நாடார் பெண்களை இழிவாக பேசுவதா?ஆர்.எஸ்.பாரதியை தி.மு.க.விலிருந்து நீக்க கோரி ஆர்பாட்டம்!

ம.பா.கெஜராஜ்,
நாடார் சமுதாய பெண்களை பற்றியும், பெருந்தலைவர் காமராஜர் குறித்தும் இழிவாக பேசிய தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை கண்டித்து நாடார் சங்கங்கள், அமைப்புகள் சார்பில் முற்றுகை போராட்டம் இன்று நடைபெற்றது.
அதற்கு முன்னதாக ஆலந்தூர் நாடார் சங்க திருமண மண்டபம் அருகில் நாடார் அமைப்பு நிர்வாகிகள் ஏராளமானோர் திரண்டு போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த போராட்டத்தை பா.ம.க. மாநில பொருளாளர் கவிஞர் திலகபாமா போராட்டத்தை தொடங்கி வைத்தார். நாடார் சங்கங்கள் மற்றும் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் திரண்டு ஆர்.எஸ். பாரதிக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
'கைது செய்... கைது செய்... ஆர்.எஸ்.பாரதியை கைது செய்...' என்று கோஷமிட்டனர்.
போராட்டம் நடந்த இடத்துக்கு அருகில் ஆர்.எஸ். பாரதியின் வீடு உள்ளது. அதனை நோக்கி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நடந்து செல்ல முயன்ற போது போலீசார் தடுத்து நிறுத்தினர். உடனே அவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர்.
இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்து, அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இதுகுறித்து தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்து ரமேஷ் கூறும்போது, 'தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்து நாடார் சமுதாயத்தை இழிவாக பேசி வருகிறார். நாடார் பெண்கள் மட்டுமின்றி தமிழ் பெண்களையும் இழிவுபடுத்துகிறார்.
அவரை பெண் வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வேண்டும். தி.மு.க. அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டும். அவர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.பாரதியை கண்டித்து போராட்டம் நடத்துவோம்' என்றார்.
நாடார் அமைப்பினர் போராட்டத்தையொட்டி தில்லை கங்கா நகர் 26-வது தெருவில் உள்ள ஆர்.எஸ். பாரதி வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
2. எஸ்.ஆர்.எம். வேளாண்மை அறிவியல் கல்லூரியில் பயிற்சி!
ம.பா.கெஜராஜ்,
எஸ்.ஆர்.எம். வேளாண்மை அறிவியல் கல்லூரி செங்கல்பட்டு மாவட்டம் பாபுராயன்பேட்டை வேந்தர் நகரில் இயங்கி வருகிறது
இந்த கல்லூரியில் பி.எஸ்சி (ஹானஸ்) வேளாண்மை, பி. எஸ்சி (ஹானஸ்) தோட்டக்கலை இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள் 268 பேர் கல்லூரி வேளாண் மற்றும் தோட்டக்கலை பாட திட்டத்தின் கீழ் கிராமங்களில் தங்கி வேளாண் பணிகளை அறிந்து கொள்ளும் விதமாக பயிற்சி முகாம் நடைபெற்றது.
மதுராந்தகம், அச்சரப்பாக்கம், சித்தாமுர், ஓரத்தி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 3 மாதம் 26 குழுக்களாக தங்கி வேளாண்மை துறை மற்றும் அரசு சாரா நிறுவனங்களுடன் இணைந்து வேளாண் சாகுபடி பணிகள், நீர் மேலாண்மை, மண் வளம் உள்ளிட்ட வேளாண் பணிகள் பற்றி பயிற்சி பெற்றனர்.
முகாம் நிறைவு விழா கல்லூரி டீன் எம். ஜவஹர்லால் தலைமையில் நடைபெற்றது. எஸ்.ஆர்.எம். சமூக அறிவியல் துறை தலைமை பேராசிரியர் ஏ.அன்பரசன் அனைவரையும் வரவேற்றார். துணை பேராசிரியர் ஆர். ராஜசேகரன் கிராம வேளாண் பணி அனுபவங்கள், கண்காட்சி பற்றி விளக்கி கூறினார்.
