எம்.எல்.ஏ.வின் அடியாட்களால் தீக்குளிப்பா?  புகார்களை கண்டு கொள்ளாததால் தற்கொலைக்கு முயலும் அப்பாவிகள்!

ஜி.கே.சேகரன்,

  திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கதவாளம் பகுதியை சார்ந்த  நந்தன்(80) வசித்து வருகிறார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தனக்கு சொந்தமான 3 சென்ட் இடத்தை கோவிலுக்கு அளித்து விட்டாராம்.

 

  இருந்த போதும் அந்த இடத்தை ஒப்படைக்கவில்லை என்று தெரிகிறது.

  இதில் சிறு சலசலப்பு ஏற்படவே மேற்படி முதியவர் நந்தன் ஆட்சியர் அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

  இந்த விவகாரம் தொடர்பாக லோக்கல் எம்.எல்.ஏ. விடம் பொதுமக்கள் சொன்னதாக கூறப்படுகிறது.

  இந்நிலையில் 10 பேர் நந்தனை சந்தித்து, கோவிலுக்கு அளிப்பதாக சொன்ன இடத்தை ஒப்படைக்க கேட்டுள்ளார்கள். மேலும் எம்.எல்.ஏவிடம் சொல்லி வேறு இடத்தை வாங்கி தருவதாகவும் வாக்குறுதி அளித்துள்ளனர்.

    இந்நிலையில் அவரை சிலர் மிரட்டியதாகவும், எம்.எல்.ஏ. ஒருவரின் பெயரை குறிப்பிட்டத்ராகவும் கூறப்படுகிறது.

 இதனால் என மனம் உடைந்த நந்தன் இன்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள தண்ணீர் தொட்டி கீழே யாருக்கும் தெரியாமல் மண்ணெண்ணெயை தன் மீது ஊற்றி தீக்குளித்து உள்ளார்.

அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த பாதுகாப்பு பணி போலீசார் நந்தன் மீது பற்றி எரிந்த தீயை அனைத்து  திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

   சம்பவம் அறிந்து மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் மற்றும் துணைக் கண்காணிப்பாளர் சாந்தலிங்கம் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 தீக்குளிக்க காரணம் யார் என போலீஸார் விசாரிக்கையில் பாலாஜி, சிவா, செந்தில் சாமிநாதன், ராஜேந்திரன், கண்ணன், திருப்பதி, என பல பெயரை நந்தன் குறிப்பிட்டார்.

 அதைத் தொடர்ந்து  திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

   குறிப்பு:- மேற்படி நந்தனுக்கு சொந்தமான பசுமாடு ஒன்று கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் செத்த போது, அதை அடக்கம் செய்ய உள்ளூரிலிருந்து எவருமே வரவில்லையாம்.

 ஆகவே நந்தன் வெளியூரிலிருந்து ஆட்களை வரவழைத்து இறந்த பசுவை அகற்றியுள்ளார்.

 இந்நிலையில் அவர் கோவிலுக்கு அளிப்பதாக சொன்ன நிலத்தை ஒப்படைக்காததால் அவரை ஊரைவிட்டு விலக்கி வைத்ததாக சொல்லப்படுகிறது.

 இதனால் நந்தன் யாரைப் பார்த்தாலும் ஆபாசமாக பேசுவாராம். அப்படியிருக்க நேற்று கதவாளம் ஊராட்சிமன்ற பெண் உதவியாளர் பாக்கியலஷ்மி அந்தபக்கம் சென்ற போது, அவரை முதியவர் நந்தன் கல் எடுத்து அடித்துள்ளார். அதில் பாக்கியலஷ்மி காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

   இது தொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

   இந்நிலையில் தான் நந்தன் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்தார்.

 திருப்பத்தூரைப் பொறுத்தவரை எந்த அதிகாரியிடம் புகார் அளித்தாலும் அவை குப்பை கூடைக்குத்தான் அனுப்பிவைக்கபடுகிறது என்பது தனிக்கதை.

   குறிப்பாக சொல்ல வேண்டுமானால்  ஊரைவிட்டு விலக்கி வைக்கும் சம்பவம் இம்மாவட்டத்தில் தொடர்கதையாக உள்ளது.