லாக் அப் டெத்:- ஆறு மணி நேரம் விசாரித்த மாஜிஸ்திரேட்!

Ma.ba.Gajaraj,
சென்னையில் நடந்த லாக் அப் டெத் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் மாஜிஸ்திரேட்டு ஆறு மணி நேரம் விசாரித்தார். அப்போது பல முக்கிய ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிகிறது.
இது பற்றின விவரம் வருமாறு,
சென்னை, செங்குன்றம் முந்திரித்தோப்பு, அலமாதியைச் சேர்ந்த சவுரிராஜன் மகன் ராஜசேகர், 30.பழைய குற்றவாளியான இவர் மீது, 23க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
இந்நிலையில் அவரை கொடுங்கையூர் காவல் நிலைய போலீசார், நேற்று முன்தினம் காலை, ஒரு குற்ற வழக்கில் விசாரிக்க அழைத்துச் சென்றனர். அன்று மாலை, ராஜசேகர் திடீரென மயங்கி விழுந்ததால், போலீசார் அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்து, பின் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள், ராஜசேகர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.அவர் காவல் நிலையத்தில் இறந்ததாக தகவல் பரவியது. இதை மறுத்த போலீசார், நகையை பறிமுதல் செய்ய வெளியில் அழைத்துச் சென்ற போது, ராஜசேகர் மயங்கி இறந்ததாக கூறினர்.
ராஜசேகர் இறந்தது தொடர்பாக நேற்று காலை 8:00 மணியளவில், கொடுங்கையூர் காவல் நிலையத்தில், கெல்லீஸ் சிறார் 12வது நீதிமன்ற மாஜிஸ்திரேட் லட்சுமி, விசாரணை நடத்தினார். அப்போது, கூடுதல் கமிஷனர் அன்பு, இணை கமிஷனர் ராஜேஸ்வரி, துணை கமிஷனர் ஈஸ்வரன், உதவி கமிஷனர் தமிழ்வாணன் உள்ளிட்டோர் இருந்தனர்.
ராஜசேகரை அழைத்து வந்தது எப்போது, அவர் எங்கு மயக்கம் அடைந்தார், இறந்த நேரம் என்ன என விசாரித்த போது, கொடுங்கையூர், எவரெடி காலனி அருகிலுள்ள 'போலீஸ் பூத்' பகுதியில், ராஜசேகர் மயங்கியதாக போலீசார் கூறினர்.
மாஜிஸ்திரேட் லட்சுமி, அங்கு சென்று ஆய்வு, பொதுமக்களிடம் விசாரித்து, காவல் நிலைய கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தார்.
கொடுங்கையூர் காவல் நிலையத்தில், ராஜசேகரின் தாய் உஷாராணி, சகோதரர் மணிகண்டன் ஆகியோரிடம் மாஜிஸ்திரேட் விசாரித்த போது, தன் மகன் ராஜசேகருக்கு வலிப்பு நோய் கிடையாது என்றும், அவரை, விசாரணை என்ற பெயரில், போலீசார் அடித்துக் கொன்று விட்டதாகவும் கதறினார்.
இதையடுத்து, மாஜிஸ்திரேட் லட்சுமி, ஸ்டான்லி மருத்துவமனைக்கு சென்றார். அவரது முன்னிலையில், நேற்று மதியம் 2:30 மணியளவில் பிரேத பரிசோதனை துவங்கி, 4:30 மணிக்கு முடிந்தது. இது, வீடியோ பதிவும் செய்யப்பட்டது. மாஜிஸ்திரேட் விசாரணை அறிக்கை மற்றும் பிரேத பரிசோதனை முடிவை வைத்து, ராஜசேகர் எப்படி இறந்தார் என தெரியவரும்.
இந்த வழக்கில், இரு போலீசார், பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.கடந்த ஏப்., 18ம் தேதி, தலைமைச் செயலக காலனி போலீசாரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த இளைஞர் விக்னேஷ், மர்மமான முறையில் இறந்தார். தற்போது, மீண்டும் விசாரணை கைதி இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராஜசேகர் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து, பத்திரிகை செய்தியின் அடிப்படையில், தாமாக முன்வந்து, நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட மாநில மனித உரிமைகள் ஆணையம், 'கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி உயிரிழந்தது தொடர்பாக, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர், நான்கு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டு நோட்டிஸ் அளித்திருக்கிறது.
இந்நிலையில் பணியில் கவனக் குறைவாக செயல்பட்ட கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் பொன் ராஜ், சப் - -இன்ஸ்பெக்டர் கன்னியப்பன், தலைமை போலீஸ்காரர்கள் ஜெயசேகர், மணிவண்ணன், முதல் நிலைக்காவலர் சத்தியமூர்த்தி ஆகிய ஐந்து பேர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை, கமிஷனர் சங்கர் ஜிவால் பிறப்பித்தார்.
ஏற்கனவே, கடந்த ஜன., 14ம் தேதி, கொடுங்கையூர் காவல் நிலையத்தில், சட்டக் கல்லூரி மாணவர் அப்துல் ரஹீம் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் குறிப்பிடத்தக்கது.