சி.ஏ.ஏ. அமலுக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் ஐ.யு.எம்.எல். முறையீடு!

சி.ஏ.ஏ. அமலுக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் ஐ.யு.எம்.எல். முறையீடு!

ம.பா.கெஜராஜ்,

 குடியுரிமை திருத்தச்சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ள நிலையில் அதற்கு தடை விதிக்கக் கோரி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்) உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்திருக்கிறது. அதைப் போலவே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் முறையீடு செய்திருக்கிறது.

 குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 250 வழக்குகள் உள்ளன. இவையாவும் கடந்த காலங்களில் தொடுக்கப்பட்டவைகள் ஆகும். இவைகளில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தான் முதலில் வழக்கு போட்டது. ஆக, அந்த வழக்கே முதன்மையானது.

 இப்படி பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் மத்திய அரசு திடீரென விதிமுறைகளை வகுத்து சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இதை சுட்டிக்காட்டி ஐ.யு.எம்.எல். இன்று (மார்ச் -12) உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் சிஏஏ அமலாக்கத்துக்கு தடை கோரி முறையீடு செய்துள்ளது.

 அதில், ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாகவே தமது தரப்பில் சிஏஏ-வுக்கு தடை கோரப்பட்டதாகவும், ஆனால் அப்போது மத்திய அரசு அந்தச் சட்டத்துக்கான விதிமுறைகள் இன்னும் வகுக்கப்படவே இல்லை எனக் கூறி தடையாணை கிடைக்காமல் வழக்கை நகர்த்திக்கொண்டது. ஆனால், இப்போது இந்த சட்டத்தை அமலுக்குக் கொண்டு வந்துள்ளது.

 அதில் முஸ்லிம்கள் குடியுரிமை கோர இயலாத வகையில் சட்டத்தில் விதிமுறைகள் உள்ளதால் இச்சட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும். பல்வேறு வழக்குகளும் நிலுவையில் உள்ள நிலையில் முஸ்லிம்கள் பாதிக்கப்படாமல் இருக்க தடை வேண்டும் என்று கோரியுள்ளது.

 இந்தச் சட்டத்தை எதிர்க்கும் மனு குறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தரப்பு வழக்கறிஞர்கள் ஹரீஷ் பீரன், பல்லவி பிரதாப் ஆகியோர், "மனுதாரர் இந்த சட்டத்துக்கு முன்னரே தடை கோரியிருந்தார். ஆனால், அப்போது மத்திய அரசு சட்டத்துக்கான விதிமுறைகள் இன்னும் வகுக்கப்படவில்லை என உச்ச நீதிமன்றத்தில் கூறியது. அதனால், அமலுக்குக் கொண்டு வரப்படாது எனவும் கூறியிருந்தது. இந்த ரிட் மனுக்கள் நான்கரை ஆண்டுகளாக தேங்கியுள்ளன".

  அதே போல், மதத்தின் அடிப்படையில் பாகுபாடு இருக்கிறது. இதன்மூலம் மதச்சார்பின்மை என்ற அரசியல் அமைப்பின் அடிப்படை கோட்பாடே காணமல் செய்யப்பட்டிருக்கிறது. எனவே நீதிமன்றம் இந்தச் சட்டம் அமலாக்கப்படுவதை முடக்கிவைக்க வேண்டும். இச்சட்டத்தின் விதிமுறைகள் அப்பட்டமாக அரசமைப்புக்கு எதிரானதாக இருக்கின்றது.

 சமூக நன்மையைக் கருத்தில் கொண்டு நீதிமன்றம் இவ்விவகாரத்தில் தனது முடிவை இறுதி செய்யும் வரை இச்சட்டத்துக்கு அதன் விதிமுறைகளுக்கு தடை விதிக்க வேண்டும்" என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 இதேபோல், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக மனு தாக்கல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 இந்தச் சட்டத்துக்கு தடை கோரி முறையீடு செய்துள்ள மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டால், சிஏஏ நடைமுறைக்கு தடை ஏற்படக்கூடும்.