எஸ்.ஆர்.எம். அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் தகவல் தொடர்பு இயக்குனர் ஆர்.நந்தகுமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ஆர்.அசோக் கவுரவு விருந்தினராக பங்கேற்று வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பட்டதாரிகளுக்கு அரசு துறைகளில் உள்ள ஏராளமான வாய்ப்புகள் பற்றி பேசினார்.
இதில் வேளாண் உதவி இயக்குனர் அருள் பிரகாசம், தோட்டக்கலை அலுவலர் திரிபுராசுந்தரி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி பேராசிரியை எஸ். ஆனந்தி நன்றி சொன்னார்.
3 ராகுல் காந்தியை பார்த்து பாஜக பயப்படுகிறது! பதவி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும்! முதலமைச்சர் பரபரப்பு அறிக்கை!
ம.பா.கெஜராஜ்,
ராகுல் காந்தியை மக்களவை செயலாக்க அலுவலகம் இன்று பதவி நீக்கம் செய்தது. இந்த உத்தரவு நேற்று சூரத் நீதிமன்றத்தில் வெளியான தீர்ப்பிலிருந்தே துவங்குவதாக அதற்கான அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் ராகுல் காந்தி மீதான நடவடிக்கையைத் திரும்பப் பெற வேண்டும். ராகுல் காந்தி மீதான நடவடிக்கை என்பது முற்போக்கு ஜனநாயக சக்திகள் மீதான தாக்குதல் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
இந்தியாவின் இளம் தலைவர் ராகுல் காந்தியை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்த பாசிச நடவடிக்கைக்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அகில இந்திய அரசியல் கட்சியின் பெருந்தலைவர், நாடாளுமன்ற உறுப்பினருக்குக் கூட கருத்துச் சொல்லும் ஜனநாயக உரிமை என்பது கிடையாது என்று மிரட்டும் தொனியில் இருக்கிறது இந்த நடவடிக்கை.
ராகுல் காந்தி பேசிய கருத்து அவதூறானது என்ற அடிப்படையில் சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் தண்டனை தரப்பட்டுள்ளது. இந்தத் தண்டனையை விதித்த நீதிபதி ஹெச்.ஹெச்.வர்மா, இந்த வழக்கில் மேல் முறையீடு செய்வதற்காகக் கால அவகாசத்தை ராகுல் காந்திக்கு வழங்கி இருக்கிறார். 'வழக்கை மேல் முறையீடு செய்வதற்கு வசதியாக தீர்ப்பை அமல்படுத்துவதற்கு 30 நாட்கள் தடை விதிக்கிறேன்' என்றும் சொல்லி இருக்கிறார்.
மேல்முறையீடு செய்வது என்பது தண்டனை பெற்ற எவருக்கும் உள்ள அடிப்படை உரிமை ஆகும். அதனைத் தனது தீர்ப்பிலேயே நீதிபதி சுட்டிக்காட்டி 30 நாட்கள் வழங்கி இருக்கிறார்.
அதற்குள் ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்வது ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் ஜனநாயக உரிமையைப் பறிப்பது ஆகும்.
2 ஆண்டு சிறைத் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்திவிடவில்லை. மாவட்ட நீதிமன்றம்தான் தீர்ப்பு தந்துள்ளது.
உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு இருக்கிறது. இறுதித் தீர்ப்பை வழங்க வேண்டியது உச்சநீதிமன்றம் ஆகும். இதற்காகவே காத்திருந்ததைப் போல 23-ஆம் தேதி தீர்ப்பு, 24-ஆம் தேதி பதவிப் பறிப்பு என்று நடவடிக்கை எடுத்துள்ளது பா.ஜ.க. அரசு.
