வேலூரில் இறந்தவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளது! சென்னை மற்றும் வடமாவட்டங்களில் வாக்காளர்கள் எண்ணிக்கை விர்ர்ர்ர்ர்!

ம.பா.கெஜராஜ்,
தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. அதில் சென்னை மற்றும் வடமாவட்டங்களில் உள்ளடங்கிய திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டையில் அதிக வாக்காளர்கள் இணைந்திருக்கிறார்கள்.
இது பற்றின விவரம் வருமாறு,
சென்னை,
நேற்று வெளியிடப்பட்ட சென்னை மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, வாக்காளர் எண்ணிக்கை 40 லட்சத்து 15 ஆயிரத்து 878 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை மாவட்டத்தில் 16 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளில் கடந்த அக்.29 முதல் நவ.28-ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி நடைபெற்றது. பின்னர் இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டது.
அதை மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.குமரகுருபரன், ரிப்பன் மாளிகையில் நேற்று வெளியிட்டார். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிடம் பட்டியலை வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
சென்னை வாக்காளர்களின் எண்ணிக்கை 40 லட்சத்து 15 ஆயிரத்து 878 ஆக உயர்ந்துள்ளது. ஆண் வாக்காளர்கள் 19 லட்சத்து 70 ஆயிரத்து 279 பேர், பெண் வாக்காளர்கள் 20 லட்சத்து 44 ஆயிரத்து 323 பேர், மூன்றாம் பாலினத்தினர் 1,276 பேர் இடம்பெற்றுள்ளனர். கடந்த அக்.29-ம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலுடன் ஒப்பிடும்போது சென்னையில் 63 ஆயிரத்து 380 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர்.
குறைந்தபட்சமாக துறைமுகம் தொகுதியில் 1 லட்சத்து 78 ஆயிரத்து 980 வாக்காளர்களும், அதிகபட்சமாக வேளச்சேரி தொகுதியில் 3 லட்சத்து 16 ஆயிரத்து 642 வாக்காளர்களும் உள்ளனர். வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் 96 ஆயிரத்து 504 நபர்கள், பெயர் சேர்த்தல் தொடர்பாக மனுக்கள் அளித்திருந்தனர்.
அவற்றின் மீது உரிய ஆணை பிறப்பிக்கப்பட்டு, 96 ஆயிரத்து 184 வாக்காளர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
வாக்குச்சாவடி நிலை அலுவலர்களது கள ஆய்வின்போது கண்டறியப்பட்ட இடம் பெயர்ந்தோர், காலமானோர் மற்றும் வாக்காளர் பட்டியல்களில் ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகளில் இடம் பெற்றோர் மற்றும் வாக்காளர் பட்டியல்களில் பெயர் நீக்கம் செய்யக் கோரி பெறப்பட்ட 32 ஆயிரத்து 964 மனுக்களைப் பரிசீலனை செய்து 32 ஆயிரத்து 804 பேர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனா என்றூ சொன்னார்.
வேலூர்,
இந்த மாவட்டத்தில் வேலூர்,காட்பாடி,கேவிக்குப்பம்,குடியாத்தம்,அனைக்கட்டு ஆகிய ஐந்து சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 1309553 பேர் வாக்காளர்களாக உள்ளனர் இப்பட்டியலை ஆட்சியர் சுப்பு லெட்சுமி வெளியிட்டார் இதனை அரசியல் கட்சியினர் பெற்றுகொண்டனர்.
இதில் ஆண் வாக்காளர்கள் 631216,பெண் வாக்காளர்கள் 678153 பேரும் மூன்றாம் பாலினம் 184 பேரும் உள்ளனர்.
வழக்கம் போல் ஆண் வாக்காளர்களை வெளியிட பெண் வாக்காளர்களே அதிகம்.
இதில் இறந்தவர்களின் பெயர்கள் பட்டியலில் அதிகம் உள்ளது, அவைகளை நீக்க வேண்டும் ஐந்து தொகுதிகளிலும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இறந்தவர்கள் வாக்காளர்களாக உள்ளனர், அவர்களை நீக்க வேண்டும் இரட்டை பதிவுகளையும் நீக்க வேண்டுமென வலியுறுத்தி கட்சியினர் பேசினார்கள்.
இராணிப்பேட்டை,
இம்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான முனைவர் சந்திரகலா தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் அரக்கோணம் (தனி), சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
முன்னதாக இராணிப்பேட்டை மாவட்டத்தில் சனி, ஞாயிறு கிழமைகளில் 6 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் உட்பட 16,910 நபர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டதுடன், 5,374 நபர்களின் பெயர்களை நீக்கம் செய்தது உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதில் 5,13,838 ஆண் வாக்காளர்களும், 5,44,932 பெண் வாக்காளர்களும், 15 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தமாக 10,58,875 வாக்காளர்கள் உள்ளனர்.
திருப்பத்தூர்
இம்மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் 2024 அக்டோபர் மாதம் 29 அன்று வெளியிடப்பட்டது. மேலும் அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு ஜனவரி 1, 2025 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தோர் வாக்காளர் பட்டியல் இடம்பெறாதோர் பெயர் சேர்த்தல் நீக்கம் திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்வதற்காக 2024 அக்டோபர் 29 முதல் நவம்பர் 28 வரை விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டது.
வாக்குச்சாவடி அமைவிடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. அதன் அடிப்படையில் நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் 19,201 பெயர் சேர்த்தல் படிவங்கள் 5564 பெயர் நீக்கல் படிவங்களும் 7,974 பெயர் திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் படிவங்களும் என மொத்தமாக 32 ஆயிரத்து 739 படிவங்கள் திருத்த படிவங்கள் பெறப்பட்டது.
அதன் அடிப்படையில் கள ஆய்வு மேற்கொண்டு சிறப்பு சுருக்க முறை திருத்தம் மேற்கொள்ளப்பட்டு 2025-ன் படி இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான தர்ப்பகராஜ் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிட்டார்.
அதன் அடிப்படையில் திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் 4,83,814 ஆண் வாக்காளர்களும் 5 லட்சத்து 2827 பெண் வாக்காளர்களும் 155 மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தமாக 9 லட்சத்து 86 ஆயிரத்து 796 வாக்காளர்களுடன் இறுதிப்பட்டியில் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் அனைத்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்கள் , நகராட்சி அலுவலகங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்களின் பார்வைக்கு வைக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 18 வயது பூர்த்தி அடைந்த நபர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள் பதிவு செய்து கொள்ள தேர்தல் ஆணைய இணையதளம் அல்லது மொபைல் செயலி மூலம் தொடர்ந்து விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.