70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு! ஆண்டுக்கு ரூ.5 லட்சம்... மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

ம.பா.கெஜராஜ்,
70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வழங்கக்கூடிய மருத்துவக் காப்பீடு திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நேற்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அப்போது, 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த திட்டத்தால் 4.5 கோடி குடும்பங்களில் உள்ள 6 கோடி மூத்த குடிமக்கள் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மத்திய அரசு கடந்த 2018-ம் ஆண்டு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை கொண்டு வந்தது. இந்த திட்டம் தற்போது சமூக - பொருளாதார நிலைகளை கடந்து 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் காப்பீடு வழங்கப்படும்.
மத்திய அரசு இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது
'சமூக - பொருளாதார வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, நாட்டில் உள்ள 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவருக்கும், வருமானத்தை கணக்கில் கொள்ளாமல் இந்த காப்பீட்டு திட்டம் பொருந்தும். இத்திட்டத்தின்கீழ் ஏற்கெனவே காப்பீடு வசதி பெற்றிருக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தில் உள்ள 70 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.5 லட்சம் காப்பீடு வழங்கப்படும்.
தனியார் காப்பீட்டு திட்டங்கள், ஊழியர்களின் மாநில காப்பீட்டு திட்டங்களில் பயன்பெறும் மூத்த குடிமக்களும் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.