திமுக கூட்டணியை வீழ்த்தி பாஜக ஆட்சியை அமைப்போம்! பிரதமர் மோடி பேச்சு!

திமுக  கூட்டணியை வீழ்த்தி பாஜக ஆட்சியை அமைப்போம்! பிரதமர் மோடி பேச்சு!

கே.ஏ.ஜெகதீஸ்வரி,

 திமுகவை வீழ்த்தி பாஜக ஆட்சியை அமைப்போம் என்று பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் பேசினார்.

 திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகேப்டரில் கன்னியாகுமரிக்கு வந்த பிரதமர் மோடி, அகஸ்தீஸ்வரத்தில் உள்ள விவேகானந்தா கல்லூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பேசினார்.

 தமிழகத்தில் இந்தியா கூட்டணி எடுபடாது. திமுகவை வீழ்த்தி பாஜக ஆட்சியை அமைப்போம். இந்தியா கூட்டணி 2ஜி உள்ளிட்ட ஊழல்கள் நிறைந்த கூட்டணி. இந்தியா கூட்டணி ஊழல் செய்வதற்கு தான் போராடுகிறது.

 மீனவர்களின் நலனுக்காக பாஜக அரசு பாடுபட்டு வருகிறது. வஉசி துறைமுகத்தை பாஜக புதுப்பித்துள்ளது. வஉசி துறைமுகம் தற்போது மீனவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஜல்லிக்கட்டுக்கு திமுக தடை விதித்தது, ஆனால் பாஜக அந்த தடையை நீக்கியது.

 பாஜக கன்னியாகுமரியை நேசிக்கிறது, ஆனால் திமுக காங்கிரஸ் கூட்டணி கன்னியாகுமரி மக்களை ஏமாற்றுகிறது.

 இந்தியா கூட்டணியால் தமிழகத்தில் எந்தவிதமான வளர்ச்சித் திட்டங்களையும் முன்னெடுக்கவே முடியாது. அவர்களுடைய வரலாற்றை எடுத்துப் பார்த்தால் மோசடியும், ஊழலும்தான் முதன்மையாக இருக்கும். அவர்களுடைய கொள்கையே அரசியலில் கொள்ளை அடிக்க வேண்டும் என்ற ஒற்றை இலக்குதான். ஒரு பக்கம் பாஜகவின் வளர்ச்சி திட்டங்கள், மற்றொரு பக்கம் இந்தியா கூட்டணியில் கோடிக்கணக்கான ஊழல்கள் இருக்கின்றன.

 5ஜி போன்ற திட்டங்களை பாஜக மக்களுக்கு கொடுக்கிறது. பாஜகவின் பெயரில் டிஜிட்டல் இந்தியா என்ற திட்டம் இருக்கிறது. ஆனால் இந்தியா கூட்டணியில் லட்சக்கணக்கான கோடிகளில் நடைபெற்ற ஊழல்தான் இருக்கின்றன. 2ஜி ஊழலில் பெரும் பங்கு வகித்தது திமுக தான்.

 பாஜக ஏராளமான விமான நிலையங்களை கட்டியது, ஆனால் இந்தியா கூட்டணியில் நாட்டின் பாதுகாப்புடன் விளையாடும் ஹெலிகாப்டர் ஊழல் தான் நடந்தது. இந்தப் பட்டியலை சொன்னால் நீளமாக சென்று கொண்டே இருக்கும்.

 திமுக தமிழகத்தின், தமிழ் பண்பாட்டின் எதிரி. நமது கடந்த கால பெருமைகளையும், பாரம்பரியத்தையும் கண்மூடித்தனமாக எதிர்க்கின்ற எதிரி. உச்ச நீதிமன்றமே தமிழகத்தை கண்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது, நமது கலாச்சாரத்தின் மீதும், பண்பாட்டின் மீதும், பாரம்பரியத்தின் மீதும் எப்பொழுதும் திமுக வெறுப்பினைக் கக்கிக் கொண்டிருக்கிறது.

 தமிழகத்தின் பெருமையை, அடையாளத்தை பாதுகாக்க பாஜக என்றும் முன்னணியில் இருக்கிறது. அவர்களின் தூற்றல் பேச்சுகளை நாங்கள் கண்டு கொள்வதேயில்லை என்று பேசினார்.

  முன்னாதாக பாஜக தலைவர் அண்ணாமலை பேசினார். மேலும் பாஜக மகளிர் அணியினர் பிரதமர் மோடிக்கு பிரமாண்ட மலர் மாலை அணிவித்தனர். அப்போது சமீபத்தில் அக்கட்சியில் இணைந்த விஜயதாரணியும் இருந்தார்.