அமைச்சர்களிடையே புழங்கும் கருங்காலி மாலை! டிரெண்டிங்கோ டிரெண்டிங்!!

அமைச்சர்களிடையே புழங்கும் கருங்காலி மாலை! டிரெண்டிங்கோ டிரெண்டிங்!!

 ஜி.சாந்தகுமார்,

  சோசியல் மீடியா முழுவதும் ட்ரெண்டாகி வந்த கருங்காலி மாலை தற்போது அமைச்சர்களிடையேயும் புழக்கத்தில் வர தொடங்கியுள்ளது.

 பொதுவாக  இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் ருத்திராட்ச மாலை, துளசி மாலை, கருங்காலி மாலை என பல வற்றை அணிவதுண்டு. அப்படியிருக்க சமீப காலமாக கருங்காலி மாலைகள் குறித்த பதிவுகளும், விற்பனையும் சமூக வலைதளங்களில் களைகட்டி வருகிறது. கருங்காலி மாலை அணிவதால் செல்வம் சேரும் என்று யாரோ கிளப்பி விட அதனால் கருங்காலி மாலைகளின் விலையும் அதிகரித்துள்ளது. இதை பயன்படுத்தி போலி கருங்காலி மாலை விற்பனை அதிகரித்து வருகின்றன.

  இந்நிலையில், கருங்காலி மாலையைப்போலவே, செங்காலி என்கிற மாலையும் சந்தைகளில் நல்ல விற்பனையாகி வருகிறது. ஆனால் சோதிட சாஸ்திர நிபுணர்கள் கருங்காலி மாலை நேர்மறை ஆற்றலை அதிகரிக்குமே தவிர, செல்வ விருத்தி அளிக்காது என்றும் கூறி வருகின்றனர்.

  எனினும் இந்த கருங்காலி மாலை தற்போது சினிமா, அரசியல் வட்டாரங்களில் அதிகம் புழங்க தொடங்கியுள்ளது.

 இவ்வாறு இருக்க சென்னையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்து முடிந்த நிலையில் வெளியே வந்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சக அமைச்சரான கே.என்.நேரு கருங்காலி மாலை ஒன்றை அணிவித்தார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் உண்மையாகவே கருங்காலி மாலைக்கு ஏதாவது சக்தி உள்ளதோ? என்ற  மேலும் விவாதங்கள் எழுந்துள்ளது.