தமிழ்நாடு வளர்கிற போதெல்லாம் இந்தியா வளர்கிறது! பிரதமர் மோடி பெருமிதம்!

தமிழ்நாடு வளர்கிற போதெல்லாம் இந்தியா வளர்கிறது! பிரதமர் மோடி பெருமிதம்!

 பா.ரமேஷ் ஆனந்தராஜ்,

 எப்போதெல்லாம் தமிழகம் வளர்கிறதோ, அப்போதெல்லாம் இந்தியா வளர்கிறது என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் பேசினார்.

 சென்னை பல்லாவரம் அல்ஸ்டாம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில், தாம்பரம்-செங்கோட்டை அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை, திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி இடையே 2 வழித்தடங்களிலுமான பயணிகள் ரெயில் சேவை, நாகை மாவட்டத்தின் உப்பு ஏற்றுமதியை அதிகப்படுத்தும் வகையில் ரூ.294 கோடி மதிப்பிலான திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி இடையேயான 37 கி.மீ. அகல ரெயில்பாதை திட்டம், மதுரை- செட்டிகுளம் இடையே 7 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட பாலம் (என்.எச்.785), நத்தம்-துவரங்குறிச்சி இடையேயான (என்.எச்.785) 4 வழிச்சாலை திட்டம் ஆகியவற்றை காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

   திருமங்கலம்-வடுகப்பட்டி இடையே (என்.எச்.744) 4 வழிச் சாலை திட்டத்துக்கும், வடுகப்பட்டி-தெற்கு வெங்கநல்லூர் (என்.எச்.744) இடையேயான 4 வழிச்சாலை திட்டத்துக்கு பிரதமர் மோடி காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார். ரூ.2 ஆயிரத்து 400 கோடி மதிப்பில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய இணை மந்திரி எல்.முருகன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

  விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: வணக்கம் தமிழ்நாடு என உரையை தொடங்கினார். தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ள புதிய திட்டங்கள் புத்தாண்டில் தமிழ்நாடு மக்களுக்கு பயன் தர உள்ளன. தமிழ்ப் புத்தாண்டு புதிய திட்டங்களின் தொடக்கமாக அமையும். தமிழகம் சிறந்த சாலை கட்டமைப்பைக் கொண்ட மாநிலமாக உள்ளது. புதிய திட்டங்களால் சென்னை, மதுரை, கோவை நகரங்கள் நேரடியாக பயன்பெறும். கட்டுமானங்கள், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் தமிழகத்தின் பண்பாட்டை பிரதிபலிக்கின்றன. டிஜிட்டல் பரிவர்த்தனையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. எப்போதெல்லாம் தமிழ்நாடு வளர்கிறதோ அப்போதெல்லாம் இந்தியா வளர்கிறது என சொன்னார்.