போதையில் ஆனந்த குத்தாட்டம்! அரசு ஆஸ்பத்திரியில் ரகளை செய்தவர் கைது!

க.பாலகுரு,

மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நள்ளிரவு வடிவேல் என்பவர் சரக்கு ஊத்திக்கொண்டு ரகளை செய்த சம்பவம் மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.      

 திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.  இம்மருத்துவமனைக்கு மன்னார்குடியையொட்டி உள்ள சுற்றுவட்டார கிராமங்கள் மட்டுமன்றி முத்துப்பேட்டை, கோட்டூர் , நீடாமங்கலம் முதலான பகுதிகளில் இருந்தும் தினசரி 700க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

 இருப்பினும் இம்மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லாத காரணத்தால் நோயாளிகள் மிகவும் அவதியுற்று வருகின்றனர்.  குறிப்பாக நோயின் தன்மைக்கு ஏற்ப சிகிச்சை அளிக்க கூடிய சிறப்பு மருத்துவர்கள் இல்லாத சூழ்நிலையில் ஏற்பட்டுள்ளது .

 இத்தகைய சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இம்மருத்துவமனையில் முச்சுதிணறல் காரணமாக சிகிச்சைக்காக உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு ட்ரிப்ஸ் (சிலைன்) போடும் நிலை ஏற்பட்டுள்ளது.  ஆனால் நோயாளி அனுமதிக்கப்பட்ட வார்டில் செவிலியர் பணியில் இல்லாத நிலையில் நோயாளி அவதிபட்டிருந்த நிலையினை கண்ட அங்கிருந்த ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிவந்த பெண் துப்புரவு பணியாளர் நோயாளிக்கு ட்ரிப்ஸ் போட்டுள்ளார்.

 இதனை கண்ட அங்கிருந்த நோயாளியின் பாதுகாவலர் ஒருவர் அதனை தனது செல்போனில் பதிவுசெய்து சமூகவலைதளங்களில் வைரலாக்கியுள்ள இச்சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

 இந்த நிலையில் நேற்று நள்ளிரவு மன்னார்குடி விழல்கார தெரு பகுதியை சேர்ந்தவர் வடிவேல் என்பவர் சரக்கு அடித்துவிட்டு போதையில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பகுதிக்குள் நுழைந்து அங்கு உள்ள மேஜை நாற்காலிகளை உடைத்து பெரும் ரகளையில் ஈடுபட்டார். அதுமட்டுமில்லாமல் போதைக்கூத்தாடி ரகளை செய்தார்.

 அப்போது அங்கு மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்த பெண் மருத்துவர் மற்றும் செவிலியர்கள் அலறியடித்து ஓடினர். அவர்களுடன் ஒப்பந்த தொழிலாளர்கள் வெளியே ஓடிவிட்டனர்.

  வடிவேலு நாற்காலி உள்ளிட்ட ரூ 50 ஆயிரம் மதிப்பிலான அரசு பொருட்களை சேதப்படுத்தியும் . பணி மருத்துவர் , செவிலியர்களை பணி செய்யவிடாமல் உயிர் பயம் காட்டி அச்சுறுத்தியது தொடர்பாக  பணி மருத்துவர்  சுந்தரவள்ளி போலிசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் மன்னார்குடி டிஎஸ்பி. அஸ்வத் ஆண்டோ தலைமையில் காவல்துறையினர் வடிவேலுவை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளது.

 காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட வடிவேலுவை மருத்துவர்கள் ஆலோசனையின் படி சென்னை மனநல மருத்துவமனையில் சேர்க்க உத்தரவிடப்பட்டது.