ராகுல் காந்தியைப் பார்த்து எந்தளவுக்கு பா.ஜ.க. தலைமை பயந்து இருக்கிறது என்பது இதன்மூலம் தெரிகிறது. அவரது இந்திய ஒற்றுமைப் பயணம் இந்திய மக்களிடையே ஏற்படுத்தியிருக்கும் தாக்கமும் இதற்குக் காரணம் ஆகும். நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி வைத்த குற்றச்சாட்டுகளுக்குச் சரியான பதிலை ஒன்றிய அரசில் இதுவரை யாரும் சொல்லவில்லை.
மீண்டும் அவரை நாடாளுமன்றத்துக்குள் அனுமதித்தால், தங்களது அரசியலுக்கு நெருக்கடி ஏற்படும் என அஞ்சியே ராகுல் காந்தியைத் தகுதிநீக்கம் செய்துள்ளார்கள்.
இந்தத் தகுதிநீக்க நடவடிக்கைகளின் மூலமாக ஜனநாயகம் என்ற சொல்லை உச்சரிக்கும் தகுதியை பா.ஜ.க. இழந்துவிட்டது.
நாடாளுமன்றத்தில் எடுத்து வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்லாமல், கேள்வி கேட்டவரை அங்கிருந்து அப்புறப்படுத்துவது ஒன்றிய அரசுக்கு அழகல்ல.
இந்த நடவடிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ராகுல் காந்தி மீதான நடவடிக்கை என்பது முற்போக்கு ஜனநாயக சக்திகள் மீதான தாக்குதல் என்பதை உணர்ந்து இந்திய அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து இதனை எதிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
அதே போல் ராகுல் காந்தியின் பதவி நீக்கத்துக்கு கனிமொழி, வைகோ உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
திமுக எம்பி கனிமொழி தனது ட்வீட்டில், மக்களவையில் எதிர்க்கட்சிகளின் வாயை அடைக்கவே ராகுல் காந்தியை எம்பி பதவியில் இருந்து நீக்கியுள்ளனர். இது பழி வாங்கும் நடவடிக்கை. நமது குரல்கள் சத்தமாக மாறும், ஜனநாயகத்தின் கொள்கைகளை மதிக்காத சக்திகளுக்கு எதிரான நமது பிணைப்பு மேலும் வலுவடையும். நாங்கள் ராகுல் காந்தியுடன் நிற்கிறோம் என்று அவர் பதிவிட்டுள்ளார்.
4. ஹிட்லர் முசோலினி இடிஅமீன் ஆட்சியைப் நரேந்திர மோடி அரசு செயல்படுகிறது!
ம.பா.கெஜராஜ்,
ஜெர்மனியில் ஹிட்லர் நடத்திய நாசிசத்தைப் போல, இத்தாலியில் முசோலினி நடத்திய பாசிசத்தைப் போல, உகண்டாவில் இடிஅமீன் நடத்திய கொடுங்கோல் ஆட்சியைப் போல, நரேந்திர மோடி அரசு செயல்படுகிறது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கொதித்திருக்கிறார்.
அதேபோல, பாஜகவை கண்டித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மிக ஆவேசமாக பேசியுள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது; காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல் காந்தி பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப் பேசினார் என்று குஜராத் மாநிலம், சூரத் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட அவதூறு வழக்கில், விசாரணை என்ற பெயரில் போலி நாடகம் நடத்தி, இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது நீதியைக் குழிதோண்டிப் புதைத்த செயலாகும்.
இதைக் காரணம் காட்டி, 24 மணி நேரத்திற்குள், ராகுல் காந்தியை நாடாளுமன்ற உறுப்பினர் என்ற தகுதியை நீக்கிவிட்டதாக மக்களவையில் மிருகத்தனமாக பெரும்பான்மை கொண்டிருக்கின்ற ஆணவத்தில் பாஜக இந்த அக்கிரமச் செயலைச் செய்திருக்கிறது.
