கிராமப்புற விவசாய கடன்களை அதிகரிக்கனும்! மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுரை!

கிராமப்புற விவசாய கடன்களை அதிகரிக்கனும்! மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுரை!

உ.சசிக்குமார்,

 விவசாயிகளுக்கு தொடர்ந்து உதவி வழங்குமாறு விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கியை (நபார்டு) நிர்மலா சீதாராமன் வலியுறுத்தினார்.

 விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கியின் மறு ஆய்வுக் கூட்டமானது நேற்று நடைபெற்றது. அதில் கிராமப்புற வருமானத்தை மேம்படுத்துவதே முதன்மையான முன்னுரிமையாகக் கொண்டு அடிமட்ட அளவில் செயல்திறன் மற்றும் முடிவுகளை நபார்டு வங்கி உறுதி செய்ய வேண்டும்.

  நடப்பு சர்வதேச தினை ஆண்டில் தினை உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதல் தேசிய முன்னுரிமையாக உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக நபார்டு வங்கிக்கு நிதியமைச்சர் இவ்வாறு உத்தரவிட்டார். விவசாயிகளுக்கு தொடர்ந்து கடன் வழங்கவும், அவர்கள் விவசாயம் செய்து நல்ல வருமானம் ஈட்டவும் அவர் வழிவகை செய்துள்ளார்.

 இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "அதிக லாபம் தரக்கூடியதும், குறைவான நீர் உட்கொள்ளும் பயிர்களான தினை, பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களை நோக்கி செல்ல விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்" என்று நிதியமைச்சர் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மேலும் வடகிழக்கு மாநிலங்களை மையமாகக் கொண்டு உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளால்  கரிம உற்பத்தியாளர்களின் ஒருங்கிணைப்பை எளிதாக்குவதுடன், கிராமப்புற கடன்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு நபார்டு வங்கிக்கு நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டுள்ளார்.