வேலை கிடைக்காத விரக்தி.. கலெக்டர் முகாம் அருகே இளைஞர் தற்கொலை!

வேலை கிடைக்காத விரக்தி.. கலெக்டர் முகாம் அருகே இளைஞர் தற்கொலை!

க.பாலகுரு,

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் முகாம் முன்பாக தூக்கில் தொங்கியவாறு இளைஞர் சடலம் கண்டெடுப்பு. திருவாரூர் தாலுகா போலீசார் தீவிர விசாரணை.

  கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பா.கிளனூரை சேர்ந்தவர் கொளஞ்சி மகன் தீபன்(19). ஐடிஐ பயிற்சி பெற்ற இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவாரூர் மாவட்டத்தில் வேலை தேடிச் செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து வந்துள்ளார்.

  கடந்த 8-ஆம் தேதி குடும்பத்தாருடன் தொலைபேசியில் பேசிய தீபன் வேலை கிடைக்காததால் வீட்டிற்கு வருவதாக தெரிவித்த நிலையில் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது.

  இதனிடையே சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தார் திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளனர். இது குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், நேற்று முன் தினம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் முகாம் எதிரே உள்ள பயன்பாடற்ற திட்ட இயக்குனர் முகாமில் துர்நாற்றம் வீசுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

   அதன் அடிப்படையில் அங்கு போலீசார் சோதனையிட்டபோது தூக்கில் தொங்கியவாறு இளைஞர் சடலம் கிடைத்துள்ளது. போலீசார் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர் விசாரணையில் உயிரிழந்தது தீபன் என்பது தெரிய வந்தது.

 மேலும் தீபனுக்கு திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நர்சிங் பயிலும் மாணவி ஒருவர் மீது ஒருதலை காதல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. வேலை கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது காதல் தோல்வியா? என்ற பல்வேறு கோணங்களில் திருவாரூர் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.