பெண்கள் நடத்திய புரட்சியில் விளைந்ததே சர்வதேச மகளிர் தினம்!

டி.இ.முகமது,
இன்று மார்ச் 8. சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. மகளிர் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது எபதைப்பற்றி ஒரு நினைவூட்டல்.
உலகளவில் பெண்களின் நிலை அடக்கி ஒடுக்கப்பட்டு இருந்த காலகட்டத்தில் தான் "மாதர் தம்மை இழிவு செய்யும் மடைமை ஒழிந்திட வேண்டும்" என்று பாரதியார் தமிழகத்தில் பாடிக்கொண்டிருந்தார்.
சம காலத்தில் 1917 மார்ச் 8 அன்று ரஷ்யாவில் பெண் தொழிலாளர்கள் புரட்சியைத் தொடங்கினார்கள். மற்ற உழைக்கும் மக்களும் இணைந்தார்கள். லெனின் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் ஆதரவாகக் களம் இறங்கின. எட்டு நாட்களில் மன்னராட்சி வீழ்த்தப்பட்டது. இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டது.
நவம்பர் மாதத்தில் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் உலகின் முதல் சோஷலிஸ்ட் புரட்சி நடந்து, லெனின் தலைமையில் புதிய அரசு அமைந்தது. எல்லாருக்கும் எல்லாம், ஆண் பெண் சமத்துவம் என்ற நிலை பெருமளவில் நிலைநாட்டப்பட்டது.
பின்னர் 1921ஆம் ஆண்டில் 'கம்யூனிஸ்ட் பெண்கள் அகில உலக மாநாடு மாஸ்கோவில் நடைபெற்றது. ரஷ்யப் பெண் தொழிலாளர்கள் 1917 மார்ச் 8 அன்று தொடங்கிய வரலாற்றுச் சிறப்பு மிக்க புரட்சியை நினைவு கூறும் வகையில், இனிமேல் மகளிர் தினத்தை நிரந்தரமாக மார்ச் 8 அன்று நடத்துவது என்று மாநாடு முடிவு செய்தது. அது முதல் மகளிர் தினம் மார்ச் 8 அன்று கொண்டாடப்பட்டு வருகிறது என கூறப்பட்டாலும் கூட அதற்கும் முன்னரே கிளாரா என்கிற ஜெர்மானிய பெண் இதற்காக வித்திட்டவர் எனலாம்.
1850-களில் தொழிற்சாலை, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் கால்பாதிக்க தொடங்கினர். ஆண்களுக்கு நிகராக பெண்கள் வேலை செய்தாலும் சம்பளத்தில் தொடர்ந்து அநீதி இழைக்கப்பட்டது. அது வேலை செய்யும் பெண்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் 1910-ம் ஆண்டு டென்மார்க் கோபன்ஹேகனில் மாபெரும் மாநாட்டை நடத்தினர். அதில் கலந்து கொண்டவர்களில் முக்கியமானவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த கிளாரா ஜெட்கின்.
அந்த மாநாடு பெண்களுக்கு சம உரிமை, ஊதிய உயர்வு, நாளொன்றுக்கு 8 மணி நேரம் மட்டுமே வேலை நேரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தப்பட்டது. இதன் காரணமாக கிளாரா ஜெட்கின் புகழானது உலகெங்கிலும் பரவ தொடங்கியது.
பெண்களின் உரிமைக்காக அவர்களை ஒருங்கிணைத்து தொடர்ந்து குரல் கொடுத்து வந்த கிளாரா, பெண்களின் உரிமைகளை உலகம் முழுவதும் நிலைநாட்டும் விதத்தில் ஒரு குறிப்பிட்ட நாளை பெண்கள் தினமாக அனுசரிக்க வேண்டும் என்று கருதினார். இதனை தொடர்ந்து மகளிர் தினம் முதன்முறையாக 1911, மார்ச் 19-ல் ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கொண்டாடப்பட்டது. ஆனால் 1913-ம் வருடம் மார்ச் 8ம் தேதி பெண்களுக்கான வாக்குரிமை அளிக்கப்பட்டது. இதன் காரணமாக அந்த தினத்தை நினைவுபடுத்தும் வகையில் மார்ச் 8-ம் தேதி அன்று உலகம் முழுவதும் சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நாளில் முன்னேற தோழமையோடு கரம் பற்றுங்கள் என்பதே ஒட்டு மொத்த பெண் இனத்தின் எதிர்பார்ப்பு.