நல்லா டியூட்டி பார்க்க வந்துட்டீங்க! திருவண்ணாமலை கலெக்டரை காவல் துறையினர் அவமானப்படுத்தினார்களா?

 ம.பா.கெஜராஜ்,

 திருவண்ணாமலையில் பரணி தீபத்தன்று அதிகாலை அண்ணாமலையார் கோவிலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கலெக்டர் பாஸ்கர பாண்டியனும் அவருடன் சிலரும் அங்கும் இங்குமாக சென்று ஆவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். நல்லா டியூட்டி பார்க்க வந்துட்டீங்க என்று போலீசாரை கலெக்டர் சாடினார்.

அது தொடர்பாக செய்திகளும் பரவியது. அதில் காவல் துறையினர் கலெக்டரையே கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை என்றெல்லாம் பதிவிட்டிருந்தனர்.

இந்நிலையில் அதை மையப்படுத்தி தற்போது  ஒரு செய்தி பரவிக் கொண்டிருக்கிறது. அதை வாசிக்கும் போது காவல் துறையினர் சார்பிலிருந்து வெளியிட்டதைப் போலவே உணரமுடிகிறது.

 அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

 சமூக வலைதள நண்பர்களுக்கு வணக்கம்.

பெயர் வெளியிட விரும்பாத ஒரு சிவ பக்தனின் குரல் இது.

நான் 25 ஆண்டுகளாக அண்ணாமலையாரின் தீவிர பக்தனாகவும், தொண்டனாகவும் இருந்துவருகின்றேன்.

எந்த சூழ்நிலையிலும் நான் தீப திருவிழாவிவை வந்து பார்க்காமல் தவறவிட்டதில்லை. எவ்வளவு பணிச் சுமை இருந்தாலும் தீப திருவிழாவினை காண என் ஊரிலிருந்து வந்துவிடுவேன். இந்த வருடமும் தீப திருவிழாவைக் காண நான் சென்று வந்தேன்.

நண்பர்களே!!

திருவண்ணாமலை தீபத் திருவிழாவின் போது மாவட்ட ஆட்சியரை காவல் துறையினர் அவமதித்து விட்டதாக தலைப்பிட்ட ஒரு வீடியோவை சமூக வலைதளங்களில் பார்த்தேன். அதை பார்த்து நான் மிக்க அதிர்ச்சியுற்றேன். ஏனென்றால் அங்கு நடந்ததே வேறு. சம்பவத்தின் போது நான் அங்குதான் என் நண்பருக்காக காத்திருந்தேன்.

சுமார் 02.30 மணிக்கு மேல் தொடர்ச்சியாக சில வண்டிகள் அம்மணி அம்மன் கோபுரம் வெற்றி விநாயகர் கோவில் சந்திப்பிடம் வந்தனர்.

அப்போது நிறைய பக்கதர்களும் சென்று கொண்டிருந்தனர். அந்த இடமே பரபரப்பாக இருந்தது. நானும் அப்போது என்ன நடக்கிறது என்று பார்த்தேன். அப்போது அந்த நுழைவாயிலில் பாதுகாப்பு பணியிலிருந்த காவல் துறை அதிகாரிகள், அந்த வண்டியில் வந்தவர்களிடம் அம்மணி அம்மன் கோபுர (AA) Entry Pass இருக்கிறதா என்று கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

வண்டியில் இருந்தவர்கள் அனுமதி சீட்டு ஏதும் கொடுக்காமல், நாங்க உள்ளுர் அதிகாரிகள் என்றும் எங்களிடம் அனுமதி சீட்டேல்லாம் கிடையாது என்றும், உரத்த தொனியில் வாக்குவாதத்தில் ஈடுபட்டும் தங்களை கட்டாயம் அனுமதிக்க வேண்டும் என்றும் கூச்சல் செய்தனர். அதற்கு காவல் துறையினர், வாகன அனுமதிக்கு (AA) Entry Pass-ம் தனி நபர் அனுமதிக்கு மாவட்ட நிர்வாகம் வழங்கிய

(AA) Entry Pass-ம்  இருந்தால் தான் விட முடியும் என்று பொறுமையாக விளக்கிக்கொண்டிருந்தார்கள். அதற்கும் அவர்கள் ஒப்புக்கொள்ளாமல் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு காரசாரமாக பேசினர். வாக்குவாதம் கொண்டிருந்தவர்களிடம் அரசு உத்தரவுப்படி (AA) Entry Pass இருந்திருக்க வேண்டும் இல்லையென்றால் மாவட்ட நிர்வாகத்தின் Pass இருந்திருக்க வேண்டும்.

