திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி மீது திருப்பதியில் வழக்கு பதிவு! கலப்பட நெய்க்காக கோயில் ஊழியர்களிடம் பொன் வெள்ளி காசுகள் அபராதம்!

ம.பா.கெஜராஜ்,
திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி மீது திருப்பதியில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. .அதேபோல் கிருஷ்ணதேவராயர் காலத்தில் கலப்பட நெய்க்காக கோயில் ஊழியர்களிடம் பொன் வெள்ளி காசுகள் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் பற்றிய கல்வெட்டு செய்தியும் உள்ளன.
திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி நிறுவனம் மீன் எண்ணெய் மற்றும் பல்வேறு மிருகங்களின் கொழுப்பு போன்றவற்றை கலப்படம் செய்த நெய்யை வழங்கியதாக திருமலை திருப்பதி தேவஸ்தான மார்க்கெட்டிங் பிரிவு பொதுமேலாளர் முரளி கிருஷ்ணா நேற்று திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் மீது தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
தேவஸ்தானம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரில் தெரிவித்திருப்பதாவது, பத்து லட்சம் கிலோ தரமான நெய்யை சப்ளை செய்ய கடந்த மே மாதம் 15-ம் தேதி ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்துக்கு டெண்டர் மூலம் அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து ஜூன் 12, 20, 25 ஆகிய தேதிகளிலும், ஜூலை 6, 12 ஆகிய தேதிகளிலும் 4 டேங்கர் நெய்யை அந்நிறுவனம் அனுப்பி வைத்தது.
இதில் முந்தைய ஜெகன் அரசு, ஜூன் மாதம் அனுப்பிய நெய்யை பரிசோதிக்காமல் உபயோகித்தது. இதனால் பக்தர்களிடம் இருந்து பல புகார்கள் வந்தன.
இதையடுத்து ஜூலை மாதம் வந்த நெய்யை அதிகாரிகள் என்டிடிபி.க்கு அனுப்பி பரிசோதனை செய்ததில், அதில் கலப்படம் இருப்பது நிரூபணம் ஆனது. இதைத்தொடர்ந்து ஜூலை 22, 23, 27 ஆகிய தேதிகளில் திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதற்கு ஆகஸ்ட் 4-ம் தேதி ஏ.ஆர். டெய்ரி நிறுவனம் சார்பில் பதில் அளிக்கப்பட்டது. அதில், எங்கள் நிறுவனம் எவ்வித கலப்படமும் செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இருந்த போதும் கலப்பட நெய் என நிரூபணம் ஆகியிருப்பதால் தேவஸ்தான நிபந்தனைகளை மீறிய ஏ.ஆர். டெய்ரி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டது.
புகாரை பெற்றுக் கொண்ட திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தார் அதன் மீது பல்வேறு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.
கலப்பட நெய்க்கு காரணமான ஊழியர்களுக்கு என்ன தண்டணை என்பது பற்றின கல்வெட்டு குறிப்பு.
திருப்பதியில் இருந்து நெய்யை பாதுகாப்பாக திருமலைக்கு கொண்டு சேர்ப்பது பற்றியும் அதற்கான போக்குவரத்து பற்றியும், குறிப்பாக அரசர் காலத்தில் நெய்யை சரிவர பராமரிக்காமல் போன கோயில் ஊழியர்களுக்கும், அர்ச்சகர்களுக்கும் கொடுத்த தண்டனை விவரங்களும் கல்வெட்டுகளில் பதிவிடப்பட்டுள்ளன.
கி.பி 8-ம் நூற்றாண்டு முதல் 18-ம் நூற்றாண்டு வரை பொறிக்கப்பட்ட 1,150 கல்வெட்டுகளில் 600-க்கும் மேற்பட்டவை தமிழிலும், மற்றவை தெலுங்கு, சம்ஸ்கிருதம், கன்னட மொழிகளில் இருக்கின்றன.
அதில் ஸ்ரீ கிருஷ்ண தேவராயரும், தனது அரசிகளான திருமலா தேவி, சின்ன தேவியுடன் கோயிலுக்கு 7 முறை வந்துள்ளார். அப்போது சுவாமிக்கு அவர் பொற்காசுகளால் சுவர்ணாபிஷேகம் செய்துள்ளார்.மேலும் பிரசாதம் தயாரிக்கவும், நைவேத்தியங்கள் படைக்கவும் தங்க பாத்திரங்களை காணிக்கையாக வழங்கி உள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உள்ள மடப்பள்ளியை 'போட்டு' என்றழைக்கின்றனர். அந்த 'போட்டு' எப்படி சுத்தமாக இருக்க வேண்டும். பிரசாதம் எவ்வாறு தயாரிக்க வேண்டும். அதற்கான அளவு பற்றியெல்லாம் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரசாதம் தயாரிப்பதிலோ, கோயில் நிர்வாகத்திலோ தவறு செய்யும் ஊழியர்கள், அல்லது அர்ச்சகர்களுக்கு தண்டனையும், அபராதமும் கூட வழங்கப்பட்டுள்ளது. திருச்சானூரில் கோயில் ஊழியர்கள் மற்றும் அர்ச்சகர்களை வரவழைத்து, நெய் தரத்தை சரிபார்க்காதது, கோயில் விளக்கில் நெய் மற்றும் கற்பூரத்தை சரிவர பயன்படுத்தாதது தொடர்பாக குற்றச்சாட்டுகள் எழுந்ததால் அதற்காகவே ஒரு விசாரணைக் கூட்டம் நடத்தப்பட்டதை மேற்படி கல்வெட்டுகளில் பொறித்துள்ளனர்.
அப்ன்போது கலப்படம் செய்தது, பிரசாதம் விஷயத்தில் மெத்தனமாக செயல்பட்ட ஊழியர்களிடம் பொற்காசுகள், வெள்ளி காசுகள் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
அது மட்டுமின்றீ தவறிழைத்தவர்களை உடனடியாக கோயில் பணியில் இருந்து நீக்கினர்.ரிதெல்லாம் கல்வெட்டுகளில் தெளிவாக உள்ளது. ஆக தற்போது திருப்பதியில் எழுந்துள்ளலிந்த கலப்பட பிரச்சனையில் நெய் சப்ளை செய்த நிறுவனத்தையும், அப்போதைய அரசையும் குற்றவாளிகளாக பார்ப்பது போலவே இதற்கு ஊழியர்கள் எவரேனும் காரனமா என்பதையும் கண்டறிய தேவஸ்தானம் முற்பட வேண்டும் என்பது பக்தர்களின் அவா!