இஸ்லாமியர்கள் நடத்திய போராட்டம்! டெல்லி ஸ்தம்பித்தது!!

டி.முகமது இர்பான்,
நபிகள் நாயகம் இஸ்லாமியர்களின் இறை தூதுதர் என்கிற மத நம்பிக்கை கொண்ட விஷயத்தில் பா.ஜ.க.நிர்வாகிகள் நஞ்சை விதைத்துள்ளார்கள். ஆகவே நபிகள் நாயகத்தை இழிவுபடுத்த முயன்ற பாஜக தலைவர்களை கைது செய்ய வழியுறுத்தி இந்திய முழுவதும் பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் தற்போது டெல்லி தலைநகரே ஸ்தம்பிக்கும் அளவுக்கு இஸ்லாமியர்களின் போராட்டம் அமைந்தது.
பாஜகவின் நுபுர் சர்மா, நவீன் ஜிண்டால் இருவரும் டிவி மற்றும் சமூக வலைதளங்களில் இஸ்லாமியர்களின் இறைத்தூதரான நபிகள் நாயகம் குறித்து அவதூறான கருத்துகளை பேசி பதிவிட்டனர். இது மிகப் பெரும் சர்ச்சையாக வெடித்தது.
இதுவரை இல்லாத வகையில் பாஜகவினரின் இந்த விமர்சனம் தற்போது சர்வதேச விவகாரமாக வெடித்தது.
இஸ்லாமிய நாடுகள் பெரும்பாலும் பாஜக தலைவர்களின் கருத்துகளுக்காக இந்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இதனால் வளைகுடா நாடுகளுடனான இந்தியாவின் உறவில் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பாக மத்திய அரசு பல்வேறு விளக்கங்களை அளித்திருக்கிறது.
அத்துடன் பாஜகவில் இருந்து நுபுர் சர்மா தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். நவீன் ஜிண்டால் அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
ஆனாலும் இந்த விவகாரம் இப்போதைக்கு ஓய்வதாக இல்லை. இந்த நிலையில் நபிகள் நாயகம் குறித்த அவதூறுக்காக இந்திய தூதர் விளக்கம் அளிக்க மலேசியா அரசு சம்மன் அனுப்பியது.
மேலும் முஸ்லிம் சமூகத்தினரிடையே அதிருப்தியையும் கோபத்தையும் எற்படுத்தும் வகையில் பேசிய தலைவர்களை பாஜக நீக்கும் முடிவை மலேசியா வரவேற்கிறது.
அமைதியை ஏற்படுத்த, ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவர இந்தியா ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் மலேசியா கூறியிருந்தது.
இதனிடையே மலேசிய வெளியுறவு அமைச்சகத்தின் சம்மனை ஏற்று அந்நாட்டுக்கான இந்திய தூதர் பி.என்.ரெட்டி, நபிகள் நாயகம் அவதூறு சர்ச்சை குறித்து நேரில் சென்று விளக்கம் அளித்தார். அதில், பாஜகவினர் சொன்னது அரசின் கருத்து கிடையாது அனைத்து மதங்களையும் இந்திய அரசு உயர்வாகவே மதிக்கிறது. ஆதலால் இஸ்லாம் குறித்து அவதூறாக பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் பி.என்.ரெட்டி கூறி மலேஷியாவின் சம்மனுக்கு பதிலளித்துள்ளார்.
இருந்த போதும் இந்தியாவில் இஸ்லாமியர்கள் ஒன்று கூடி பல மாநில தலைநகரங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.