அப்போதுதான் நான்கு ஐந்து வண்டிகளுக்கு பின்னால் கலெக்டருடைய வண்டியும் வந்திருப்பது எனக்கே தெரியவந்தது.

  கலெக்டர் வண்டியை பார்த்ததும், ஏற்கனவே அனுமதி சீட்டு இல்லாமல் அனுமதி மறுக்கப்பட்டு அங்கு நின்றிருந்த மற்றவர்களும் சேர்ந்து கலெக்டரிடம் சென்று முறையிட்டனர். கலெக்டர் வண்டியிலிருந்து இறங்கி அவருடன் வந்த சுமார் 30 நபர்களுடன் காவல் துறையினர் போட்டிருந்த தடுப்பை நோக்கி வந்தபோது, அதை பார்த்ததும் அங்கிருந்த மற்ற அதிகாரிகள் ஏற்கனவே அனுமதி மறுக்கப்பட்டிருந்த நபர்கள் அனைவரும் சேர்ந்துகடுமையான வாக்குவாதத்தில் காவல் துறையினருடன் ஈடுபட்டதோடு, தரக்குறைவான வார்த்தைகளால் காவலர்களை மிரட்டும் தொனியில் திட்டினர்.

  கலெக்டரை பார்த்தவுடன் அங்கிருந்த காவல் அதிகாரிகள் கலெக்டரிடம் விவரத்தை கூறினர். கலெக்டர் தன்னுடன் வந்தவர்களை அனுமதிக்க வேண்டும் என கூறியவுடன், அவர் சொன்னதால் அவருடன் இருந்த அத்தனை பேரையும் அம்மணி அம்மன் கோபுரத்திற்கு அனுமதித்தனர்.

  "இதோடுமட்டுமில்லாமல் கலெக்டர் தனியார் வாகனங்களில் தன்னுடைய உறவினர்களை எந்த Pass-ம் இல்லாமல் அழைத்து வந்தார்.

அதற்கு பிறகு முறையான அனுமதி சீட்டு இல்லாமல் அனுமதி மறுக்கபட்ட மற்றவர்கள்,  காவல் துறையினர் பொறுமையாக கலைந்து செல்ல வலியுறுத்தியும்கூட தொடர்ந்து வசைபாடிக்கொண்டும் ஒருமையில் பேசிக்கொண்டும் குறைகூறிக்கொண்டு இருந்தனர். இது உண்மையிலேயே காவல் துறையினர் குளிர் மற்றும் புயல் மழை தாங்கி நின்று இரவு பகலாக வேலை செய்து கொண்டிருந்த காவலர்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியதை என்னால் உணர முடிந்தது.

நான் நேரடியாக அங்கிருந்து பார்த்ததில், அவமானப்படுத்தப்பட்டதோ மற்றும் அவதூறு இழைக்கப்பட்டதோ காவல் துறைக்கு தான். அராஜகம் செய்துவிட்டு அவமானப்படுத்தப்பட்டதுபோல் திரித்து பிழைத்து கூறியுள்ளது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. அனுமதி சீட்டு இல்லாமல் வந்த வாகனங்களை கலெக்டர் வருவதற்கு முன்னால் காவலர்கள் கேட்டதை, ஐந்து ஆறு வண்டிகளுக்கு பின்னால் வந்த கலெக்டரின் வண்டியை நிறுத்தியது போல் ஒரு தவறான பிம்பத்தை சில விஷமிகள் உண்மைக்கு மாறாக ஏற்படுத்தி இல்லாதவற்றை கூறியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது.

  இந்த வீடியோவில் தலைப்பு மட்டும்தான் கலெக்டரை அவமானப்படுதியது போல் கூறப்பட்டுள்ளதே தவிர, உண்மையில் கலெக்டருடன் வந்தவர்கள் ஏற்கனவே முறையான, அனுமதி சீட்டு இல்லாமல் நின்றிப்பவர்களுடன் சேர்ந்து காவல் துறையை பணி செய்ய விடாமல் அவர்களை அவமானப்படுத்தினார்கள்.

  இந்த வீடியோவை நீங்கள் பார்த்தாலே ஒரு இடத்தில் கூட காவல் துறை கலெக்டரையோ, அவருடன் வந்தவர்களை அவமதித்தோ ஒருமையில் பேசியோ மற்றும் முறை தவறியோ நடக்கவில்லை என்பது தெரியவரும்.

