பொய் சொல்லி பிரதமரை சந்தித்த பாஜக நிர்வாகி! பாதுகாப்புக்கு கேள்விக்குறியா?

பொய் சொல்லி பிரதமரை சந்தித்த பாஜக நிர்வாகி! பாதுகாப்புக்கு கேள்விக்குறியா?

 ம.பா.கெஜராஜ்,

   பிரதமர் மோடி தமிழகம் வந்த போது, பொய் காரணம் சொல்லி அவரை பாஜக நிர்வாகி சந்தித்தார். அதை நம்பி எக்ஸ் பதிவிலும் உருகினார் பிரதமர். இந்த விவகாரம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 கடந்த நான்காம் தேதி தமிழகம் வந்த பிரதமர் மோடியை வரவேற்க சென்னை விமான நிலையத்தில் இருந்து சாலை முழுவதும் தொண்டர்கள் சூழ்ந்தனர். அப்போது, அஸ்வந்த் பிஜய் என்ற பாஜக நிர்வாகி மோடியை விமான நிலையத்தில் சந்திக்க சிறப்பு அனுமதி பெற்றிருந்தார்.

  அனுமதிக்கப்பட்டபடி பிரதமரை சந்தித்த அஸ்வந்த் பிஜய், பிரதமரை பார்த்ததும் உருகியபடி என் மனைவிக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது. ஆனால் அவர்களைக்கூட நான் பார்க்க செல்லவில்லை, உங்களை பார்க்க வந்துவிட்டேன் என்று புல்லரிக்க சொன்னார்.

   அதைக்கேட்டு நெகிழ்ந்த பிரதமர் அஸ்வந்தை தட்டிக்கொடுத்து, முதல் அவர்களைப்போய் பார் என்று சொல்லி வாழ்த்து தெரிவித்து விட்டுச் சென்றார்.

  பின்னர் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு புறப்பட்ட பிரதமர் தமது எக்ஸ் பக்கத்தில் அஸ்வந்த் பற்றின ஒரு பதிவை வெளியிட்டார்.

 அதில் சென்னை விமான நிலையத்தில், நமது கட்சி நிர்வாகிகளில் ஒருவரான திரு.அஸ்வந்த் பிஜய் அவர்கள் என்னை வரவேற்க காத்திருந்தார். சற்றுமுன் தான், அவரது மனைவி இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார் என்றும், ஆனால் அவர் இன்னும் அவர்களை சந்திக்கவில்லை என்றும் என்னிடம் கூறினார். இந்த நேரத்தில் அவர் இங்கு வந்திருக்கக் கூடாது என்றும், அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆசிகளையும் தெரிவித்தேன்.

 நமது கட்சியில் கடமை மற்றும் அர்ப்பணிப்புள்ள உறுப்பினர்கள் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நமது கட்சியினரின் இத்தகைய அன்பையும் பாசத்தையும் பார்க்கும்போது நான் உணர்ச்சிவசப்படுகிறேன் என தெரிவித்திருந்தார்.

 பிரதமரின் பதிவைப் பார்த்த தமிழக பாஜகவினர் சிலர், அஸ்வந்த் பிஜய்யின் பின்னணி குறித்து விசாரித்தனர்.  அப்போது அவருடைய மனைவிக்கு குழந்தையே பிறக்கவில்லை என்று கண்டுபிடித்தனர்.

 அப்படின்னா பிரதமரை சந்தித்து பாப்புலர் தேடிக்கொள்ள வேண்டும் என்பற்காக அவர் இவ்வாறு பொய் சொல்லியிருக்கிறார். இதற்கு கரு.நாகராஜன் உள்ளிட்ட சிலர் தான் காரணம், சமூக விரோதிகள், குற்றப்பின்னணி கொண்டவர்களை அவர் இப்படி அழைத்து வந்து அறிமுகப்படுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

 தற்போது அஸ்வந்த் பிஜய் விவகாரம் பிரதமரின் பாதுகாப்புக்கே கேள்விக்குறியாக அமைந்துள்ளது என்றார்கள்.

 ஆனால் அதை மறுக்கும் கரு.நாகராஜன், நான் மட்டுமே இதற்கெல்லாம் அனுமதி பெற்றுவிடமுடியாது, கட்சியின் மாநில அளவிளான நிர்வாகிகளின் அனுமதி பெற்ற பிறகே இந்த சந்திப்பு நடந்தது என்று சொல்லியிருக்கிறார்.

 ஆனால் மனைவிக்கு குழந்தை பிறந்ததாக பொய் சொன்ன அஸ்வந்த் பிஜய் தற்போது தலைமறைவாகிவிட்டார். அவருடைய செல் போனையும் சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டார். மலையாளியான அவர் சென்னைக்கு எதற்கு வந்தார், அவர் பின்னணி என்ன என்பதை போன்ற விவரங்கள் தற்போது சேகரிக்கப்பட்டு வருகிறதாம்.

  இந்த விவகாரத்தில் உட்கட்சி உள்குத்து இருப்பதாலேயே இது பூதாகரமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.