அம்பேத்கருக்கு மாலை மரியாதை செய்த முதல்வர் மற்றும் அமைச்சர்கள்!

ஜி.சாந்தகுமார்,
சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 133-வது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கிண்டி கவர்னர் மாளிகையில் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி அங்குள்ள தர்பார் அரங்கில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு அம்பேத்கர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அவர் அம்பேத்கரின் புகழ் மற்றும் அவரது சிறப்புமிக்க செயல்பாடுகளை விளக்கி பேசி பெருமைகளை நினைவு கூர்ந்தார்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் தமிழக அரசின் சார்பில் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு அங்குள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணி, சேகர்பாபு, கே.என்.நேரு, எம்.பி.பொன்முடி, விசிக தலைவர் தொல்.திருமாவளவன், காங்கிரஸ்கட்சியைச் சேர்ந்த செல்வபெருந்தகை, வழக்கறிஞர் பிரசண்ணா, மேயர் ப்ரியா, மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அ.தி.மு.க. சார்பில் சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டு அம்பேத்கரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினார்.
அதில்முன்னாள் அமைச்சர்கள், கட்சியின் முன்னணி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் அம்பேத்கர் பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் தி.நகரில் உள்ள கட்சியின் தலைமையகமான பாலன் இல்லத்தில் அம்பேத்கர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி எம்.எல்.ஏ. அம்பேத்கர் நினைவு மண்டபத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் எல்.ஐ.சி. வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
திராவிடர் கழகம் சார்பில் பெரியமேடு நேரு உள் விளையாட்டு அரங்கம் முன்பு உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் திராவிடர் கழக துணை தலைவர் கலிபூங்குன்றன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதே போன்று பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் இன்று அம்பேத்கர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.