  நீங்கள் கூர்ந்து கவனித்தால் சீருடையில் பணியிலிருந்த காவலர்களை மிரட்டுவதும் தரக்குறைவாக பேசுவதையும், சவால் விடுவதையும் நீங்களே பார்க்கலாம். சொல்லப்போனல் சலசலப்பை பார்த்த கலெக்டர் அந்த சூழ்நிலையை சரிசெய்வதை கவனத்தில் கொள்ளாமல, அவருடன் வந்தவர்களை உள்ளே அனுப்புவதில் மட்டுமே குறியாக இருந்தார்.

   அவர் நினைத்திருந்தால், அனுமதி சீட்டு இல்லாமல் நிறுத்தப்பட்டிருந்த நபர்களிடம் கூச்சலில் ஈடுபடுவது தவறு என்று கூறி அவர்களை ஆட்சியர் என்ற முறையில் அமைதியாக கலைந்து செல்ல அறிவுருத்தியிருக்கலாம். ஆனால் அவ்வாறு எதுவும் செய்யவில்லை.

  ஆகவே இந்த வீடியோவை பார்ப்பவர்கள் அதன் உண்மை தன்மையினை நீங்களே புரிந்துகொண்டு சற்று யோசித்து யார் மீது தப்பு என்று முடிவெடுங்கள்.

  காவல் துறை, மாவட்ட நிர்வாகம் விதித்த கட்டுப்பாடுகளை சிறப்பாக செயல்படுத்தினால் அராஜகம் என்று கூறுவதும், ஏதாவது பிரச்சனை ஏற்பட்டுவிட்டால் காவல் துறை செயல்படவில்லை என்று ஒட்டு மொத்த பழியையும் காவல் துறையின் மீது சுமத்துவதும் வழக்கமாகிவிட்டது.

  உண்மையில் கடந்த நான்கு ஐந்து நாட்களாக பெய்த புயல் மழையிலும் கடும் குளிரிலும், போதுமான தங்கும் வசதி இல்லாமலும் சாப்பாடு இல்லாமலும், கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்டு தங்களின் வயதையும் உடல் நிலையையும் பார்க்காமல் சிறப்பாக வேலை செய்த காவல்துறையினரை பாராட்ட மனமில்லை என்றாலும் வீண் பழி சுமத்துவது மனசாட்சிக்கே அடுக்காது.

 இந்த வருசம்தான் டிராபிக் இல்லாமல் சீக்கிரம் என் வீட்டிற்கு சென்றேன். இந்த பதிவை வெளியிட்ட நபரை நான் ஒரு கேள்வி கேட்கிறேன். நீங்கள் வெளியிட்ட இந்த வீடியோவில் கலெக்டர் எங்கு அவமானப்படுத்தப்பட்டார் என்று நீங்களே கூறுங்கள் பார்க்கலாம். ஏன் நீங்கள் உண்மைக்கு மாறாக முழு விபரமும் தெரியாமல் பதிவிட்டுள்ளீர்கள்.

சமூக வலைதள நண்பர்களும் ஒரு விசயத்தை முழுமையாக விசாரிக்காமல் அதனை முன்னெடுத்து செல்வது தவறு என்பதை நீங்களும் உணரவேண்டும். இனிமேலாவது விசாரிக்காமல் சம்பவத்தை திரித்து பரப்பும் நண்பர்கள் சமூக பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அந்த பதிவில் போலீசாரை ஹீரோ போல சித்தரித்திருந்தனர்.

இது ஒரு புறம் இருக்க, நகரத்தார் என்கிற சமூகத்தினர் ஆண்டு தோறும் தீப திருவிழா நாட்களில் அவர்கள் சொந்த பணத்தில் மூன்று நாள் நிகழ்ச்சியை நடத்துவார்கள். அவர்களை கூட போலீசார் கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை. இதனால் மறியல் எல்லாம் நடத்தப்பட்டது.

  அதே போல் உள்ளூர் வாசிகளை வீட்டிலிருந்து வெளியில் வரக்கூடாது என்று ஸ்டிரிக்டாக தடையும் போட்டு பாதுகாத்தனராம் காக்கிகள்.

  கலெக்டர் விஷயத்தில் மாவட்ட காவல் அதிகாரிக்கும் அவருக்கும் லடாயாம் அதனால் அந்த காக்கி அவரது பவரை காட்டியதாக உள்ளூர் வாசிகள் சொல்கிறார்கள்.