சசிகலாவுக்கு அ.தி.மு.க. டோர் குளோஸ்?

ம.பா.கெஜராஜ்,
அ.தி.மு.க.பொதுசெயலாளர் என்று சசிகலா பெயரைப் போட்டு அறிக்கைகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், எப்படியும் அவர் அதிமுகவை தன் வயப்படுத்திவிடுவார் என்று பலரும் ஆருடம் சொல்லி வருகிறார்கள்.
ஆனால் இன்று அ.தி.மு.க.தலைமை கழகத்தில் நடந்த செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவு என்பது, சசிகலாவின் ரீ என்டரியை தடுக்கும் விதத்தில் அதன் கதவுகளை சாத்தப்பட்டதாகவே அறியப்படுகிறது.
ஆம், சூடான தீர்மானங்களை அ.தி.மு.க.செயற்குழுவில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
இன்று நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட சிறப்பு தீர்மானங்கள் குறித்த விவரங்கள் வருமாறு,
புரட்சித் தலைவி அம்மா அவர்கள் மறைவிற்குப் பின் , கழகத்தை வழிநடத்த 12.09.2017 - ம் நாள் நடைபெற்ற கழகப் பொதுக்குழு கூட்டத்தில் , கழக ஒருங்கிணைப்பாளர் , கழக இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு உருவாக்கப்பட்டு , கழகப் பொதுச் செயலாளருக்கு அளிக்கப்பட்டிருக்கும் அனைத்துப் பொறுப்புகளும் , அதிகாரங்களும் , கழக ஒருங்கிணைப்பாளருக்கும் , கழக இணை ஒருங்கிணைப்பாளருக்கும் முழுமையாக இணைந்து செயல்பட பொதுக்குழு ஒப்புதல் அளித்தது.
மேலும், கழக சட்ட திட்ட விதியினை திருத்தம் செய்ய , கழகப் பொதுக்குழு உறுப்பினர்களால் ஏகமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அதன்படி, கழக சட்ட திட்ட விதிகளில் தேவையான திருத்தங்கள் செய்யப்பட்டன . அதில் , விதி - 20 மற்றும் விதி - 43 ம் திருத்தப்பட்டது . இது தொடர்பாக , கழக அடிப்படை உறுப்பினர்களின் கோரிக்கையை ஆய்வு செய்து , கழக செயற்குழுவின் அனைத்து உறுப்பினர்களுடைய கருத்துகளைக் கேட்டறிந்த பிறகு , கழக சட்ட திட்ட விதிகளில் பின்வரும் திருத்தங்கள் செய்ய முன்மொழியப்பட்டது.
- " கழக ஒருங்கிணைப்பாளர் , கழக இணை ஒருங்கிணைப்பாளர் , கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
மேற்படி , கழக ஒருங்கிணைப்பாளர் , கழக இணை ஒருங்கிணைப்பாளர் இருவரையும் , கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் ஒற்றை வாக்கின் மூலம் இணைந்தே தேர்வு செய்யப்படுவார்கள் " என்று கழக சட்ட திட்ட விதி 20 ( அ ) பிரிவு -2 திருத்தி அமைக்கப்படுகிறது.
2 .கழக சட்டவிதி 43, பின்வருவனவற்றை உள்ளடக்கி திருத்தப்படும் என்று தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் இந்த சட்ட திட்டங்களின் அடிப்படை உணர்வாக உருவாக்கப்பட்டுள்ள கழக ஒருங்கிணைப்பாளர் , கழக இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரை , கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற விதியை மட்டும் மாற்றுவதற்கோ , திருத்துவதற்கோ உரியதல்ல.
- கழக சட்டவிதி 45, பின்வருவனவற்றை உள்ளடக்கி திருத்தப்படும் என்று தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் இந்த சட்ட திட்டங்களின் அடிப்படை உணர்வாக உருவாக்கப்பட்டுள்ள கழக ஒருங்கிணைப்பாளர் , கழக இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரை , கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற விதியை மட்டும் , விலக்கு அளிப்பதற்கோ , தளர்த்துவதற்கோ அதிகாரம் இல்லை.
" வழிமொழிபவர்கள் பின்வருவனவற்றை தீர்மானிக்கப்படுகிறது .
இந்தத் திருத்தங்கள் இன்று முதல் அமலுக்கு வரும் என்றும் , இன்றைக்குப் பிறகு கூட்டப்படும் கழகப் பொதுக்குழுவின் அடுத்த கூட்டத்தில் ஒப்புதல் பெறுவதென்றும் இந்தச் செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டது.
அங்கீகரிக்கப்பட்ட ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் ஆண்டுக்கு 2 முறை செயற்குழுவையும், ஒருமுறை பொதுக்குழுவையும் கூட்ட வேண்டும் என்பது தேர்தல் கமிஷனின் நிபந்தனையாகும்.
இந்நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு, செயற்குழு கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9-ந்தேதி நடைபெற்றது.
சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு முன்பாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் தேர்தல் கூட்டணி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அப்போது ஆலோசித்தனர்.
அதனைத் தொடர்ந்து தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சியை இழந்துள்ள நிலையில் அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் 2-வது முறையாக இன்று காலை 10 மணிக்கு கூடி மேற்கண்ட தீர்மானத்தை நிறைவேற்றியது.