பாலாற்றில் மது அருந்த பார்..அகற்றக்கோரி  ஆட்சியரிடம் பா.ம.க. புகார்!

பாலாற்றில் மது அருந்த பார்..அகற்றக்கோரி  ஆட்சியரிடம் பா.ம.க. புகார்!

ஜி.கே.சேகரன்,

பாலாற்றில் தண்ணிர் ஓடுகிறதோ இல்லையோ மதுபானங்கள் ஓடிக்கொண்டிருக்கிறது. அய்யா சாமி இது சரியில்லீங்க, அங்குள்ள காரிய மேடையை பார் ஆக பயன்படுத்துகிறார்கள், நெடுஞ்சாலைக்கு அருகே இப்படிப்பட்ட அசிங்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று பலர் கூக்குரலிட்டாலும் அவை யாவும் செவிடன் காதில் ஊதிய சங்காகவே உள்ளது.

 இந்நிலையில் தான் இராணிப்பேட்டை பாலாற்றின் கரையருகே பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கக்கூடிய மதுபான கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும் அவ்வாறு செய்யாத பட்சத்தில் மக்களை ஒன்று திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடைபெறும் என எச்சரிக்கை செய்து மாவட்ட ஆட்சியரிடம் பாமக கட்சியினர் கோரிக்கை மனுவை வழங்கி உள்ளனர்.

 மாவட்ட செயலாளர் சரவணன் தலைமையில் அளிக்கப்பட்ட அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு இருப்பதாவது,    இராணிப்பேட்டை நகரம் உருவாவதற்கு காரணமாக விளங்கி வரும் வரலாறு சிறப்புமிக்க ராஜா ராணி நினைவு சின்னங்கள் மற்றும் இறந்தவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கக்கூடிய காரியமேடை அமைந்துள்ள பகுதி பாலாற்றின் அருகே அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது.

  அப்பகுதியில் மது பிரியர்களின் சமூக விரோத செயல்கள் அதிகரித்து வருவதாகவும் மேலும் போக்குவரத்திற்கு இடையூறாகவும் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் மது பிரியர்கள் தொடர்ந்து செயல்பட்டு வருவதை சுட்டிக்காட்டி அப்பகுதியில் இருந்து மதுபான கடையினை இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும்,

 அவ்வாறு செய்யாத பட்சத்தில் வருகின்ற காலங்களில் மிகப்பெரிய அளவில் மக்களை ஒன்று திரட்டி போராட்டம் நடைபெறும் என  அதில் தெரிவித்துள்ளனர்.

   இந்த மனுவை  பெற்று கொண்ட மாவட்ட ஆட்சியர் விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

  ஆட்சியர் நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவார்..ஆனால் டாஸ்மாக் மேலாளர் செங்கிஸ்கான் மனது வைப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.