கல்வி மட்டுமே இந்த சமூகத்தின் இருளைப் போக்கும் அற்புத சக்தி!திருப்பத்தூர் கலெக்டர் அறிவுரை!

ஆர்.ரமேஷ்,
கல்வி மட்டுமே இந்த சமூகத்தின் இருளைப் போக்கும் அற்புத சக்தி என்று திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற நான் முதல்வன் திட்ட சிறப்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ், பேசினார்.
12-ஆம் வகுப்பு தவறியவர்கள் மற்றும் தேர்ச்சி பெற்றவர்கள் உயர் கல்வி தொடராத நிலையை கண்டறிந்து, இவர்களுக்கு உயர்கல்வி தொடர்வதற்காக மாவட்ட நிர்வாகத்தின் வாயிலாக அரசு கலைக்கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரி, தொழில்பயிற்சி நிறுவனம் மற்றும் தனியார் தொழில்பயிற்சி கல்லூரிகள், கேட்டரிங், நர்சிங் போன்ற கல்லூரிகளில் பயில்வதற்காக சிறப்பு முகாம் வாயிலாக 50-க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் சேர்க்கைக்கான ஒப்புதல் பெறப்பட்டு, சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனங்களின் ஒதுக்கீட்டு ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ், தலைமையில் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வினில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-
மாணவர்களின் நலனை கருதி ' 2022-2023 " மற்றும் 2023-2024 ஆகிய கல்வியாண்டுகளில் அரசுப் பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு படித்தவர்களில் தேர்ச்சி பெற்ற மற்றும் பெறாத இதுவரை எந்த விதமான உயர்கல்விப் படிப்பிலும் சேராத மாணவர்கள் 2,911 பேர் அடையாளம் காணப்பட்டது. அவர்களில் 499 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுவிட்ட பின்பும் எந்தவொரு கல்லூரியிலும் சேராமல் இருப்பது கண்டறியப்பட்டது.
அந்த மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு அறிவித்துள்ள நான் முதல்வன் உயர்வுக்கு படி முகாமினை இதுவரை உயர்கல்வியில் சேர்க்கை முடிக்காத மாணவர்கள் இதனை ஒரு அரிய வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மேலும், கலை, அறிவியல், தொழில்நுட்பப் படிப்புகளில் நீங்கள் விரும்பும் ஏதேனும் ஒரு பிரிவைத் தேர்வு செய்து உங்கள் உயர் கல்வியை நீங்கள் தொடங்க வேண்டும். நீங்கள் அனைவரும் உயர்கல்வி படிக்க வேண்டும் என்பதற்காகத்தான் உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டத்தின் வாயிலாகவும், தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் வாயிலாக மாணாக்கர்களுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது.
இது மட்டுமல்லாமல், நீங்கள் முதல் தலைமுறைப் பட்டதாரியாக இருந்தால் நீங்கள் படிக்கும் எந்தவொரு படிப்பிற்கும் தேவையான கல்விக் கட்டணத்தை அரசே வழங்குகிறது. மேலும் தகுதி வாய்ந்த அனைத்து மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
தினமும் உங்கள் வீடுகளிலிருந்து கல்லூரிக்குச் சென்று வர இயலா நிலைபாட்டிற்கேற்ப, உங்களுக்கு அரசு தங்கும் விடுதி ஏற்பாடு செய்து தரப்படும். நீங்கள் அனைவரும் உயர்கல்வி படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதற்காகத்தான் தமிழக அரசால் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது.
நீங்கள் உயர்கல்வி படிப்பதற்குத் தடையாக எதுவும் இருக்கப் போவதில்லை. கல்வி மட்டுமே இந்த சமூகத்தின் இருளைப் போக்கும் அற்புத சக்தி படைத்தது. உயர்கல்வி ஒன்றுதான் உங்கள் வாழ்வில் பெரிய வெளிச்சத்தைக் கொண்டு வரும். ஆகவே முகாமிற்கு வந்துள்ள ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் சேர்ந்து உயர்கல்வி படிப்பதைக் கட்டாயமாக உறுதி செய்யய வேண்டும்" என்று மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
குறிப்பாக இதில் திருபத்தூர் மாவட்டம், விஷ மங்கலம், கோடியூர் கிராமத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர் திரு.இராமசந்திரன் அவர்கள் 2022-23 ஆம் கல்வி ஆண்டில் 11-ஆம் வகுப்பு பயின்ற போது குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை தொடர முடியாமல் பாதியிலேயே படிப்பை நிறுத்தி விட்டார்.
இதனை அறிந்து, மாற்றுத்திறனாளி நல அலுவலகத்தின் வாயிலாக உளவியல் ரீதியான ஆலொசனை வழங்கப்பட்டதில் இவர் தொழிற்கல்வி பயில்வதற்கு சம்மந்தம் தெரிவித்தார். இதனை தொடர்ந்து இன்று நடைபெற்ற முகாமினில் இவரை திருவள்ளுர் மாவட்டம், கும்மிடி பூண்டி ஒர்த் அறக்கட்டளை தொழிற்பயிற்சி நிறுவனத்தில் உண்டு, உறைவிட வசதியுடன் பெற்றோர்களின் ஒப்புதலுடன் தொழிற்கல்வி பயில்வதற்கு சேர்க்கைக்கான ஆணை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் வழங்கப்பட்டது.
இம்முகாமில் வேலைவாய்ப்புத் துறை மண்டல இணை இயக்குனர், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர்;, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் (பொ), கல்வித்துறை சம்மந்தப்பட்ட அலுவலர் மற்றும் துறை சார்ந்த சம்மந்தப்பட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.