துரைமுருகன் பெயர் போடாததால் பரபரப்பு! அரசு வேலையை நம்பி இருக்காதீங்க! பட்டமளிப்பு விழாவில் மத்திய அமைச்சர் பேச்சு!

ஜி.கே.சேகரன்,
மாணவர்கள் அரசு வேலையை மட்டும் நம்பாமல் ஸ்டார்ட் அப் இந்தியா ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டங்களிலும் தொழில்களை துவங்கி தொழில் முனைவோர்களாக வேண்டும் - நாட்டில் சுயதொழில்கள் பெருக்கத்தால் பொருளாதாரம் 6 சதவிகிதம் வளர்ச்சியடைந்துள்ளது மத்திய இணை அமைச்சர் வி கே சிங் பேச்சு.
வேலூர் மாவட்டம், காட்பாடி, சேர்க்காட்டில் உள்ள திருவள்ளூவர் பல்கலைக்கழகத்தில் 17- வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
தமிழக ஆளுநரும் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்ற இதில் மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சர்,வி.கே சிங்,மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி,பல்கலைக்கழக துணைவேந்தர் ஆறுமுகம் உள்பட பலர் பங்கேற்றனர்.
விழாவில் 417 முனைவர் பட்டங்கள் பெற்றவர்கள் உள்பட 564 மாணவ மாணவியர்களுக்கு ஆளுநர் ரவி வழங்கினார்.
பட்டங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் வி.கே.சிங்,பட்டங்களை பெற்றுள்ள மாணவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். கல்லூரி படிப்பை முடித்துள்ள நீங்கள் உலகில் பல சவால்களை எதிர்த்து போராட வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.நம் நாட்டின் வளர்ச்சியின் பாதையில் மாணவர்களின் பங்கு அதிக அளவில் இருக்க வேண்டும்.மாணவர்கள் தங்கள் இலக்கினை அடைய கடுமையான உழைப்பை பயன்படுத்த வேண்டும்.
தொழில் முனைவர்களாக மாறினால் தங்களின் வாழ்க்கை பிரகாசிக்கும்.தொழில் முனைவர்களாக போகும் இளைஞர்களுக்கு மத்திய அரசு பல்வேறு வகைகளில் உதவிகளை அளித்து வருகிறது, அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மத்திய அரசு பெண்களின் கல்வி முன்னேற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்களை நம்பியுள்ளது. இந்தியா மற்ற நாடுகளை விட சுய தொழில் துவங்குவதில் முதலிடத்தில் உள்ளது.இந்தியாவில் 61 வகையான தொழில்களுக்கு132 நாடுகள் இந்தியாவில் முதலீடு செய்துள்ளன.இதனால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகமாக காணப்படுகிறது.
கொரானா காலத்திற்குப் பின்பு இந்தியாவின் பொருளாதாரம் 6 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.எனவே மாணவர்கள் தங்களின் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.படித்த இளைஞர்கள் அனைவரும் அரசு வேலையை நம்பி இருக்க வேண்டாம்.
ஒட்டு மொத்தமாக நான்கு சதவீதம் அளவிற்கு அரசு துறையில் வேலை வாய்ப்புகள் உள்ளது. மீதமுள்ள 96 சதவீதம் தனியார் வேலை வாய்ப்புகள் உள்ளது.
2015 ஆம் ஆண்டில் இந்தியாவில் 428 சுயதொழில் நிறுவனங்களில் இருந்தன, அதன் பிறகு மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கையால், தற்பொழுது 80 ஆயிரம் சுய தொழில் நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளது. எனவே இளைஞர்கள் சுயதொழில் துவங்க முன்வர வேண்டும், இதற்கு மத்திய அரசு தேவையான உதவிகளை அளித்து வருகிறது.
ஸ்டார்ட் அப் இந்தியா ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டங்களிலும் தொழில்களை துவங்கி தொழில் முனைவர்களாக மாறலாம் அதற்கான நிதியினையும் மத்திய அரசு வழங்கி வருகிறது.
இதனால் நாட்டின் பொருளாதாரமும் 6 சதவிகிதம் உயர்ந்துள்ளது என அமைச்சர் பேசினார்.
முன்னதாக திமுகவினர் விழா அழைப்பிதழில் தொகுதியின் அமைச்சர் துரைமுருகன் பெயர் இடம்பெறவில்லை என திடீர் முற்றுகையில் ஈடுபட முயன்றனர். அவர்களை காட்பாடி டிஎஸ்பி பழனி- யின் உத்தரவின் பேரில் நிகழ்ச்சி நடக்கும் பகுதிக்கு செல்லவிடாமல் போலிசார் தடுத்தனர்.
இதனால் கொதித்த திமுகவினர், இந்த பல்கலைகழகத்தை கொண்டு வந்ததே எங்க அமைச்சர்தான். நாங்கள் வாக்குவாதம் செய்ய வரவில்லை. அழைபிதழில் ஏன் பெயர் போடவில்லை என்று ஆதங்கத்தில் கேட்கிறோம். எங்கள் அமைச்சர் எங்களை தப்பா வளர்க்கவில்லை என்று சொன்னார்கள்
பின்னர் காவல்துறை பேச்சுவார்த்தையை அடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.