பெகாசஸ் உளவு செயலி பிரச்சனை: மூன்று பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

பெகாசஸ் உளவு செயலி பிரச்சனை: மூன்று பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

 பா.ரமேஷ் ஆனந்தராஜ்,

 இந்திய அரசியலை உலுக்கிய பெகாசஸ் உளவு செயலியால் எழுந்த பிரச்சனைக் குறித்து பத்திரிகையாளர் சிலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

 அந்த வழக்கின் மீதான தீர்ப்பு இன்று வெளியானது. அதில் பெகாசஸ் விஷயத்தில் உரிய விசாரணை நடத்த வேண்டுமென உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

 அரசியல் கட்சி பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள்,  என பலரது செல்போன் உரையாடல்களை பெகாசஸ் என்னும் செயலி மூலம் மத்திய அரசு ஒட்டுக்கேட்டது என்ற பிரச்சனை சில மாதங்களுக்கு முன்பு பூதாகரமாக வெடித்தது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கேள்விகள் எழுப்பப்பட்டன.

 பெகாசஸ் உளவு விவகாரத்தில் சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிடக்கோரி பத்திரிகையாளர் சிலரால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணை கடந்த 13-ந்தேதி முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அப்போது பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம் குறித்து விசாரணை நடத்த முன்னாள் நீதிபதி ஆர்.வி. ரவீந்திரன் தலைமையில் 3 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்து உத்தரவிட்டது.

 மேலும், இந்த குழு 8 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இந்த குழு உச்சநீதிமன்றம் மேற்பார்வையில் இயங்கும் எனவும் தீர்ப்பளித்தது.

  மத்திய அரசுக்கு போதுமான காலஅவகாசம் கொடுக்கப்பட்டும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவில்லை. தேச பாதுகாப்பு என்ற வளையத்தில் மத்திய அரசு தப்பிக்க முடியாது என்ற கருத்தையும் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பாக தெரிவித்துள்ளது.