உடும்பு வேட்டையாடியவர்களை வலைபோட்டுபிடித்த வனத்துறை!

கே.ஏ.ஜெகதீஸ்வரி,
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூதப்பாண்டி வன சரத்துக்கு உட்பட்ட ஆரல்வாய்மொழி தெற்கு மலைப் பகுதியில் இரண்டு பேர் உடும்பை வேட்டையாடுவதாக மாவட்ட வன அலுவலகத்திற்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. அந்த தகவலின் பேரில் மாவட்ட வன அலுவலர் இளையராஜா உத்தரவின் அடிப்படையில் வன அதிகாரி ரவீந்திரன் தலைமையில் வன ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
அப்போது அடர்ந்த காட்டுப்பகுதியில் வேட்டை நாயுடன் இரண்டு பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை வன ஊழியர்கள் மடக்கிப் பிடித்து பையை சோதனை செய்தனர். அப்போது இறந்த நிலையில் வேட்டையாடப்பட்ட உடும்பை அவர்கள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக இருவரை பிடித்து விசாரணை நடத்தியதில் நெல்லை மாவட்டம் அவரைக் குளம் பகுதியை சேர்ந்த மதன் மற்றும் மோகன் என்பதும், வேட்டை நாய்களை ஏவி தெற்கு மலைப்பகுதியில் உடும்பு வேட்டையாடி கொன்றதும் தெரியவந்தது.
இந்நிலையில் மதன் மற்றும் மோகன் இருவரையும் வன ஊழியர்கள் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து அவர்களை நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர் படுத்தினார்கள்.
அவர்கள் வேட்டைக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் மற்றும் ஆயுதங்களும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.