச கட்சியின் 16 எம்.பி.க்கள், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தின் 12 எம்.பி.க்கள் ஆதரவுடன் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. ஏனென்றால் பாஜகவிடம், 240 தொகுதிகள் மட்டுமே உள்ளது.
இந்தியா கூட்டணி 234 எம்பிக்களை கொண்டுள்ளது.
இந்நிலையில் நடைபெறவிருக்கும் மக்களவை சபாநாயகர் பதவிக்கு ''பாஜக சார்பில் பரிந்துரை செய்யப்படும் நபரை தேர்ந்தெடுப்போம் என்று ஐக்கிய ஜனதா தளம் சார்பில் தடாலடியாக தெரிவித்திருக்கிறது.
ஆனால் அதே கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியோ, ''மக்களவை சபாநாயகர் பதவி தொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் முதலில் கலந்துபேச வேண்டும். இதில் கருத்தொற்றுமை ஏற்பட்டு,அதன் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் நபருக்கே தெலுங்கு தேசம் ஆதரவு அளிக்கும்'' என்று திட்டவட்டமாக குறியுள்ளது.
ஆக மத்திய ஆட்சிக்கு முட்டுக்கொடுத்து நிற்க வைத்திருக்கும் ஐக்கிய ஜனதா தளம் - தெலுங்கு தேசம் இடையே இதில் ஒருமித்த கருத்து இல்லை.
மக்களவை சபாநாயகராக ௐ பிர்லாவை மீண்டும் நியமிக்க பாஜக தலைமை விரும்புகிறது. ஆனால், இந்த பதவியை தெலுங்கு தேசமும் குறிவைத்திருக்கிறது. தெலுங்கு தேசம் அந்த பதவியை எதிர்பார்ப்பதால் அதற்கும் ஒரு செக் வைத்துள்ளது பாஜக.
ஆந்திர பாஜக தலைவர் புரந்தேஸ்வரியை மக்களவையின் சபாநாயகர் அல்லது துணை சபாநாயகராக நியமிக்க பாஜக தலைமை திட்டமிட்டுள்ளது.
இவர்,தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனரான என்.டி.ராமராவின் மகள் மற்றும் தற்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவனேஸ்வரியின் அக்கா மற்றும் பாஜக தலைவர் என்பது கவனிக்கப்படக் கூடியதாக உள்ளது.
இருப்பினும் சொந்த பந்தத்தை வைத்தே நாயுடுவின் ஆசையை பாஜக கலைக்க முயன்றால் அதை நாயுடு எப்படி எடுத்துக் கொள்வார் என்பதை பொறுத்திருந்துதான் காண முடியும்.
இது ஒரு பக்கம் இருக்க மக்களவை நடைமுறையின்படி துணை தலைவர் பதவி எதிர்க்கட்சிகளுக்கு ஒதுக்கப்பட வேண்டும். அந்த வகையில், மக்களவை துணை தலைவர் பதவியை பெற இந்தியா கூட்டணி ஆர்வம் காட்டி வருகிறது. ஒருவேளை,துணை தலைவர் பதவி மறுக்கப்பட்டால், மக்களவை தலைவர் பதவிக்கு இந்தியா கூட்டணி சார்பில் வேட்பாளரை நிறுத்துவது குறித்தும் தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
இதில் சந்திரபாபு நாயுடு எப்போது வேண்டுமானாலும் இந்தியா கூட்டணிக்கு வந்துவிடுவார் என்று காங்கிரஸ் நம்பும் நிலையில் அவரது கட்சியைச் சேர்ந்தவர் துணை சபாநாயகராக வருவதை இந்தியா கூட்டணி தடுக்கும் விதமாக செயல்பட்டால் அது பின்னாளில் வேறு விதமாக செயலாற்றும்.
ஆனால் தெலுங்கு தேசம் மக்களவை சபாநாயகர் பதவி மேல் குறியாக உள்ளதால் இந்த பிரச்சனை எழாது என்கிறார்கள்.
பொறுத்திருந்து பார்ப்போம்.