ஜெர்மனியில் ஹிட்லர் நடத்திய நாசிசத்தைப் போல, இத்தாலியில் முசோலினி நடத்திய பாசிசத்தைப் போல, உகண்டாவில் இடிஅமீன் நடத்திய கொடுங்கோல் ஆட்சியைப் போல, நரேந்திர மோடி அரசு செயல்படுகிறது. விநாசகால விபரீத புத்தி என்று கூறுவதற்கு ஏற்ப இந்தத் தகுதி நீக்கத்தை செய்திருக்கிறது.
இரண்டு ஆண்டுகள் தண்டனை என்று சொன்னாலும், பிணையில் வருவதற்கு ஒரு மாத கால அவகாசத்தை நீதிமன்றமே தந்திருக்கிறது. நாட்டு மக்கள் இதற்கெல்லாம் சேர்த்து நரேந்திர மோடி அரசுக்கு தண்டனை கொடுப்பார்கள்'' என்று வைகோ காட்டமாக தெரிவித்துள்ளார்.
5. கூடுதல் தலைமைச் செயலாளருடன் திருப்பத்தூர் ஆட்சியர் ஆய்வு!
ஆர்.ரமேஷ்,
திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி ஊராட்சி ஒன்றியம் இராச்சமங்கலம் ஊராட்சியில் வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் என்னை வித்துக்கள் இயக்கம் திட்டத்தின் கீழ் 2.50 ஏக்கர் பரப்பளவில் நிலக்கடலை செயல் விளக்க திடலை மாவட்ட கண்காணிப்பு அலுவலர், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் திட்ட இயக்குனர் தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டம் திரு.தென்காசி.எஸ்.ஜவஹர்.இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கர பாண்டியன்,இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.இ.வளர்மதி, வருவாய் கோட்டாட்சிபர் திருமதி.இ சுமி, வேளாண்மை இணை இயக்குநர் திருமதி.பாலா, துணை இயக்குனர் திரு.பச்சையப்பன், உதவி இயக்குனர் திருமதி.இராகினி, வட்டாட்சியர் சிவப்பிரகாசம் ஆகியோர் இருந்தனர்.
மேலும், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலக கூட்டரங்கில் பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
தொடர்ச்சியாக கந்திலி ஊராட்சி ஒன்றியம் மட்றப்பள்ளி ஊராட்சியில் ரூ.14.37 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள வாரச்சந்தை கடைகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் திட்ட இயக்குனர் தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டம் திரு.தென்காசி.எஸ்.ஜவஹர்.இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
மேலும், புதூர்நாடு அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் 5 பயனாளிகளுக்கு குழைந்தை நல பரிசு பெட்டகங்கள் மற்றும் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.
மேலும், புதூர்நாடு அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ரூ.28.84 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பிரத்தியேக பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு பிரிவு கட்டடத்தை மாவட்ட கண்காணிப்பு அலுவலர், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் திட்ட இயக்குனர் தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டம் திரு.தென்காசி.எஸ்.ஜவஹர்.இ.ஆ.ப., அவர்கள் பாப்டையிட்டு ஆய்வு செய்தார்கள். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கர பாண்டியன்,இ.ஆ.ப., வருவாய் கோட்டாட்சியர் திருமதி. லட் சுமி, இனை இயக்குனர் சுகாதாரப் பணிகள் மரு.செந்தில், வட்டாட்சியர் திரு.சிவப்பிரகாசம், அரசு மருத்துவர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அடுத்ததாக மட்றப்பள்ளி முதல் புதூர்நாடு சாலை வரையில் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.18 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் 13 கி.மீட்டர் தொலைவிற்கு மலைப்பாதை புதுப்பிக்கும் பணிகளும் நேரடியாக ஆய்வு செய்யப்பட்டது.