அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் அடக்கம்! முதலமைச்சர் ஆளுநர் நேரில் அஞ்சலி!!

அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் அடக்கம்! முதலமைச்சர் ஆளுநர் நேரில் அஞ்சலி!!

ம.பா.கெஜராஜ்,

தமிழ்நாடு சட்டபேரவையின் முன்னாள் எதிர்கட்சித் தலைவரும், தே.மு.தி.கவின் நிறுவனத்தலைவருமான விஜயகாந்த் உடலுக்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவரது உடல் நல் அடக்கம் செய்யப்பட்டது. தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதலமைச்சர் ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். 

 தேமுதிக கட்சியின் நிறுவனத் தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் நேற்று காலை(டிசம்பர் 28) காலமானார். சென்னை கோயம்பேடு தேமுதிக தலைமைக் கழகம் மற்றும் தீவுத்திடலில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு அவரது ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

அதன்பின், சுமார் 2:45 மணியளவில், விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. அப்போது வழிநெடுக நின்று இருந்த விஜயகாந்தின் ஆதரவாளர்கள் கேப்டன்.. கேப்டன் என ஆர்ப்பரித்து தங்களது இறுதி அஞ்சலி செலுத்தினர். 

   விஜயகாந்தின் இறுதிச்சடங்கினைப் பார்க்க தேமுதிக அலுவலகத்தில் எல்.இ.டி திரை அமைத்திருந்தனர்.

 பொதுமக்களுக்கு அனுமதி இல்லாததால் கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தின் வாயிலில் பெரிய எல்.இ.டி திரை அமைக்கப்பட்டு இருந்தது. இறுதிச்சடங்கு நடக்கும் இடம் மிகவும் குறுகிய இடமாக இருப்பதாலும், முக்கிய நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாலும் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

  முன்னதாக தீவுத்திடலில் இருந்து தேமுதிக தலைமை அலுவலகம் நோக்கி புறப்பட்ட விஜயகாந்தின் இறுதி ஊர்வல வாகனத்தில் விஜயகாந்தின் குடும்பத்தினர் அமர்ந்துள்ளனர். 

 ஊர்வலத்தின் போது  ஈவெரா சாலை வழியாக செல்ல பிறவாகனங்களுக்கு தற்காலிகமாக அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.  

  குறித்த நேரத்தை கடந்தும் ஊர்வலம் நீண்டுக்கொண்டே இருந்தது.

 விஜயகாந்துக்கு 72 துப்பாக்கிகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

டூப் போடாத கடிகார சீன்.

 தயாரிப்பாளர் அருணா குகன் விஜயகாந்த் பற்றி எக்ஸ் தளத்தில் பதிந்ததாவது, ''விஜயகாந்த் சார் ஸ்டன்ட்களுக்கு பெயர் பெற்றவர். அவர் தனது பட சண்டைக்காட்சிகளில் தானே செயல்பட்டார். சண்டைக் காட்சிகளில் கால்களை 360 க்கு சுழற்றும் தனித் திறமை அவருக்கு இருந்தது.

  சேதுபதி ஐ.பி.எஸ். படத்தில் அவர் செய்த ரிஸ்க் ஆன ஆக்ஷன் சீக்வென்ஸ் இது. விஜயகாந்த் எப்படி ஒரு காரின் மீது சண்டையிட்டு மற்றொரு காரின் பானட்டில் குதிப்பார், அவை சகாப்தத்தின் சிறந்த அதிரடி காட்சிகளில் ஒன்றாகும்.

 சேதுபதி ஐபிஎஸ் படத்தில் ஒரு கடிகார கோபுர காட்சி இடம் பெற்றது. அதில் நடிகர் விஜயகாந்த் டூப் போடவில்லை.

 எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த்.. டிசம்பர் மாதம் மறைந்த அரசியல் தலைவர்கள்..!

   சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்த எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் விஜயகாந்த் ஆகிய மூன்று பேருமே டிசம்பர் மாதத்தில் காலமாகி உள்ளனர் என்ற அபூர்வ ஒற்றுமை அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

   மக்கள் திலகம் எம்ஜிஆர் டிசம்பர் 24ஆம் தேதி காலமானார். புரட்சி தலைவி ஜெயலலிதா டிசம்பர் 5ஆம் தேதி காலமானார். இந்த நிலையில் டிசம்பர் 28ஆம் தேதி புரட்சி கலைஞர் விஜயகாந்த் காலமாகியுள்ளார்.

   மூவரும் திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள் என்பதும் மூவரும் ஆளுமையில் உள்ள தலைவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி மூவருமே ஏழை எளிய மக்களுக்காக பாடுபட்டவர்கள் என்றும் குறிப்பாக மூவருமே ஏழை எளிய மக்களின் பசியை ஆற்றியவர்கள் என்பதில் ஒற்றுமை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

   திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்த எம் ஜி ஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகிய மூவருமே டிசம்பர் மாதத்தில் மறைந்துள்ள ஒற்றுமையை  பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.