ஆம்பூர் பிரியாணி திருவிழா ரத்து! எஸ்சி எஸ்டி ஆணையம் நோட்டீஸ்! ஆட்சியர் விரைவில் மாற்றப்படுவாரா?

 ம.பா.கெஜராஜ்,

  மத சர்ச்சை ஏற்படும் சூழல் ஏற்பட்டதால் ஆம்பூரில் நடக்கவிருந்த பிரியாணி திருவிழா தள்ளிவைக்கப்பட்டது.

இது ஒருபுறமிருக்க தாழ்த்தப்பட்டவர்கள் ஆணையத்தில் இருந்து கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.

 ஆகவே,என்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே அறியாமல் மாட்டிறைச்சி பிரியாணிக்கு தடை போட்ட ஆட்சியர் விரைவில் மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.  

இது குறித்த விவரம் வருமாறு,

 வருகின்ற 13,14,15,ஆகிய தினங்களில் ஆம்பூர் வர்த்தக மையத்தில், அரசு சார்பாக பிரியாணி திருவிழா நடத்தப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா, எஸ்.பி.பாலகிருஷ்ணன், கோட்டாட்சியர் காயத்ரி உள்ளிட்ட அலுவலர்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

  பிரியாணி திருவிழா நடைப்பெறும் ஆம்பூர் வர்த்தக மையத்தில் 30 கடைகள் அமைக்கப்பட்டு அவற்றில் கோழி மற்றும்  ஆட்டிறைச்சி ஆகிய இரண்டு வகை பிரியாணிகள் மட்டுமே விற்கப்படும் அமைக்கப்படும் என ஆட்சியர் அறிவித்தார்.

 அப்படியானால் மாட்டிறைச்சி பிரியாணிக்கு அனுமதி இல்லையா என்று உள்ளுர்வாசிகள் மத்தியில் வினா எழுந்தது. ஆனால் அதற்கான பதிலை சொல்ல அரசு அலுவலர்கள் எவரும் முன்வரவில்லை.

 இது தொடர்பாக ஆட்சியர் அமர்குஷ்வாஹாவை தொடர்பு கொள்ள முயன்றாலும் அவர் எந்த அழைப்பையும் எடுக்காமல் வேண்டுமென்றே தவிர்த்தார்.

 அப்படியிருக்க இப்பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சி பிரியாணி புறக்கணிப்பட்டது தொடர்பாக பலதரப்பினர் கொதித்துவிட்டார்கள்.

குறிப்பாக ஆம்பூர் பகுதிகளில் உள்ள விடுதலை சிறுத்தை கட்சியினர், பகுஜன் சமாஜ், எஸ்.டி.பி.ஐ, மற்றும் தலித் கூட்டமைப்புகள், மனித நேய மக்கள் கட்சி, தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் மற்றும் பல இஸ்லாமிய அமைப்புகள் வீதியில் இறங்கி குரலெழுப்பினர்.

 அதோடுமட்டுமில்லாமல், அரசு சார்பில் நடைபெறும் பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சி  புறக்கணிப்பட்டால், வர்த்தக மையத்தின் வெளியே மாட்டிறைச்சி பிரியாணி இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்தனர்.

  இந்நிலையில் மாட்டிறைச்சி பிரியாணியை இலவசமாக வழங்கும் நிகழ்வை இன்றே துவங்கினர். வன்கொடுமை செய்யும் மாவட்ட நிர்வாகமே உன் நடவடிக்கையை மாற்றிக் கொள் என்கிற கோஷத்தையும் எழுப்பினர்.

 "இதனால் ஆம்பூரில் பதற்றம் ஏற்பட்டது. ஏற்கனவே பள்ளிகொண்டான் காவல் நிலையத்தில் ஆம்பூரை சேர்ந்த இஸ்லாமியர் லாக்கப் டெத் ஆனது தொடர்பாக எழுந்த கலவரமும், அதனால் பாதிப்புக்கள் ஏற்பட்ட விவரங்களும் பயங்கரமானவை".

இதையெல்லாம் கேட்டு தெரிந்து கொள்ள முயலாத ஆட்சியர், ஆடு, கோழி பிரியாணி மட்டுமே திருவிழாவில் பங்கேற்க அனுமதியளித்து, மாட்டிறைச்சிக்கு அனுமதியில்லை என்று வெளிப்படையாக அறிவித்தார். இதற்கு பல அமைப்பினர் எதிர் குரலெழுப்பிய நிலையில் இந்து அமைப்போ, வர்தக மையத்தை பிரியாணி கடையாக மாற்றாதே என ஆட்சியரை கண்டித்தனர்.

  இதனால் அங்கு மத பிரச்சனை ஏற்படும் அபாயம் ஏற்பட்டது.

