கொடநாடு கேஸ் முடிவுக்கு வந்தால் பல உண்மைகள் வெளியாகும்! வி.கே.சசிகலா!

ம.பா.கெஜராஜ்,
கொடநாடு கேஸ் முடிவுக்கு வந்தால் பல உண்மைகள் வெளியாகும், "எங்களிடம் உள்ள போலீஸ் அப்படி.. இப்படி.. என பேசுறீங்களே.. ஒரே ஒரு கொட நாடு கேஸை முடிக்கக் கூட உங்களுக்கு வக்கில்லையா?" என்று சசிகலா ஆவேசமாக பேட்டியளித்தார்.
நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்த நிலையில், சென்னையில் உள்ள தனது போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் சசிகலா. அவர் கூறியதாவது:
திமுக அரசை பார்த்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி கேட்காமல் இருக்கலாம், ஆனால் இனி நான் கேள்வி கேட்பேன்.
திமுக அரசியல் என்னென்ன குளறுபடிகள் எல்லாம் நடந்து கொண்டிருக்கின்றன. போதுமான அரசு பேருந்துகள் இல்லாமல் மக்கள் கஷ்டப்படுகிறார்கள். மாணவர்களுக்கு சீருடை தாமதமாக வழங்கப்படுகிறது என எத்தனையோ சொல்லிக் கொண்டே போகலாம்.
இதை பற்றி எல்லாம் ஊடகங்களும், பத்திரிகைகளும் கேள்வி கேட்பதில்லை என சசிகலா சொல்ல, அதற்கு நிருபர்கள் சிலர் பதிலளிக்க முயன்ற போது நீங்கள் எந்த பத்திரிக்கை என்று கேட்டு குரலை ஏற்றி பேசினார். எதிர்க்கட்சித் தலைவர் கேட்கல.. நான் கேட்கிறேன்யா.. அரசாங்கத்தை கேட்கக்கூடிய துணிச்சல் எனக்கு இருக்கு. எனக்கு பயம் கிடையாது.
ஒரு கொடநாடு கேஸை வைத்துக் கொண்டு இந்த திமுக என்ன வேலை எல்லாம் செஞ்சுட்டு இருக்குனு ஊருக்கே தெரியது. உலகத்துக்கே தெரியுது.
உங்கள் விசாரணை ஏன் ஆமை வேகத்தில் போகுது? போலீஸை அப்படி வைத்திருக்கிறோம்.. இப்படி வைத்திருக்கிறோம்னு சொல்றீங்களே.. ஒரு கொடநாடு கேஸை கூட முடிக்க உங்களுக்கு வக்கில்லையா? கொடநாடு கேசுல யார் வேண்டுமானாலும் நடவடிக்கை எடுங்க. அதை ஏன் சீக்கிரம் செய்ய மாட்றீங்க? யாருக்கு சாதகமாக நீங்க நடக்குறீங்க?
கொடநாடு கேஸ் எப்போது முடிகிறதோ.. அப்போதுதான் உண்மை என்னவென்று உலகத்துக்கு தெரியவரும் என சசிகலா சொன்னார்.