ஆண்டுக்கு 75/-ஆயிரம் கோடி ரூபாய் செலவுபிடிக்கும் இலவச திட்டங்கள்! தாக்குபிடிக்குமா காங் ஆட்சி!

ம.பா.கெஜராஜ்,
கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி, இந்த வெற்றிக்காக பெரும் நிதி கரையும் இலவச திட்டங்களை அறிவித்திருந்தனர். அதன் கணக்குபடி பார்த்தால் ஆண்டுக்கு இந்த திட்டங்களுக்கு மட்டும், சுமார் 75/-ஆயிரம் கோடி ரூபாய் செலவுபிடிக்குமாம், இது உள்ளபடியே சாத்தியமாகுமா? என்று அதிகாரிகள் விழி பிதுங்க துவங்கிவிட்டனராம்.
காங்கிரஸ் கட்சி அறிவித்த முக்கியமான 5 திட்டங்களில், பெண்களுக்கு மாதம் தலா ரூ.2 ஆயிரம் ஊக்கத்தொகை, வீடுகளுக்கு தலா 200 யூனிட் இலவச மின்சாரம், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தலா 10 கிலோ அரிசி, வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் தலா ரூ.3 ஆயிரம், அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் ஆகியவை சிறப்பு வாய்ந்ததாகவும், அரசு கஜானா காலி செய்யக்கூடிய திட்டமாக கருதப்படுகிறது.
இந்த இலவச திட்டங்கள் காங்கிரசின் பொய் வாக்குறுதி என்று பிரதமர் மோடி, அமித்ஷா, முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா, பசவராஜ் பொம்மை உள்ளிட்ட தலைவர்கள் கூறினார்கள்.
ஏன்னா, ஏற்கனவே 2018-ம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்த சித்தராமையா ரூ.1 லட்சத்து 28 ஆயிரம் கோடி கடன் வாங்கி இருந்தார். கடந்த பா.ஜனதா ஆட்சியில் அந்த கடன் ரூ.3 லட்சம் கோடியை தாண்டியது அவர்கள் கண் முன் இருந்தது.
இருந்தாலும் கூட, வீடு, வீடாக உத்தரவாத அட்டையை காங்கிரஸ் வழங்கியதுடன், மந்திரிசபையின் முதல் கூட்டத்திலேயே இலவச திட்டங்களுக்கு அனுமதி வழங்குவோம் என தலைவர்கள் கூறினார்கள்.
அதே நேரத்தில் பா.ஜ.க.வும் அரை லிட்டர் பால் இலவசம் உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்திருந்தது. ஜனதாதளம் (எஸ்) கட்சியும் ஆண்டுக்கு 5 இலவச கியாஸ் சிலிண்டர்கள் உள்ளிட்ட இலவசங்களை அறிவித்திருந்தது.
இவர்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளதால், அவர்கள் சொன்ன வாக்குறுதிபடி அறிவித்த இலவச திட்டங்களை நிறைவேற்றுமா?, அது சாத்தியமாகுமா? என்பது தான் இப்போதைய கேள்வி.
எத்தனை கோடி ரூபாய் தேவை?
காங்கிரஸின் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமானால் அதற்காக ஆண்டுக்கு எத்தனை கோடி ரூபாய் தேவை என்பது குறித்து சில ஐ. ஏ.எஸ். அதிகாரிகளிடம் பேசினோம்.
அதில், வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதற்காக ஆண்டுக்கு சராசரியாக ரூ.25 ஆயிரத்து 800 கோடி தேவை ஆகும். அதுபோல், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தினரில் கார்டு வைத்திருக்கும் பெண்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்குவதற்காக ஆண்டுக்கு சராசரியாக ரூ.30 ஆயிரம் கோடி தேவையாகும். (மாநிலம் முழுவதும் 1.28 கோடி பெண்கள் பி.பி.எல். கார்டு வைத்துள்ளனர்). அவர்கள் அனைவருக்கும் மாதம் ரூ.2 ஆயிரம் வழங்க ரூ.30 ஆயிரம் கோடி தேவை என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்வதற்காக ஆண்டுக்கு ரூ.3 ஆயிரம் கோடி தேவைப்படும் என கருதப்படுகிறது.
இதுதவிர வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் வழங்கவும், 10 கிலோ இலவச அரிசி வழங்குவதற்காகவும் ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் கோடி முதல் ரூ.17 ஆயிரம் கோடி வரை தேவைப்படும் என்று கணித்துள்ளனர்.
ஒட்டு மொத்தமாக காங்கிரஸ் அளித்துள்ள முக்கியமான இந்த 5 வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதற்கு ஆண்டுக்கு ஏறக்குறைய ரூ.75 ஆயிரம் கோடி தேவையாகும்.
கடந்த 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை முதலமைச்சராக இருந்த பசவராஜ் பொம்மை ரூ.3 லட்சம் கோடிக்கு தாக்கல் செய்திருந்தார். அதே நேரத்தில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்த சித்தராமையா ரூ.1 லட்சத்து 28 ஆயிரம் கோடி கடன் வாங்கி இருந்தார்.
கடந்த பா.ஜ.க. ஆட்சியில் அந்த கடன் ரூ.3 லட்சம் கோடியை தாண்டியது. இதன்மூலம் கர்நாடக அரசுக்கான கடன் தொடர்ந்து அதிகரித்து வருவதுடன், அந்த கடனுக்காக செலுத்த வேண்டிய வட்டியும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. தற்போது காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள திட்டங்களை நிறைவேற்றுவதற்காக மேலும் கடன் வாங்க வேண்டிய நிலை தான் ஏற்படும்.
ஆகவே கர்நாடக மாநிலத்தில் காங்கிரசால் இலவச திட்டங்களை நிறைவேற்வது சாத்தியமாகுமா? என்பதை பொருத்திருந்ததுதான் பார்க்க வேண்டும், ஏன்னா இதற்கெல்லாம் மத்திய அரசின் உதவியும் தேவையல்லவா.