மீடியாக்கள் இந்த விவகாரத்தை செய்தியாக வெளியிட்ட நிலையில், விவகாரம் பெரிய விவாத பொருளாக மாறியது.

 இந்நிலையில் மாட்டிறைச்சி பிரியாணியை அனுமதிக்காமல் பிரியாணி திருவிழா நடத்தக்கூடாது என்று விசிக, இஸ்லாமிய அமைப்பினர் போன்றோர் இரண்டு பேருந்துகளில் திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகம் செல்ல ஏற்பாடுகள் நடந்தது.

  எனவே இந்த பிரச்சனை வேற லெவலுக்கு (டேஞ்சர் சோனுக்கு) உருமாறுவதை மீடியாக்கள் மீண்டும் திரையிட்டன.

 விஷயம் முதலமைச்சரின் பார்வைக்கு போனது. அதன் பின்னர் உளவுத்துறையின் வாயிலாக ஆம்பூரின் உண்மை நிலவரத்தை கேட்டறிந்துள்ளார் முதல்வர்.

  அதனைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்களான, வில்வநாதன், தேவராஜி, நல்லதம்பி ஆகியோரை முதல்வர் அலுவலகத்திலிருந்து லெப்ட் ரைட்டு வாங்கினார்களாம்.

 அப்படியிருக்க, மேற்படி மூவரும் வேட்டியை பிடித்துக்கொண்டு கலெக்டர் ஆபிசுக்கு ஓடினர். ஆனால் அங்கு கலெக்டர் இல்லையாம்.

 பின்னர் அவர்களுக்குள் பேசியதோடு ஆட்சியரை தொடர்பு கொண்டு பிரச்சனை பெரிதாவதால் இந்த பிரியாணி திருவிழாவையே நிறுத்திவைக்கலாம் என்று முடிவெடுத்து, அதற்காக மழையை காரணம் காட்டியிருக்கிறார்கள்.

  இந்த அறிவிப்பு வெளியான நிலையில் ஆம்பூரிலிருந்து பேருந்தில் திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகம் செல்ல செய்யப்பட்ட பேருந்து ஏற்பாடுகள் கைவிடப்பட்டது.

  ஆக மொத்தத்தில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு ஆம்பூர் வர்த்தக மையத்தில் நடக்கவிருந்த பிரியாணி திருவிழா தள்ளிவைக்கப்பட்டது.

 இந்த மத குழப்பம் ஏற்படும் அளவுக்கு பிரச்சனை வளர்ந்த போதும், அதை சரி செய்யாமலும், அதற்காக முயலாமலும், செயல்பட்ட ஆட்சியர் விரைவில் மாற்றப்படலாம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

இந்நிலையில்தான் சென்னையில் உள்ள தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் இருந்து திருப்பத்தூர் ஆட்சியர் அமர் குஷ்வாகா அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சி பிரியாணியும் இணைக்க வேண்டும் என்று புகார் வந்ததைத் தொடர்ந்து இது தீண்டாமை என்று கருதிய மேற்படி ஆணையம், இதை பற்றி விசாரிக்க ஏற்றுக் கொண்டிருப்பதால் இந்த நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும் மாவட்டத்தின் தலைமை அதிகாரியாக உள்ள நீங்கள் அளித்த பிரஸ் ரிலீஸில்  20 வகையான பிரியாணிகள் பிரியாணி திருவிழாவில் காட்சிப்படுத்தப்படும் ஆனால் அதில் மாட்டிறைச்சி இடம்பெறாது என்று குறிப்பிட்டிருப்பது தீண்டாமையாகும்,தாழ்த்தப்பட்டவர்களும் இஸ்லாமியர்களும் சுமார் 2 லட்சம் பேர் அளவில் வசிக்கும் இந்த ஊரில் இவ்வாறு செயல்பட்டிருப்பது சுட்டிக் கட்டப்பட வேண்டியது என்று ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

 இதன் மீது நடவடிக்கை எடுக்கவும் முனைந்துள்ளது.

 குறிப்பு:- மாட்டு தோல் பதனிடும் ஆம்பூர் டேனரிகளால் அன்னிய செலவாணி குவிகிறது என்று சொல்லும் போது மாட்டிறைச்சிக்கு ஏம்பா தடைபோடனும் என்பவர்கள், ஆம்பூர் அதிக அளவு இஸ்லாமியர்கள் வாழும் பகுதியாகும் ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில்  நாளொன்றுக்கு 4000 கிலோ மாட்டிறைச்சி பிரியாணி செய்யப்பட்டு விற்பனையாகிறது என்கிறார்கள்.

 ஆக அதிகாரத்தில் இருப்பவர்கள் இனிமேலாவது வன் கொடுமை வன்மத்தை ஏற்படுத்தாமல் செயல்படவேண்டும் என்கிறார்கள்.