டிரான்ஸ்பார்மரை சீராக்க 20 ஆயிரல் லஞ்சம் கேட்கும் மின் அதிகாரிகள்! விவசாயிகள் வேதனை!

டிரான்ஸ்பார்மரை சீராக்க 20 ஆயிரல் லஞ்சம் கேட்கும் மின் அதிகாரிகள்! விவசாயிகள் வேதனை!

  கே.ஏ.ஜெகதீஸ்வரி,

  ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரத்தில் 11வது நாளாக டிரான்ஸ்பாமர் பழுது காரணமாக மின்சாரம் இல்லை. இதனால் சுமார் 25 ஏக்கரில் ரூ. 7 லட்சம் முதலீட்டில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் தண்ணீர் இன்றி கருகி வருகிறது.

 இது குறித்து மின்வாரிய அதிகாரியிடம் அளிக்கப்பட்ட புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் செய்து வரும் மின்வாரிய துறையினர், மின்மாற்றியை புதுப்பிக்க ரூ. 20 ஆயிரம் லஞ்சம் கேட்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

   விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரத்தை சேர்ந்த முத்துராஜ், ராஜபூவேந்திரன், குருவையா உள்ளிட்ட 5 விவசாயிகள் இணைந்து புதுக்குளம் கண்மாய் பாசனத்தில் சுமார் 25 ஏக்கரில் விவசாயம் செய்து வருகின்றனர். பருவத்தில் நெல்லும், கோடையில் கிணற்று பாசனம் மூலம் காய்கறிகளும் சுழற்சி முறையில் பயிரிடப்பட்டு வருகிறது.

  இதில், வெண்டை, தக்காளி, சின்ன வெங்காயம், பீர்க்கங்காய், சம்மங்கி மற்றும் மக்கா சோளம் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.  சோளம் தவிர மற்ற காய்கறிகள் அனைத்தும் சுமார் 40 நாட்களுக்கு முன்னதாக நடவு செய்யப்பட்டுள்ளது.

  வெங்காயம், வெண்டை, சின்ன வெங்காயம் உள்ளிட்ட பயிர்கள் தற்போது சுமார் 70 சதவிகித வளர்ச்சியையும், பீர்க்கங்காய் மற்றும் தக்காளி ஆகிய பயிர்களில் பூ முற்றிய நிலையில் பிஞ்சு காய்கள் விளைந்து வருகிறது.

  இந்த நிலையில் கடந்த 11 நாட்களுக்கு முன்னதாக இந்த நிலத்திற்கு என ஒதுக்கப்பட்ட மின் மாற்றியில் பழுது ஏற்பட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர். இதனால் மின்சாரமின்றி விவசாயிகளால் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச இயலவில்லை. இதனால் பயிர்களில் வாடல் காரணமாக பூக்கள் கருகி கீழே விழுந்து வருகிறது.

  எனவே மின்மாற்றியை சரி செய்து மின்சாரம் வழங்க கோரி கிருஷ்ணாபுரம் மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். புகார் அளித்து 11 நாட்களுக்கு மேல் ஆகியும் தங்களுக்கு மின்சாரம் வழங்க அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை அதிகாரிகள் அலட்சியத்தால் பயிர்கள் வாடி வருகின்றன. என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

 புகார் குறித்து தினமும் விசாரித்தாலும், தாங்கள் அலைக்கழிக்கப்படுவதாகவும், மின் மாற்றியை சரி செய்ய அதிகாரிகள் தரப்பில் இருந்து ரூ. 20 ஆயிரம் லஞ்சம் கேட்பதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டினர். ஏற்கெனவே நிலத்தை பண்படுத்துதல், விதை, உப்பு, உரம் செலவு, நடுகை கூலி, பராமரிப்பு செலவு என ரூ. 7 லட்சம் வரை முதலீடு செய்யப்பட்ட நிலையில், திடீரென ரூ. 20 ஆயிரம் லஞ்சமாக கொடுக்க முடியாத நிலையில் உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

  பயிர்களை காக்க வேண்டி வேறு வழியில்லாமல் ரூ. 20 ஆயிரம் கடன் வாங்கி கொடுக்க முன் வந்தாலும், அதையும் பெற்றுக் கொள்ளாமல் மீண்டும் அலைக்கழிக்கப் படுவதாகவே விவசாயிகள் தெரிவித்தனர்.

   தற்போது தண்ணீர் இன்றி பயிர்கள் பாதிக்கும் மேல் வாடி விட்டது. 2 தினங்களில் தண்ணீர் பாய்ச்சவில்லை என்றால் காய்கறி பயிர்களுக்கு முதலீடு செய்த ரூபாய் 7 லட்சமும்  முழுவதுமாக வீணாகி விடும் என்பதால், தமிழக அரசும், மின்வாரிய துறை அதிகாரிகளும் கால தாமதமின்றி உடனடியாக மின்மாற்றியை சரி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுந்தர ராஜபுரம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.