'தங்கள் பணத்தை பெற்றுத் தர அண்ணாமலை நடவடிக்கை எடுக்கவேண்டும்' ஆருத்ராவில் பணம் இழந்தவர்கள் கடிதம்!

ம.பா.கெஜராஜ்,
'தங்கள் பணத்தை பெற்றுத் தர பாஜக தலைவர் அண்ணாமலை நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்' என்று ஆருத்ரா நிறுவனத்தில் பணம் இழந்தவர்கள் பா.ஜ.க.அலுவலகத்தில் கடிதம் கொடுக்க வந்தனர்.
இது பற்றின விவரம் வருமாறு,
ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் நிறுவனத்தில் அதிக லாபம் தருவதாக பொதுமக்களை ஏமாற்றி பல்லாயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த புகாரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதில் அந்த நிறுவனத்துக்கு சொந்தமான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், செங்கல்பட்டு, விருதுநகர், திருவண்ணாமலை, கடலூர், அரியலூர் ஆகிய 37 இடங்களில் ஆருத்ரா நிறுவனத்திற்கு சம்பந்தப்பட்டவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும், அதன் தொடர்ச்சியாக வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு இடங்களிலும் மொத்தம் 57 இடங்களில் பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
அதில் கிடைத்த ஆதாரப்படி ஆருத்ரா நிறுவனத்தில் 1,09,255 பேர், இந்நிறுவனங்களில் 2,438 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அதன் தொடர்புடைய நிறுவனங்களில் உரிமையாளர்களாகச் செயல்பட்ட 16 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அதில் பாஸ்கர், மோகன்பாபு, செந்தில்குமார், பட்டாபிராம், மைக்கேல்ராஜ், ஹரீஷ், பேச்சிமுத்துராஜ் என்ற ரபீக், ஐயப்பன், ரூசோ, நாகராஜ், மாலதி ஆகிய 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ளவர்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர். தலைமறைவாக உள்ள குற்றவாளிகள் குறித்து ஆதாரங்களுடன் தகவல் தெரிவித்தால் அவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என பொருளாதார குற்றப்பிரிவு அறிவித்துள்ளது.
இந்நிலையில், பா.ஜ.க. நிர்வாகியும், இயக்குநருமான ஹரிஷை 11 நாட்கள் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் காவலில் எடுத்து விசாரணை செய்தனர். விசாரணையில் ஹரிஷ் பாஜகவில் பொறுப்பு வாங்க முதலீட்டாளர்களிடம் மோசடி செய்த பணத்தைப் பயன்படுத்தி இருப்பதும், அந்தப் பணத்தை பாஜகவில் சிலருக்கு வழங்கி இருப்பதும் தெரியவந்துள்ளது.
பணம் பெற்றுக்கொண்டு பாஜக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த அலெக்ஸ் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டம் பாஜகவைச் சேர்ந்த சுதாகர் ஆகியோர் பதவி வாங்கிக் கொடுத்ததாக விசாரணையில் தெரியவந்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். குற்றஞ்சாட்டப்பட்ட இருவரையும் அசோக் நகரில் உள்ள பொருளாதாரக் குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. இதில் அலெக்ஸ் நேரில் வந்து விளக்கம் அளித்தார்.
மேலும், நிறுவனத்தின் இயக்குநரில் ஒருவரான மைக்கேல் ராஜிடம் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் ஏழு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மைக்கேல் ராஜ் பல திடுக்கிடும் தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் பாஜக நிர்வாகிகள் அதிகம் கைது செய்யப்படுவதால் பாதிக்கப்பட்டவர்கள், ’தங்கள் பணத்தை பெற்றுத் தர பாஜக தலைவர் அண்ணாமலை நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்’ எனக் கூறி மாநில கட்சித் தலைமை அலுவலகத்துக்கு புகார்க் கடிதம் கொண்டு வந்தனர்.
இதனை அறிந்த பாஜக நிர்வாகிகள் என்ன செய்வது என்று தெரியாமல் அவர்களை சமாதானம் செய்து, ’காவல்துறை அதிகாரியை சந்திக்க வேண்டும் என்றும் உங்கள் விளக்கத்தை கட்சி அலுவலகத்திற்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும் என்றும் இதை அரசியலாக மாற்றக் கூடாது’ என்று கூறியும் திருப்பி அனுப்பி வைத்தனர்.